கல்லாட நூலாராய்ச்சி -2மரபு விக்கி இருந்துதமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில் : Vol.12_1936-1937_10; பக்கம்: 347-354 வெளிவந்த கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. இதனை தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்.திரு.சிவக்குமார் ( நியூ ஜெர்சி) அவர்களுக்கு நமது நன்றி. -சுபா
இறையனாருரை, சங்ககாலத்திற்குப்பின் 8-ம் நூண்றுண்டில் இயற்றப்பட்டதாகும்; கிளை முறையாக 35 பெயர்களால் ஓதப்பட்டு வந்ததாக உரைகாரர் கூறியிருப்பின் இவ்வுரை நக்கீரர் உரையாகுமெனக் கொள்ளத்தகும். 13 பெயர்களே உரைகாரர் கூறியுள்ளார். இக்கூற்றை ஆராய்ச்சியாளர் கொள்ளார். எனவே நக்கீரர் உரையென்பது கற்பனையாகும். இக்கற்பனையை உரைகாரர் கூற்றெனக்கொள்க. இந்நூலாசிரியர் இறையனார் என்பவர். இப்புலவர் "கொங்குதேர் வாழ்க்கை" என்னும் குறுக்கொகைச் செய்யுளை இயற்றியவர். இப்புலவர் ஊனுடம்பொடு பிறந்தவரேயன்றி பிறவாயாக்கைப்பெரியோனல்லர், இப்புலவர் பெயர் ஈசன் பெயரொடு ஒரொற்றுமைப் படுவதைக் கருதி இந்நூல் ஈசனே இயற்றியதென்றும் களவியலுரைகாரர் கற்பித்துவிட்டார். இதனைப் பின்னோரும் பின்பற்றி வேறு கதைகளும் புணர்த்தார். இறையனாருரைகாரர் கருத்தையறிந்த மற்றோர் புலவர் ஈசனார் பாடிக் கொடுத்த செய்யுளில் நக்கீரர் குற்றங் காட்டினாரென்று ஒர் கதையைப் புணர்த்து நக்கீரர் பெயரால் சில நூலகளைப்பாடி இறையனாருரைகாரர் கூறிய கதையை வளம்பெறச் செய்தார். இக்கதைக்கரு "நன்பாட்டுப் புலானாகிச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்' என்று நாவுக்கரையர் பாடியுள்ள பழைய வரலாறொன்றை ஆதரவாகக்கொண்டு, நக்கீரர் குற்றங்காட்ட, ஈசனார் நக்கீரன்மாட்டு சினமுடையவராய் நெற்றிக் கண்ணால் நோக்க, நக்கீரன் விழிக்கனலின் வெப்புக் காற்றானாகி, ஒர் வாவி நீருட்புக் கிருந்தவாறே ஈசனைப்பாடி அருள்பெற்றுய்ந்தான் என்று இப்புலவர் கற்பித்தார். இக்கதை புணர்த்தவர் ஈசனார் பாடிய செய்யுளைக் கூறாது விடுத்தது குறிக்கத்தக்கது. இக்கதையைப் புணர்த்த புலவர் தாம் பாடிய பாட்டுக்களுக்கு நக்கீரர் பெயரைச் சூட்டியது போலவே வேறு சில செய்யுட்கள் பாடி அவற்றிற்கு மற்றை சங்கப்புலவரான கபிலர், பரணர், கல்லாடர் முகலியோர் பெயரையும் சூட்டினார்போலும். இப்பாட்டுக்களனைத்தும் பதினொன்றாம் கிருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் நடையானும் இலக்கணக் குறிப்புக்களானும் தேவாரப் பதிகங்களுக்கும் முந்தியவை யாகவெனச் கூறலாகும். இறையனாருரையை இப்புலவர் பின்பற்றினாரெனவுங் கூறலாமாகலான் இப்புலவர் 8-ம் நூற்றண்டிற்கும் முற்பட்டவராகார். "நுணலுந் தன் வாயாற்கெடும்" என்பதற்கு இப்புலவர் பாடிய திருவெழுக் கூற்றிருக்கையில் "நால்வகை, இலக்கணம் நலந்தக மொழிந்தனை” என்னும் கூற்றே இலக்காகும் என்பதனைக் காட்டுவாம். சொல்காப்பியருக்கு முன்னர் இலக்கணம் எழுத்தும்பொருளும் என்னும் இருவகைப்பாகுபாடே இருத்ததென்பர். தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்றும் மூவகைப் பகுபாட்டைக் கொண்டனர். பல்காயனார்,, பல்காப்பியனார் முதலியோர் செய்யுளியலைத் தனியே பிரித்து யாப்பு என்னும் ஒர் அதிகாரம் ஆக்கினாரெனக் கூறலாம். இவர்களில் பதின்மருக்கு மேல் யாப்பு நூல்கள் யாத்தனர் என்பது யாப்பருங்கல