சிங்கை கிருஷ்ணன்
ஆழ்வார்கள் ஏற்றிய திருக்கார்த்திகை தீபவிழா சைவகளுக்கு மட்டுமல்ல.வைவணர்களும் போற்றி வழிபாடு செய்யும் விழாவாகும். பொய்கை ஆழ்வார்,பேயாழ்வர்,,பூத்தாழ்வார் ஆகிய மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று வைவணம் கொண்டாடும்.. திருக்கோவலூர் 108 வைணவத் தலங்களுள் சிறப்பிடம் பெற்றது..
மகாபலிச் சக்கரவர்த்தியின் கவர்வத்தைப் போக்க திருமால் திரிவிக்ரமனாக, உலகளந்த பெருமாளாகத் தரிசனம் தந்தத் தலம் திருகோவலூர். இங்கேதான் முதல் ஆழ்வார்களாகிய
பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார்,பேயாழ்வார் ஆகிய மூவருக்கும் திருமால் உலகளந்த கோலத்தில் காட்சி அளித்தார்.
அப்போது உலகளந்த பெருமானை ஞானத்தமிழ் விளக்கை ஏற்றி முதல் ஆழ்வார்கள் போற்றி வழிபாடு செய்தனர். பொய்கை ஆழ்வார் பாசுரம்.
வையம் தகளியாக வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
ஞானத் தமிழ் நீங்குகவே என்று .......
பூதத்தாழ்வார் ஞானத்தமிழ் விளக்கு.
அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா நண்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நாள்.
(தகளி = அகல்விளக்கு)
பேயாழ்வார் ஏற்றிய ஞானதீபம்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
இவ்வாறாக ஒளிவடிவினனாக இறைவனைப் போற்றும் திருக்கார்திகை நாளை தமிழர்கள் இல்லம் தோறும் விளக்கேற்றி கொண்டாடுகிறார்கள்.
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், குகை நமைசிவாயார், அருணகிரி, வள்ளலார் என திருவண்ணாமலையைப் பாமழை பொழிந்து வழிபட்டோர் பட்டியல் மிகவும் நீளமானது.
திருவண்ணாமலையை அடுத்த ‘அடி அண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை,
திரு அம்மானை ஆகிய பாடல்களைப் பாடினார்.
சைவ எல்லப்ப நாவலர் என்ற பெரும் புலவர் ‘அருணாசலப் புராணம்’ எழுதியுள்ளார்.
அதில் உள்ள உண்ணாமுலை அம்மை பற்றிய அற்புதப் பாடல் :-
‘கார் ஒழுகும் குழலாளை,கருணை வழிந்து
ஒழுகும் இரு கடைக் கண்ணாளை
மூரல் இள நிலவு ஒழுக புழுகு ஒழுக,
அழகு ஒழுகும் முகத்தினாளை
வாரல் ஒழுகும் தனத்தாளை வடிவு ஒழுகித்
தெரியாத மருங்குழ லாளை
சீர் ஒழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை சேர்ப்போம்’
புராணிகர் சோணாசல முதலியார் என்னும் பெரும்புலவர் திருவண்ணாமலை தீபம் பற்றிக் கார்த்திகை தீப வெண்பா படைத்துள்ளார்.
‘கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையின்
பண்பாரும் கார்த்திகை தீபம்.
இப்பாடலில், உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்றதையும், பிரம்மாவும், திருமாலும்அடிமுடி தேடிய நிகழ்வையும் கோட்டிக் காட்டியுள்ளார் புலவர்.
கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கிருத்திகை பிரதோஷ நேரத்தில் மலை மேல் சிவனின்சோதி தரிசனம் கண்டு வணங்கி, சிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி. அப்படிஅன்னை உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற இடம் பவழக்குன்றுப் பகுதி. பகவான் ரமணர், சில காலம் பவழக்குன்றில் தங்கித் தவம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கண்டங் கரிய மலை கண்மூன்று உடைய மலை
அண்டர் எலாம் போற்றற் அரிய மலை - தொண்டர்க்கு
தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணாமலை !
அண்ணாமலை வெண்பா பாடிய குரு நமசிவாயாரின் பிரதமச் சீடரே குகை நமசிவாயர் என்பதும் அறியத்தக்கது.
எத்தனை எத்தனை தீபங்களோ.....!
அவை :-- மகா தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப் தீபம், புருஷா மிருக தீபம், ஓல தீபம், கமடதி தீபம், கனி தீபம், வியானர தீபம், சிம்ம தீபம், மேரு தீபம், துலஜ தீபம், மயூர தீபம், நட்சத்திர தீபம்.
- நிறைவு-
அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:21, 2 டிசம்பர் 2011 (UTC)