செட்டிநாட்டு சமையல் என்றாலே அதற்கென்று தனிமுத்திரை தனி ருசி! ஆனால்அன்று இருந்த அந்த அசல் ருசி இன்று இருகிறதா என்றால் இல்லை என்று தான்சொல்வேன், அன்று விறகு அடுப்பில் மண் சட்டி பானைகள் உபயோகித்து, மசாலாவகைகளை, மஞ்சளை கூட! அம்மியில் அரைத்துச்சேர்த்து சமைக்கப்பட்ட சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது!.இன்று எல்லாமும் மாறி விட்டது.
இப்பொழுது இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல நகரங்களில்ஏராளமான செட்டிநாடு ரெஸ்டாரண்டு(ஓட்டல்)கள் பெருகி வருகின்றன!. இதை பார்க்கும்போது செட்டிநாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் மக்கள் அதிகரித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது!அதிலும் சில மெஸ்களில்ஏதேதோ(அறியாத!) புதிதான அயிட்டங்களை கொண்டு வந்து வைத்து செட்டிநாட்டு சமையல் என்று சொல்லி அசத்துகிறார்கள்!
நான் ஒ(எ)ன்றும் சமையலில் சிறந்தவள் இல்லை.ஏதோ கொஞ்சம் எனக்கு தெரிந்ததையும் மற்றவர்களிடம் இருந்து(நிறைய)கேட்டு தெரிந்து கொண்டதையும் இங்கே கூறுகிறேன்.அவ்வளவுதான்.
இனி சமையல் குறிப்பு,முதலில் இனிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றுநினைக்கிறேன்! செட்டிநாட்டு பலகார வகைகளில் நிறையப்பேர் விரும்புவதும், முக்கியமானதும் செட்டி மகன் செல்லப்பிள்ளை கந்தனுக்கு பிடித்தமானதுமான கந்தரப்பம் செய்முறையை பற்றி சொல்கிறேன்.
கந்தரப்பம்
தேவையானவை:
- 500 கிராம் பச்சரிசி (2 ½ கப்)
- 100 கிராம் உளுத்தம் பருப்பு (½ கப்)
- 400 கிராம் வெல்லம் (2 கப்)
- தேங்காய் பூ 2 மேஜைக்கரண்டி
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- ஏலக்காய் 10.
அரிசி,உளுந்தம் பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து பிறகு தண்ணீர்சிறிதளவு ஊற்றி அரைக்க வேண்டும். .பாதி அரைத்ததும் தட்டி வைத்துள்ள வெல்லத்தை அத்துடன் சேர்த்து நன்கு மிருதுவாக அரைபட்ட பின் அத்துடன் தேங்காய்பூ சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் அரைத்து பின் அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்து அத்துடன் ஏலக்காயை பொடி செய்து மாவில் போட்டு நன்கு கலந்து, அடியில் தட்டையான(flat bottom) வாணலியை
அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை வட்டமான கரண்டியில் எடுத்து எண்ணைக்குள் ஊற்றி அப்பம் மேலெழும்பி வந்ததும், அதை திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்
1)அரிசி பருப்பு முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் ஊறினால் போதுமானது.
2) வெல்லத்தை முன் கூட்டியே தட்டி பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.)
3)மாவு அரைக்கும்போது தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்க வேண்டும்
தண்ணீர் கூடி விட்டால் வெல்லம் போட்டதும் இன்னும் அதிகம் இளகி மாவு தண்ணியாகி விடும்.
4)எண்ணை அதிகம் சூடாக இருந்தால் பணியாரம்(அப்பம்)சீக்கிரம் வெந்து உள்ளே வேகாமல் மாவாக இருக்கும்.அதே சமயம் சூடு குறைந்தாலும் எண்ணையை குடித்து விடும் ஆதலால் சரியான அளவில் நெருப்பை குறைத்து வைத்து பணியாரம் சுட வேண்டும். இது எல்லாவித எண்ணை பலகாரத்திற்கும் பொருந்தும்.
5) மாவை அரைத்தவுடனும் கந்தரப்பம் சுடலாம்.சிறிது புளிக்க வைத்தும் சுடலாம்
(ருசி குழிப்பணியாரம் போல் இருக்கும்).
6) தேங்காய்ப்பூவை (சேர்த்து)அரைக்காமல் மாவில் நேரடியாக போட்டு கலந்தும்சுடலாம்
7) அதிக இனிப்பு விரும்பாதவர்கள் வெல்ல அளவை குறைத்து கொள்ளலாம்.
மீனா. rangameena@gmail.com