மங்கல நிகழ்ச்சிக்கு பாரம்பரிய சடங்குகள் : மறக்காத உடுமலை மலைவாழ் மக்கள்
உடுமலை அருகே மலைவாழ் குடியிருப்பில், மொபைல்போன் உட்பட நவீனங்கள் எட்டிப்பார்த்தாலும், மங்கல நிகழ்ச்சிகளுக்கான பாரம்பரிய சடங்குகளை மாற்றமின்றி பின்பற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
நகரப்பகுதியில் ஏற்பட்ட நாகரிக மாற்றம், தற்போது கிராம மற்றும் மலைவாழ் குடியிருப்பு பகுதிகளிலும் வரத்துவங்கியுள்ளது. நகர வாசிகளை போன்று, மலைவாழ் குடியிருப்பு மக்களும் நவீன உடைகளை அணியவும், தொடர்பு கொள்ள மொபைல்போனும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும், மலைவாழ் மக்கள் தங்களது மூதாதையர்கள் வகுத்த சடங்குகளை மாற்றமின்றி பின்பற்றி வருகின்றனர். உடுமலை- மூணாறு ரோட்டில், வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடந்தூர் செட்டில்மென்ட். உடுமலையிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த செட்டில்மென்டில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
வளர் இளம் பருவத்தில், பூப்படையும் பெண்களுக்கு செய்யும் சடங்குகளை திருவிழாவாகவே நடத்துகின்றனர். பூப்படையும் பெண்களுக்காக, வீட்டிற்கு முன்பாக குடில் அமைத்து தங்க வைக்கின்றனர். குடிலுக்கு மேல் சோலைக்காட்டு பொம்மை போன்று அமைக்கின்றனர். ஒரு மாதம் அல்லது இரண்டு, மூன்று மாதம் பூப்படைந்த பெண் அக்குடிலில் வசிக்க வேண்டும். அப்பெண்ணிற்கு தேவையான உணவுகள் வழங்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு பின், பெற்றோர், ஊர் மக்கள் சீர் வரிசையுடன் முரசு கொட்டி, குடிலில் இருக்கும் பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைக்கின்றனர். இதுதவிர இப்பகுதி மக்கள் கோவில் திருவிழா, திருமணம் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், புதன் கிழமை நடத்துவதே வழக்கமாக கொண்டுள்ளனர். மங்கல நிகழ்ச்சிகளுக்காக மூதாதையர்கள் பின்பற்றிய சடங்குகளை எவ்வித சுவடும் மாறாமல் இம்மக்கள் பின்பற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
"கல்லுக்குள் காதல்': மலைவாழ் கிராமத்தில் சுவாரசியமான ஒரு தகவலும் உண்டு. "இப்பகுதியில் காதல் திருமணம் செய்பவர்கள் சிறிது காலம் பெற்றோருக்கு தெரியாமல் அருகே காட்டிலுள்ள "பாண்டியன் வீடு' என அழைக்கப்படும் பழங்கால கல் வீட்டிற்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். நண்பர்கள் மூலம் உதவி பெற்று குடித்தனம் நடத்துகின்றனர். சில மாதங்களுக்கு பின், பெற்றோரை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு சென்று ஒன்று கூடி வாழும் நடைமுறையும் உள்ளது.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - 26 - 02 - 2011