கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் செய்வதன் பொருள்!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இப்போ பார்க்கப் போவது பும்ஸுவனம், சீமந்தம் இரண்டையும். இக்காலங்களில் அவசர யுகம் என்பதால் இரண்டையும் சேர்த்துச் செய்கின்றனர். ஆனால் பும்ஸுவனம் என்பது கர்ப்பம் உறுதி ஆனதும், நான்காம் மாதம் ஆரம்பத்தில் செய்தல் நல்லது. முற்காலங்களில் நாலாம் மாதம் முடிவதற்குள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பும்ஸுவனம் செய்து பின்னரே பிறந்தகம் அனுப்புவார்கள். பொதுவாகக் கருவில் உருவாகி இருக்கும் இந்த முதல் குழந்தையைத் தவிர இனி பிறக்கப் போகும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்த்துச் செய்வது பும்ஸுவனம் என்பது சிலர் கருத்து. ஆகவே இதைக் கட்டாயமாய் நடத்த வேண்டும். அப்படி ஒருவேளை நாலாம் மாதம் பும்ஸுவனம் செய்ய முடியாவிட்டால், ஆறாம் மாதமாவது செய்யவேண்டும். ஆறாம் மாதமும் முடியவில்லை எனில் எட்டாம் மாதம் செய்ய வேண்டும். தற்காலங்களில் வளைகாப்பு, பும்ஸுவனம், சீமந்தம் எல்லாவற்றையும் ஒரே நாளில் எட்டாம் மாதம் செய்யும் வழக்கம் வந்துள்ளது. பும்ஸுவனமோ சீமந்தமோ செய்யவில்லை எனில் அந்தக் குழந்தையைத் தகப்பன் பார்க்கக் கூடாது என்றும், குழந்தை பிறந்ததும், குழந்தையைத் தாயின் மடியில் மறைத்து வைத்துக் கட்டி பும்ஸுவனம்,சீமந்தம் போன்றவற்றைச் செய்த பின்னரே குழந்தையின் தகப்பன் குழந்தையைப் பார்க்கலாம் என சாஸ்திரங்கள் அறிவுறுத்துவதாய்ச் சொல்லுவார்கள்.


இந்த பும்ஸுவனம் ஆண் குழந்தையை வேண்டிச் செய்யப்படுவது என்பதும் ஒரு கருத்து உள்ளது. ஆனாலும் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும் பும்ஸுவனம் செய்யலாம். வசதி இருந்தால் ஒவ்வொரு குழந்தை பிறக்கப் போகும் முன்பும் செய்து கொள்ளலாம். அல்லது சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவரெனில் செய்து கொள்ளலாம். இது அவரவர் குடும்ப வழக்கப்படியும் வரும். இதற்கும் ஹோமம் எல்லாம் உண்டு. பொதுவாய் அமாவாசை கழிந்த வளர்பிறையில் பூச நக்ஷத்திரமாய் வரும் நாட்களில் செய்வார்கள். அப்படி நாள் சரியாய்க் கிடைக்கவில்லை எனில் தேய்பிறையில் செய்யலாம். முன் காலங்களில் பும்ஸுவனம் செய்யவில்லை எனில் ஜாதகர்மாவுக்குத் தகுதி இல்லை என்பார்கள். அதிகாலையில் தம்பதிகள் மங்கள ஸ்நாநனம் செய்துவிட்டுப் புரோகிதர்கள் வழிகாட்டுதலின் படி கலசத்தில் வருண பகவானை வழிபடுவார்கள். அந்தக் கலச ஜலத்தால் கர்ப்பிணிப் பெண்ணிற்கு அபிஷேஹம் செய்வார்கள். கர்ப்பிணியின் இடக்கையில் காப்புப் போல் ஒரு மஞ்சள் கயிறு மந்திரங்கள் ஓதி ஜபித்துக் கட்டுவார்கள். கர்ப்பத்தைப் பாதுகாக்கும் கடவுளை வேண்டி ஹோமத்தில் நெய் வார்த்து வேண்டுவார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆலமரத்தின் கிழக்குப் பாகம் அல்லது வடக்குப் பாகத்தில் இருந்து இரு காய்களுடன் கூடிய ஆலமொக்கை எடுத்து வந்து கர்ப்பிணியின் மூக்கில் பிழிவார்கள். இந்த மூக்குப் பிழியும் சடங்கில் அது வரை கட்டாத புத்தம்புதிய புடைவையே பயன்படும்.  ஒரு சில வீடுகளில் தேம்பு எனப்படும் நான்கு கஜப் பட்டுத் துணியைப் பயன்படுத்தி மூக்குப் பிழிந்துவிட்டுக் கோயிலுக்குக் கொடுத்துவிடுவார்கள்.  மூக்கிலிருந்து அது தொண்டைக்கு வருகையில் கர்ப்பிணி அதை விழுங்க வேண்டும். ஆலமொக்கும் அதன் சாறும் கர்ப்பத்திற்கு உறுதியையும், பலத்தையும் கொடுக்கும் என ஆயுர்வேதத்தில் சுஸ்ருதர் கூறி இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். குழந்தை கருப்பையிலிருந்து வெளிவரவும் உதவும் என்பதும் ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த பும்ஸுவனம் சாதாரணமாய் கர்ப்பம் உறுதியானதும் நான்காம் மாதம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலப் போக்கில் இவை எட்டாம் மாதமாகிவிட்டன.


