கதையே கவிதையாய்! 1.மரபு விக்கி இருந்து
கதையே கவிதையாய்...............
இன்பமும் துன்பமும்!
மங்கையொருத்தி வந்தாள், சுக, துக்கம் பற்றிய வினவேந்தியே. ஞானியவன் விடை பகர்ந்தான் : உன் இன்பம் என்பது, முகமூடியணியாத உன் துன்பம் தானே! அதாவது, உன் நிறைந்த கண்ணீரின் ஊடே எழும் உன் ஆனந்தச் சிரிப்பைப் போன்றுதான். வேறு எப்படி இருக்க முடியும் ? உனக்குள்ளே அந்த துக்கம் உன்னை எத்துணை ஆழமாக செதுக்குகிறதோ, அத்துணை அளவிற்கும் அதிகமான இன்பத்தை நீ அதில் நிறப்ப முடியும். உன் மதுவை நிரப்பி நீ ஏந்திக் கொண்டிருக்கும் கோப்பை, குயவனின் உலையில் வெந்த அதே கோப்பை தானே ! உன் ஆன்மாவை வருடுகிற அந்த யாழிசை, கூர்மையான கத்தி கொண்டு, ஆழமாக குடையப்பட்ட அந்த மரத்துண்டினுடையதுதானே ? நீ இன்பமாக இருக்கும் வேளையில் உன் இதயத்தின் வேர் வரை சென்று பார். எது உனக்கு துன்பத்தைக் கொடுத்ததோ, அதேதான் உனக்கு இப்போது இன்பத்தையும் கொடுக்கிறது என்பதை கண்டு கொள்வாய். நீ துக்கமாக இருக்கும் வேளையில் மீண்டும் உன் இதயத்தினுள் சென்று பார். எது உன்னை பெரிதும் உவகை கொள்ளச் செய்ததோ அதற்காகத்தான் நீ விசும்பிக் கொண்டிருக்கிறாய் என்ற உண்மையை உணர்வாய். உங்களில் சிலர், “ இன்பமே துன்பத்திலும் மேலானது”, எனலாம். ஆனால் நான் உங்களிடம் கூறுகிறேன், அவை இரண்டும் பிரிக்கவொண்ணாதது. உன்னுடைய சுகத்திற்கும், துக்கத்திற்கும், இடையே தராசைப் போன்று ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறாய் நீ. வெறுமையாக இருக்கும் வேளையில்தான், தள்ளாடாமல், சமநிலையுடன் இருக்க முடியும் உன்னால். கருவூலக் காவலன், தன்னுடைய தங்கம் மற்றும் வெள்ளியின் கனம் பார்க்க வேண்டி, உன்னைத் தூக்கி நிறுத்தால், உன்னுடைய சுகமோ அல்லது துக்கமோ ஏறவோ அல்லது இறங்கவோ செய்ய வேண்டி வரும்.
|
