காரடையான் நோன்புக் கொழுக்கட்டை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கொண்டாடப் படும் ஒன்று.   அதற்கு நிவேதனமாகச் செய்யப்படும் கொழுக்கட்டைகளைச் சிலர் அடை என்றும் சொல்வார்கள். அதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.முதலில் 
வெல்லக் கொழுக்கட்டைக்கு:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம்

அரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து கல்லரித்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் நீரை வடித்து அரை மணி வைக்கவும். அதன் பின்னர் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும்.  சலிக்கணும்னு கட்டாயம் இல்லை.  கொஞ்சம் கொரகொரப்பு இருக்கலாம்.  பிடிக்காதவங்க சலிச்சு எடுத்துக் கொண்டு நைசாக இருக்கும் மாவை வெல்லக் கொழுக்கட்டைக்கும், கொர, கொரப்பாக இருப்பதை உப்புக்கும் வைச்சுக்கலாம். பொதுவாக இந்த நோன்புக்கு மிஷினில் கொடுத்து திரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் இப்போது சிலர் தயாராகக் கிடைக்கும் அரிசி மாவையோ அல்லது மெஷினில் கொடுத்து அரைத்தோ பயன்படுத்துகின்றனர்.  இது அவரவர் விருப்பம்.

மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறும் வாணலியில் போட்டுக் கோல மாவு பதம் வரும் வரை வறுக்கவும்.  ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற வைக்கவும்.

வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம்

தேங்காய் மூடி ஒன்று, பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.

காராமணி அல்லது முழுத் துவரை  இரண்டு டேபிள் ஸ்பூன்.  முதல் நாளே ஊற வைத்துக் களைந்து கல் அரித்துக் கொஞ்சம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நீர் தேவையான அளவு.


ஒரு வாணலி அல்லது வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்க விடவும்.  ஏற்கெனவே வேக வைத்துத் தனியாக வைத்திருக்கும் காராமணி/துவரையைச் சேர்க்கவும். வெல்லத் தூளையும் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  பின்னர் வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொண்டே வரவும்.  தேங்காய்க் கீற்றுக்களையும் சேர்க்கவும்.  நன்கு கிளறி மாவு கெட்டிப் பட்டு சுருண்டு வருகையில் கீழே இறக்கி ஏலப் பொடியைச் சேர்த்து ஆற விடவும்.  இது கொஞ்சம் ஆறட்டும்.  அதுக்குள்ளே நாம,

இப்போது அடுத்து உப்புக் கொழுக்கட்டைக்கான முறையைப் பார்க்கலாம்.

மாவு முன் சொன்ன முறையில் தயாரித்து ஆற விடவும்.  இதற்கும் காராமணி//துவரை தேவை.  ஆகவே முன் சொன்னாற்போல் வெல்லக் கொழுக்கட்டைக்கு வேக விடுகையில் இதற்கும் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்க் கீற்றும் அப்படியே.  வெல்லத்துக்கும், இதற்கும் சேர்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

சமையல் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உ.பருப்பு

க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் அவரவர் ருசிக்கு ஏற்ப மூன்றிலிருந்து நான்கு

கருகப்பிலை

பெருங்காயம்

உப்பு

அடி கனமான வேறொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பருப்பு வகைகளைப் போட்டுத் தாளித்துக் கொண்டு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், பெருங்காயம் சேர்க்கவும். இரண்டு கிண்ணம் நீரை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  நீர் கொதிக்கையில் வெந்த காராமணி/துவரையைச் சேர்க்கவும்.  வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும்.  விரைவில் மாவு கெட்டிப்பட்டு உருண்டு திரண்டு வந்துவிடும்.  கீழே இறக்கி ஆற வைக்கவும்.

இப்போது ஒரு இட்லிக் கொப்பரை அல்லது வாணலியில் ஒற்றைத் தட்டில் வாழை இலையை எண்ணெய் தடவிப் பரப்பவும். , முதலில் வெல்லக் கொழுக்கட்டை மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஒரு சின்ன குழி செய்து இட்லிக் கொப்பரையில் இருக்கும் வாழை இலையில் வைக்கவும். ஒரே சமயம் இம்மாதிரிப் பத்துப் பதினைந்து அடைகள் செய்து வேக வைக்கலாம்.  குறைந்தது வாழை இலை பரப்பிய அந்தத் தட்டுக் கொள்ளும் அளவுக்கு வைக்கவும்.  பின்னர் மூடியால் மூடிவிட்டு ஐந்திலிருந்து பத்து நிமிஷம் வரை வேக வைக்கவும். திறந்து பார்த்தால் மேலே வேர்த்து விட்டிருக்கும்.  வெளியே எடுத்து  ஆற விடவும்.  எல்லா மாவையும் இதே போல் செய்யவும்.

இதே போல் உப்புக் கொழுக்கட்டை மாவையும் வடை போல் தட்டி நடுவில் குழி செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

--Geetha Sambasivam (பேச்சு) 12:18, 4 ஜூன் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2014, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,007 முறைகள் அணுகப்பட்டது.