கல்விக்கு ஏங்கும் குழந்தை தொழிலாளர்களை கொஞ்சம் படிக்க விடுங்க'மரபு விக்கி இருந்துகல்விக்கு ஏங்கும் குழந்தை தொழிலாளர்களை கொஞ்சம் படிக்க விடுங்க' ருவறையைவிட்டு வெளியேறும் குழந்தையின் முதல்தேவை உயிர்வாழ உணவு. அடுத்த தேவை அதன் உயர்வுக்கான கல்வி. அறியாமை இருள் நீங்கினால்தான், ஒருநாடு ஒளிமயமாக இருக்கும். இளமைக் காலத்தில் வளமான கல்விக்குப் பதில், வறுமை கொடுமையில் வாழ்க்கை பாரத்தை சுமந்தால், அந்நாடு முன்னேற்றம் காண முடியவே முடியாது. எனவே குழந்தை தொழிலாளரே இல்லை என்ற நிலையை உருவாக்குவது அரசின் கடமை. கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. எனவே கல்விக்காக ஆயிரமாயிரம் கோடிகளை கொட்டுகின்றன மத்திய, மாநில அரசுகள். இருந்தும் கல்விச் சாலைக்கு செல்ல வேண்டிய சிறுவர்கள் கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். அபாயகர பணிகளையும் ஏற்று, தங்கள் உயிருக்கே உலை வைக்கின்றனர். வறுமையே இந்த வாழ்க்கை அவலத்திற்கு முதற்காரணம். எனவே வரும்காலங்களில் வறுமையை வெறுமையாக்குவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இன்று(ஜூன் 12) உலக குழந்தை தொழிலாளர் தினத்தையொட்டி பள்ளிக்குச் செல்லாமல் பணியில் ஈடுபடும் சில குட்டித் தொழிலாளிகளின் குழந்தைத் தனமான வார்த்தைகளை இங்கு பார்ப்போம்: கே.சந்துரு(11) (கீழஉரப்பனூர், திருமங்கலத்தில் ஒர்க்ஷாப்பில் பணி): 4ம் வகுப்பு வரைபடித்துள்ளேன். எனது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர். எனது தந்தை இறந்தபின் அம்மாதான், கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். கஷ்டமான சூழ்நிலையில் எனது தாய்க்கு உதவ தற்போது விடுமுறை நேரத்தில் இந்த வேலையை பழகி வருகிறேன். பள்ளி துவங்கும்போது படிக்கச் சென்று விடுவேன். விடுமுறையில் வேலை பார்க்க வருவேன். படிப்பதற்கு அதிக ஆசை உள்ளது. எம். சந்தோஷ் (13)(பாலசமுத்திரம், ஜவுளிக்கடை, பழநி): தந்தை இறந்ததால், தாயார் கூலி வேலைக்குச் சென்று என்னையும், சகோதரரையும் வளர்த்தார். குடும்ப சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். சில மாதங்களாக 2,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். காலை 9 முதல் இரவு 7 மணி வரை பணியாற்ற வேண்டும். ரோட்டில் நின்று வாடிக்கையாளர்களை ""கடைக்கு வாங்க அண்ணேஎன கூவி அழைப்பேன். உயர்கல்வி படித்து அதிகாரியாக ஆசை உள்ளது. வறுமையின் சிரமங்களை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். படிப்பிற்காக சிலர் உதவ முன்வந்த போதும், கடைசி வரை கிடைக்குமா? என்பது சந்தேகமே. சுரேஷ்(13) (பாசி, ஊசி விற்பனை, தேனி): எனது சொந்த ஊர் திண்டிவனம். அப்பா, அம்மா, தம்பியுடன் சில மாதங்களாக இங்கு வசிக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலையால், நானும் சம்பாதித்தே ஆக வேண்டும். இதனால் மேற்கொண்டு படிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இந்த வேலையில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வரை கிடைக்கும். எனது தம்பியும், பெற்றோரும் இதை நம்பியே வாழ்கிறோம். எம். முத்துச்சாமி(13, டீக்கடை, ராமநாதபுரம்): பள்ளி விடுமுறை என்பதால், டீக்கடையில் வேலை செய்கிறேன். இந்த வருமானம் என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். என் தந்தை விதை வியாபாரம் செய்கிறார். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதால் குடும்பத்திற்கு போதவில்லை. எனவே நான் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குடும்ப சூழல் காரணமாகவே வேலை செய்கிறேன். கடையில் 2 வேளை சாப்பாடு தருகின்றனர். பாலசுப்பிரமணியன் (14, ஜவுளிக்கடை, வேம்பங்குடி, சிவகங்கை): ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் தந்தை சென்னை ஓட்டலில் வேலை பார்க்கிறார். விலைவாசி உயர்வால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. என் வயதுக்கு கடினமான பணியாக இருந்தாலும், குடும்ப சூழ்நிலை கருதி வேலை பார்க்கிறேன். நான் சிறுவன் என்பதாலோ என்னவோ, யாரும் என்னை வற்புறுத்தி வேலை வாங்குவதில்லை. நான் மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். அதற்கு தேவையான வசதி வீட்டில் இல்லை. சுந்தரமூர்த்தி (13, ஒர்க்ஷாப், விருதுநகர்): எனது சொந்த ஊர் சத்திரரெட்டியபட்டி. நான் டூவீலர் மெக்கானிக் ஷாப்பில் பணியாற்றுகிறேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். வீட்டில் இருந்தால் ஊரைச் சுற்றி வருவேன் என்பதால் எனது பெற்றோர் வேலைக்கு அனுப்பியுள்ளனர். தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை பணிசெய்ய வேண்டும். இதற்கு சம்பளம் எதுவும் வழங்குவதில்லை. தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விருப்பம். அதன்மூலம் பின்பு தொழில் துவங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் இங்கு பணியாற்றுகிறேன். இவ்வாறு கூறினார். குழந்தைத் தொழிலாளர்களின் வறுமை குமுறல்கள் அரசின் காதுக்கு எட்டாமல் இல்லை. அதனால்தான் சமீபகாலமாக சட்டதிட்டங்கள் மூலம் இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் என்.கோவிந்தன் கூறியதாவது: வறுமையும், பெற்றோர் அறியாமை, படிப்பின் முக்கியத்துவம் தெரியாமை போன்றவற்றால் குழந்தை தொழிலாளர் உருவாகின்றனர். நிர்வாக ரீதியில் பார்த்தால் குறைந்த சம்பளத்தில் சுறுசுறுப்பான தொழிலாளர் கிடைப்பது, யூனியன் பிரச்னை இல்லாதது போன்றவை காரணம். குழந்தை தொழிலாளர்களிடம் சிறுவயதிலேயே பணம் புரள்வதால் சமூகவிரோத செயல்கள் உருவாகும். ஒழுக்க நெறி இல்லாமல் போகும். பெற்றோரை அவமதிப்பர். எனவே இவர்களுக்கு அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் கல்வியை வழங்குகிறது. வருங்காலத்தில் படிக்க வைக்காத பெற்றோருக்கு ஜெயில் தண்டனையும் வழங்க வாய்ப்புள்ளது. இவர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அல்லது ஓராண்டு ஜெயில் அல்லது இரண்டும் வழங்கப்படும். இப்பிரச்னைக்கு வறுமையே காரணமென்பதால், பெற்றோர் வறுமை தீர கடனுதவி போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகாண்கிறோம், என்றார்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:42, 16 ஜூன் 2011 (UTC) நன்றி - தின மலர். |
