அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
மூலவர் : கந்தசுவாமி
உற்சவர் : முத்துக்குமாரர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : சரவணப் பொய்கை
ஆகமம்/பூஜை : குமார தந்திரம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
-ஊர் : கந்தக்கோட்டம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம்உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
வள்ளலார்.
தல சிறப்பு:
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர் . சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்
இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
தல வரலாறு:
இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர்.அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், "தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்
திருவிழா:
தையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:54, 21 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி - தின மலர்.