இதன் பிறகே சீமந்தம் செய்ய வேண்டும். வடமொழியில் சீமா என்றால் எல்லை, அந்தம் முடிவு. இது வகிடைப் பிளத்தலைக் குறிக்கும். தலையில் வகிடு ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை பிளந்து விடுவதையே சீமந்தம் என்பார்கள். இதை சீமந்தோநயனம் என்றும் கூறுவார்கள். இது பும்ஸுவனம் ஆன பின்னர் ஐந்து மாதத்திலிருந்து எட்டு மாதத்திற்குள் செய்யலாம். பெளர்ணமி சந்திரனின் அதி தேவதையான ராகா என்னும் தேவதையைக் குறித்துக் கூப்பிட்டு, அத்திமரக் கிளை, முள்ளம்பன்றி முள், நெற்கதிர் போன்றவற்றால் பெண்ணின் வகிட்டைக்கணவன் பிளப்பான். அதாவது நெற்றியில் ஆரம்பித்து உச்சந்தலை வரையிலும் வகிட்டைக் கீற வேண்டும். இதனால் கர்ப்பிணியின் மனக்கிலேசங்கள் அகலும் என்று கூறப் படுகிறது. ஆரோக்கியமாகவும், சுகமாகவும் குழந்தை பிறக்க வழி செய்யும் எனப்படும். இனிமையான சங்கீதம் கேட்கவும் அறிவுறுத்தப்படும். அன்று முழுதும் தம்பதியர் உபவாசம் இருக்கலாம். பின்னர் காளைக்கன்றைத் தொட்டுவிட்டுச் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிப் பெண்ணைக் குனிந்து கொள்ளச் சொல்லி இடுப்பின் அருகே அச்சுதம் தெளித்தல் என்னும் சடங்கை சுமங்கலிகள் சேர்ந்து செய்வார்கள்.  இதற்குப் பூக்கள், அக்ஷதை, சந்தனம், பால் போன்றவை பயன்படும்.  எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து கர்ப்பிணியின் முதுகெலும்பும் இடுப்பெலும்பும் சேரும் இடத்தினருகே ஆண் பிள்ளை, பெற்றாள், பெண் பிள்ளை பெற்றாள் என்று பாட்டுப் பாடிக்கொண்டே தெளிப்பார்கள்.


பெண்ணின் புகுந்த வீட்டில் மாமியார் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றைச் செய்து கர்ப்பிணியின் புடைவைத் தலைப்பில் மட்டைத் தேங்காயோடு கட்டிவிட்டு திருஷ்டி கழிப்பார்கள். படியில் நிறை நாழி வைத்து, கர்ப்பிணிப் பெண்ணின்  தலை, தோள்பட்டை, கைகள், கால்கள், இடுப்பு போன்றவற்றில் முழு ஒருரூபாய்க் காசு வைத்து, விளக்கை ஏற்றி, இறக்கி, ஏற்றி, இறக்கி திருஷ்டி கழிப்பார்கள்.  இந்தச் சடங்குக்கு ஏற்றி, இறக்குதல் என்றே பெயர். இதன் பின்னர் பிரசவம் ஆனதும் பார்க்க வேண்டியவையும் பிரசவ மருந்துகள், சாப்பாடு வகைகள் போன்றவற்றைப் பார்க்கலாம்.


--Geetha Sambasivam 07:17, 1 ஜூன் 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஜூன் 2011, 07:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,514 முறைகள் அணுகப்பட்டது.