விருத்தியால் உணரலாகும். இறையனாருரைகாரர் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நால்வகைப் பாகுபாட்டைக் கூறியுள்ளார். நால்வகைப் பாகுபாடு இறையனார் உரைகாரர் காலத்திற்கு முற்பட்டதாகும். திருவெழுகூற்றிருக்கையின் ஆசிரியர் இறையனாருரைகாரருக்கும் பிற்பட்டவரென்று முன்னர் கூறினாமாகலின் இறையனாருரை காலத்திற்குப் பின்னும் நால்வகைப் பாடே வழங்கியதாகும். பிங்கலங்தையாசிரியர் இலக்கணக்கின் ஐவகைப் பாகுபாட்டை, கவியரங்கேற்றிய பாட்டுடைத் தலவன் செய்யும் வழிபாடு கூறுமிடத்து "சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் நக்கீரர் என்னும் பெயர் பூண்ட புலவர் ஈசன் அருளிய செய்யுள் இன்னதெனச் சுட்டிக் கூறாது விடுத்ததை பின்னுள்ளோர் இறையனார் என்னும் புலவர் பாடியுள்ள
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி உத்திரப்பெருவழுதியைக் குறித்த திருவிளையாடலும் புதிய வரலாற்றிலடங்குமென்பதைக் காட்டுவோம். இப்பாண்டியன் சங்கமேறிய புலவர்களில் ஒருவனாகக் கூறப்படினும் சங்கத் தொகைகளில் இப்பாண்டியன் பாடிய செய்யுள் காணப்படாது. இறையனாருரை சங்கம் இவன் காலத்தோடு முடிந்ததென்று கூறும். இப்பாண்டியன் காலத்துச் சங்கம் தழைத்தோங்கிய நிலையில் இருந்ததென்றுணரலாகும். நக்கீரரைச் சிறப்பிக்கவெழுந்த கதைபோல இப்பாண்டியனையும் சிறப்பிக்க சிலகதைகள் தோன்றின. இப்பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் அதற்கு ஈசன் முதற்கவி பாடிக்கொடுத்தாரென்றும், உக்கிரப்பெருவழுதியும் ஓர் கவி பாடினாரென்றும் பிற்காலத்தாரொருவர் கற்பித்தார். இதன் பின்னர், உக்கிரப் பெருவழுதி தெய்வத்தன்மை வாய்ந்தவனென்றும் நெடுஞ்சடையோடு பிறந்தானென்றும், வளை, வேல், செண்டு பெற்று அரிய செயல்களைப் புரிந்தானென்றும் பலவித கற்பனைகள் எழுந்தன. இக்கதையனைத்தும் திருவிளையாடலில் காணலாம். வளை,வேல், செண்டு பெற்ற வரலாறு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதோர் வரலாறாகும். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் பெயர் கூறாதிருத்தல் குறிக்கத்தக்கது. இக்கதை பிற்காலத்தில் உக்கிரப் பெருவழுதிமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இக்கற்பனை 8ம் நூற்றாண்டிற்கும் இறையனாருரை காலத்திற்கும் பிற்பட்டதாகுமென்பதைக் கூறுவாம். பாண்டிய மன்னர் சடையன் என்னும் பெயரைப் பட்டப் பெயராக வகித்து வந்தார். அரிகேசரியின் புதல்வன் கோச்சடையன் என்னும் இயற்பெயரை உடையவன், இவன் புதல்வன் ராஜசிம்மனுக்கு, தகப்பன் பெயரை முன்வைத்து சடையன் மாறன் என்னும் பெயர் வழங்கியது. இவன் புதல்வன் காலம் முதல் மாறன் சடையனென்ற பட்டமும், சடையன் மாறன் என்ற பட்டமும் மாறிமாறி வழங்கப்பட்டது. இவ்வழக்கம் தொடங்கியது 8ம் நூற்றாண்டினிடைக்காலம் முதல் என்னலாம். பிற்காலத்தார் இவ்வரலாற்றுக்கு ஓர் கதை புணர்த்து குலமுதல்வனாகக் கூறப்படும் உக்கிரபெருவழுதி சடையுடன் பிறந்தானென்றார். இக்கதை திருவிளையாடலில் கூறப்பட்டுளது. கல்லாடத்திலும் காணப்படும். இக்கதை 9ம் நூற்றாண்டிற்குப் பின்னரே புணர்க்கப்பட்டதாகும். மூர்த்தி நாயனார் “மும்மையா லுலகாண்ட மூர்த்தி” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பித்துக் கூறப்பட்டார். இச்சிறப்பின் முழுவரலறு