டி.எஸ்.தியாகராசன்
இன்றைய நாளில் ஆடவரும், பெண்டிரும் தத்தம் இளம் பருவத்தில் காதல் புரிந்து திருமணம் செய்து கொள்வது அதிகமாகி வருவதை நாம் காண்கிறோம். நவீன யுகத்தில் ஜாதி, மதம், நாடு, மொழி, தகுதி என்ற பாகுபாடுகள் நெகிழ்ந்து வருவதாலும், ஊடகங்களில், பத்திரிகைகளில், கதைகளில், கவிதைகளில் வரும் செய்திகளின் வலிமையாலும் காதல் திருமண விகிதம் உயர்வது இயல்பாகி வருகிறது.
ஆனால், எதனாலோ மனம் ஈர்க்கப்பட்டு, மனம் ஒன்றிப் பழகியவர்கள் சட்டப்பூர்வ திருமணம் வரை சென்று பெற்றோர்களுக்குத் தெரியாமல் தனித்து வாழ்ந்த சில காலத்திலேயே இருவரும் மனம் அமைதியிழந்து மணமுறிவுக்குத் தயாராகி வருகின்ற விகிதமும் உயர்ந்து வருகிறது.
தமிழர் வாழ்வில் பன்னெடுங்காலமாக,
என்ற இம்மூன்றும் பின்னிப் பிணைந்து வரும் இயற்கையான குணநலங்கள்.அன்றைய நாளில் தலைவனும், தலைவியும், காதலிக்கத்தான் செய்தார்கள்.
- களவு மணமும்
- கற்பு மணமும்
வழக்கத்தில் இருந்தன.
எனினும், ஒன்றிய உள்ளங்கள் விரைவில் ஒடிவதில்லை. முறிவதும் இல்லை.சங்ககால காதல் காட்சி ஒன்றில்,
- காதலின் மன உறுதி
- காதலன் பால் கொண்டிருக்கும் நம்பிக்கை
இவற்றைக் காதலி வாயிலாகப் புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன் நமக்கு ஒரு குறும்படமாகவே படைத்திருக்கிறார்.
களவு மணம் புரிந்த தலைவன் ஒருவன் பொருள் தேடி வர எண்ணி, தலைவிக்குத் தக்கவாறு உறுதிமொழி பகன்று புலம் பெயர்கிறான். அவன் குறித்த காலம் கடந்தது. தலைவன் தந்த உறுதிமொழி வண்ணம் வந்தானில்லை. தலைவியின் தோழி கலக்கமுற்றாள். ஏனெனில், அத்தோழிதானே களவு மணம் நிகழ உடனிருந்து உதவியவள்.
தலைவியைச் சினந்து, அவள் அவனால் ஏமாற்றப்பட்டதை எண்ணி வருந்திக் கூறலானாள், "உனது மனம் கவர்ந்த அந்தக் கள்வன் உன்னிடத்தில் அன்புடையவன் இல்லை. அறநெறியில் பற்றுறுதி உடையவனும் இல்லை. ஏனோ அவனிடத்தில் உள்ளம் செலுத்தினாய்! உன் அவலத்தை, பேதமையை எண்ணி வருந்துகிறேன்" என்கிறாள். தலைவிக்கு வந்ததே கோபம். தோழியை வெகுண்டாள். தலைவனின் உறுதி பற்றியும், அவனின் நல்லியல்புகள் குறித்தும் விரித்துரைக்கத் தொடங்கினாள்.
"என் நலம் பற்றும் தோழியே! குளிர்ச்சியான, வெண்மையான திங்களில் "சிவந்த தீயை" எப்போதாவது, யாரேனும் கண்டனரோ? இல்லையே! அப்படித் திங்களில் "செந்தீ" உண்டாகுமாயின் என் தலைவனிடத்தும் உள்ள உண்மையில் பொய் இருக்கும். அவரையே பற்றுக்கோடாக எண்ணும் எவர்க்கும் அளிக்கும் அவனது உறுதிமொழி பொய்மையாகுமோ? எம் தலைவனே இவண் வருவான்.குளிர் நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த இடத்தில் உள்ள ஒரு நீர் நிலையில் அதன் மேற்பரப்பில் குவளை மலர் ஒன்று பூத்திருக்கிறது. இவ்வழகிய மலர் வெப்பத்தின் தன்மையால் குவளை வெந்து வாடும், கருகிவிடும் என எண்ணுபவர் யார்? ஒருக்கால் அம்மலர் கருகிடுமேயானால் எம் தலைவன் வராது ஒழிவான் என்பதும் உண்மை. ஞாலத்தை தன் ஒளிக்கற்றைகளால் உயிரூட்டும் கதிரவனிடத்து கருமை இருள் தோன்றுமோ? இங்ஙனம் ஞாயிற்றின் ஊடே இருள் தோன்றி ஒளி குன்றுமாயின் அன்புத் தலைவனும் எனை மறந்தான்!"
எனவே, இனி நம் தலைவனை இழித்தோ, பழித்தோ கூறுவதை துறப்பாயாக" என்றாள் தலைவி. களவு மணம் கொண்ட தலைவனின் மனத்திட்பத்தையும், வினைத்திட்பத்தையும், வெகு நுட்பமாக இயற்கையோடு இயைந்து வாதிடும் அன்றைய நாள் தலைவி எங்கே?
கண்டதும் காதல், கொண்டதும் திருமணம், காலையில் பிணக்கு, மாலையில் மணவிலக்கு என்றிடும் இற்றை நாள் செய்தி எங்கே?
"காதல் செய்வீர்" என்றான் மகாகவி பாரதி. ஒவ்வொரு காதலனும், காதலியும் முதலில் சங்க இலக்கியம் படிக்க வேண்டும். கண்ணீரில் கரையும் காதலாய் இல்லாமல், மனம் வெதும்பும் மணமாய் நில்லாமல், காலம் காலமாய் கற்பு நெறியோடும், களிப்போடும் வாழ்வாங்கு வாழுங்கள். குறிஞ்சிப் புலவனின் அந்த இனிய குறும்படத்தை கலித்தொகைப் பாடல்களால் காண்போம்.
"பொய்த் தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?"
அஞ்சல் ஓம்பு" என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்றகல் நன்னாடன் வாய்மையின் பொய்தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று (கலி.பா.வரி:21 - 24)
"வாரா தமைவனோ? வாரா தமைவனோ?
வாரா தமைகுவான் அல்லன் மலைநாடன்,
ஈரத்துள் இன்னவைதோன்றின், நிழல் கயத்து
நீருள் குவளை வெந்தற்று (கலி.பா.வரி:28 - 31)
"துறக் குவன் அல்லன் துறக்குவன் அல்லன்
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று. (கலி.பா.வரி:36 - 39)
நன்றி:- தினமணி