கீரை வகைகள் வெந்தயக்கீரை 4மரபு விக்கி இருந்துவெந்தயக் கீரை: வயிற்று வலி, குடல் புண், வயிற்றுக்கடுப்பு போன்றவைக்கு நல்லது. உயிர்ச்சத்து ஏ அதிக அளவில் உள்ளது. கண் பார்வைக் கோளாறை நீக்கும். இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கூடவே இருப்பதால் அனைவருக்கும் நல்லது. முக்கியமாய் வளரும் குழந்தைகளுக்கு, மூல நோய் இருப்பவர்களுக்கு, அதிகமாக வெள்ளை படும் பெண்களுக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலுவையும் ஊட்டும்.
இதைப் பயிராக்குவதும் எளிது. வெந்தயத்தை எடுத்துக்கொண்டு சிறிது நீர் தெளித்து ஓர் இரவு முழுதும் வைக்கவும். மறுநாள் அதை ஒரு தொட்டியிலேயோ, அல்லது தோட்டத்திலேயோ விதைக்கவும். ஓரிரு நாட்களில் முளை வந்துவிடும். நான்கு அல்லது ஐந்து அங்குலம் செடி வளர்ந்ததுமே அவற்றைப் பறிக்கலாம். தேவை எனில் மேலும் வளரவும் விடலாம். வெந்தயக் கீரையில் இருக்கும் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் தலை மயிர் வளரவும் உதவி செய்கிறது. வெந்தயக்கீரையை அரைத்துச் சாறோடு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தொடர்ந்து தலைக்குத் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளித்தால் மயிர் அடர்த்தியாக வளரும். தலையில் இருக்கும் சூடும் தணியும்.
வெறும் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு காலை வெறும் வயிற்றில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். வெந்தயக்கீரையைப் பல விதங்களில் சமைக்கலாம். வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு பருப்போடு சேர்த்துக் கூட்டு செய்யலாம். அப்படியே நறுக்கி சாம்பாரில் போடலாம். உருளைக்கிழங்கோடு சேர்த்துச் சமைக்கலாம். வெந்தயக்கீரை புலவ் செய்யலாம், வெந்தயக்கீரை ரொட்டி செய்யலாம். அவற்றை சமையல் குறிப்புகளில் பார்ப்போம். முதலில்
வெந்தயக்கீரைப் புலாவ். தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை ஒரு கட்டு, நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வடிகட்டி நறுக்கிவைத்துக்கொள்ளவும். ஊற வைத்து முளைகட்டிய பச்சைப் பயறு ஒரு சிறு கிண்ணம், தக்காளி, வெங்காயம் ஆகியவை தலா ஒன்று நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதைத் தவிர ஒரு சிறிய தக்காளி, 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், (பூண்டு 2 பல் தேவையானால்,) இஞ்சி ஒரு துண்டு போட்டு நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாப் பொடி. அரிசி இரண்டு கிண்ணம் உதிர் உதிராக வடித்து எடுத்துக்கொள்ளவும். வதக்க எண்ணெய் அல்லது நெய். ஒரு கரண்டி. இரண்டு கிராம்பு, இரண்டு பெரிய ஏலக்காய். இலவங்கப்பட்டை ஒரு துண்டு. உப்பு தேவையான அளவு.
கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டுக் கொண்டு அதில் இலவங்கம், இலவங்கப் பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதிலே பச்சைமிளகாய், இஞ்சி விழுதையும் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியையும், பச்சைப் பயறையும் சேர்க்கவும். பச்சைப் பயறு கொஞ்சம் வெந்ததும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையைச் சேர்க்கவும். வெந்தயக்கீரை நன்கு வதங்கிச் சேர்ந்ததும், தேவையான உப்பைச் சேர்த்துச் சற்று நேரம் கிளறவும். நன்கு வதங்கியதும், அதிலே சாதத்தைப் போட்டுச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சூடாகத் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.
வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு பிரட்டல்: உருளைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயக்கீரை ஒரு கட்டு, வெங்காயம். குடை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி ஒன்று, கரம் மசாலாத் தூள், தாளிக்க எண்ணெய், கடுகு, ஜீரகம், சோம்பு.
வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கிக் கழுவிக்கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் வைக்கவும். இம்முறையில் வெந்தயக்கீரையின் கசப்புச் சுவை குறையும். உருளைக்கிழங்கைத் தோல் சீவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயையும் பொடியாக நறுக்கவும். வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக்காய்ந்த பின்னர் கடுகு, சோம்பு, ஜீரகம் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் குடைமிளகாயைச் சேர்க்கவும், வதங்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்துச் சற்று வதக்கவும். உருளைக்கிழங்கு கையால் நசுங்கும் பதம் வந்த பின்னர் வெந்தயக்கீரையையும், தக்காளியையும் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கி எல்லாம் ஒன்றாக வந்ததும் கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கீழே இறக்கவும். புல்கா ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள தக்க துணை.
வெந்தயக்கீரை ரொட்டி: வெந்தயக்கீரை இரண்டு கட்டு, மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயப் பொடி தேவையானால். ஜீரகம்,ஓமம், சோம்பு மூன்றில் ஏதேனும் ஒன்று அல்லது மூன்றுமே சிறிதளவு. மூன்றும் சேர்ந்து ஒரு டீஸ்பூன் இருந்தால் நலம். வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் வைக்கவும். எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் சுட வைத்து விடுவதற்கும், ரொட்டியைச் சுட்டு எடுக்கவும் தேவையான அளவு.
கோதுமை மாவு மூன்று கிண்ணம் என்றால் ஒரு கிண்ணம் கடலை மாவு. வடமாநிலங்களில் ஐந்து கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ கடலைப்பருப்பைப் போட்டு அரைத்தே வைத்துக்கொள்வார்கள். அது பிடித்தம் எனில் அப்படி வைத்துக்கொள்ளலாம். இல்லை எனில் மூன்று பங்கு கோதுமை மாவுக்கு ஒரு பங்கு கடலைமாவு என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளவும்.
கோதுமை மாவு, கடலை மாவு இரண்டையும் நன்கு கலந்து கொண்டு, அதில் நறுக்கி வைத்த வெந்தயக்கீரையையும், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஜீரகம், ஓமம், சோம்புக் கலவையையும் சேர்க்கவும். சேர்த்த மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணையை நன்கு காய்ச்சி மேலே ஊற்றவும். எண்ணெய் முழுதும் மாவில் படுமாறு நன்கு கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாய் நீர் ஊற்றிச் சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவைச் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அடுப்பில் நான் ஸ்டிக் தவா அல்லது தோசைக்கல்லைப் போடவும். சப்பாத்தி மாவினால் வெந்தய ரொட்டி தயாரித்துக்கொள்ளவும். அதை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நன்கு வேகவிட்டு எடுக்கவும். சூடாகச் சாப்பிடவும்.
சைட் டிஷாகப் பச்சடி எதுவானாலும் நன்றாக இருக்கும். தயிர் கெட்டியாக இரண்டு கிண்ணம். பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்புக் கலந்து தனியாக வைத்துவிட்டுச் சாப்பிடுகையில் தயிரில் போட்டுக் கலந்து கொள்ளலாம். அல்லது காரட் துருவல், வெள்ளரித் துருவல் போன்றவையும் போடலாம். தக்காளியைப் பச்சையாகவோ, வதக்கியோ தயிரில் சேர்த்தும் சாப்பிடலாம். வெந்தய ரொட்டியிலேயே காரம் இருக்குமாதலால் மேற்கண்ட முறையில் சாப்பிடலாம். சிலருக்குக் காய்கள் வேண்டுமென்றால் வெண்டைக்காய், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கித் தொட்டுக்கொள்ளலாம்.
கால் கிலோ வெண்டைக்காய், பெரிய குடைமிளகாய் ஒன்று, பெரிய தக்காளி ஒன்று. உப்பு தேவையான அளவு, தாளிக்க வதக்கப் போதுமான எண்ணெய், கடுகு, ஜீரகம், சோம்பு. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள். பெருங்காயப் பொடி, கரம் மசாலாப் பொடி தேவைப்பட்டால்.
வெண்டைக்காய், குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, ஜீரகம், சோம்பு தாளித்து வெண்டைக்காயைப் போட்டுச் சிறிது வதக்கவும். பின்னர் குடைமிளகாய் சேர்த்துக் கொஞ்சம் வதக்கிவிட்டுப் பின்னர் தக்காளி சேர்க்கவும். சற்று வதங்கிய பின்னர் தேவையான உப்புடன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
--Geetha Sambasivam 04:25, 24 ஆகஸ்ட் 2011 (UTC) |