அறிவதற்கியலாது. திருவிளையாடலில் இவ்வடியார் அரசுரிமையைத் தாங்கி மதுரையில் ஆட்சிபுரிந்தாரென்று கூறப்படும். இவர் அரசு பூணுவதற்குமுன் வடுகக்கருநாடர் என்னும் ஒரு குலத்தினர் பாண்டியவரசி நீக்கி பாண்டி நாட்டை ஆண்டதாகவும் இக்குலத்தினர் சைன மதத்தைப் பரவச் செய்தனர் என்றும் இறுதியில் அரசுரிமை தாங்கக்கூடிய மக்களின்றி அக்குலம் முடிவுற்றதென்றும் மூர்த்தி நாயனார் அமைச்சர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரென்றும் புராணம் கூறும். இம்மூர்த்திநாயனார் பசுக்காவலன் எனக் கூறப்படுவாராதலின் இவர் அரச குலத்தைச் சார்ந்தவரன்று. பின்னர் பாண்டியர் எவ்வாறு அரசுரிமை யெய்தினரென்று புராணம் கூறவில்லை. இக்கதை சுந்தரமூர்த்திகள் காலத்திலும் விளங்காததொன்றாக விருந்ததென் றறியலாகும். பிற்காலத்தில் மூர்த்தி நாயனார் வரலாறு விரித்துக் கூறப்பட்டது. புணர்ப்பெனவே படும். வேள்விக்குடி சாசனம் பாண்டி நாட்டை வெளவினவன் பெயர் களப்பிரன் என்று கூறுகின்றது. இவன் வமிசத்தார் மதுரையில் பலவாண்டுகள் ஆட்சிபுரிந்தார் என்பது பெறப்படும். இவர்களாட்சி ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் நடந்ததெனவும்ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர். கடுங்கோன் இவர்களைத் துரத்திவிட்டு தன்னுரிமையை எய்தினானென்று சாசனம் கூறும். ஆயினும் இவன் காலத்திலாவது, இவன் புதல்வன் காலத்திலாவது, போர் நடந்ததாக சாசனங் கூறவில்லை. கடுங்கோன் போரின்றி நாட்டை அடைந்தான் என்றாவது கூறப்படவுமில்லை. இவற்றை நோக்கின் கடுங்கோன் முதல் மூன்று அரசர்கள் வரலாறு வேள்விக்குடி சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளது, உண்மையன்றென்னும் ஓர் ஆசங்கைக்கு இடந்தருகிறது. களப்பிரர் என்பார் பெயர் 9ம் நூற்றாண்டுப் பல்லவ சாசனங்களில் காணப்படும். பல்லவர்கள் சேர, சோழ, பாண்டி, களப்பிரரோடு போர் செய்தார்களென்று கூறப்படுகிறது. இக்களப்பிரருக்குரிய நாடு இன்னதென்றும் இவர்கள் பாண்டிாட்டை அடைய எவ்வழி கொண்டாரென்று அறியவியலாது; இப்பெயர் கள்வன் என்னும் பெயரின் திரிபென்று கொண்டு வேங்கட நாட்டையாண்ட கள்வன் புல்லி என்ற குலத்தைச் சார்ந்தவரென்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுவர். திரு. மு. இராகவ ஐயங்கார் இககளப்பிரர், பிற்காலத்தில் பலவிடங்களில் களப்பாளர் என்று விளங்கியவர் குலத்தின் முன்னோராவர் என்று கூற்றுவ நாயனார் வரலாற்றைச் சான்றாகக் கூறுவர். கூற்றுவ நாயனார் வரலாறும் மூர்த்தி நாயனார் வரலாற்றைப் போலவே யுளது. சோழநாட்டிற்கோர் பெருமை கொடுக்க கூற்றுவ நாயனார் வரலாறு எழுந்தது போலும். சாசன வரலாறும் ஐயப்பாடுடைய தாகும் . மூர்த்தி நாயனார் வரலாறும் புராணக் கதையாகச் சரித்திர வரலாற்றுக்கு ஒவ்வா திருக்கிறது. கார் மண்டல சதகத்தார் முத்தரையர் என்னும் ஓர் குலத்தினர் மதுரையிலிருந்ததாகக் கூறுவர். இதுகாறும் திருவிளையாடல்களின் ஆராய்ச்சியால் கல்லாட நூல் 11ம் நூற்றுண்டிற்கு முற்பட்டதாகாதெனக் கூறினாம். திருரு. மறைமலையடிகள் கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது. மணிவாசகனார் வரலாறும் பிற்பட்ட காலத்ததாகும். இவ்வரலாறும் புராண காலத்திற்கு அணுகிய காலத்ததாகும். மணிவாசகனார் நூலில் காணப்படும் சில அகச்சான்றுகளால் மணிவாசகனார் காலத்தை ஆராய்வோம்.
|