இறைவனைக் காண்போம் 13 இருவாட்சிமரபு விக்கி இருந்துஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்(13) இருவாட்சிபறவைகளில் நாம் தையல்காரர், நெசவாளர், பாடகர், தச்சர் இவர்களைப் பார்த்தோம். ஒரு கட்டிடத் தொழிலாளியைப் பார்க்க வேண்டாமா?
இருவாட்சி, மலை இருவாட்சி, செண்டு என்ற சொற்கள் மலர்களைப் பற்றிப் பேசும்போது வரும் வார்த்தைகள். இச் சொற்களையே தன் பெயராகக் கொண்ட ஒரு வினோதப் பறவையும் உண்டு. அதுதான் ஆங்கிலத்தில் ஹார்ன்பில்'(Hornbill) என்றழைக்கப் படும் பறவை. நம் நாட்டில், ரெட்டைச் செண்டு அல்லது சின்ன இருவாட்சி(Grey Hornbill)என்ற ஒரு பறவையும், மலை இருவாட்சி (The Great Indian or Malabar 'Hornbill) என்னும் பறவையயும் சுமார் ரெண்டாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்த பிரதேசங்களில் மரங்களில் வசிப்பதைக் காணலாம்.
பெயருக்கு ஏற்றாற்போல் இவற்றின் மேல் அலகு கொம்பு முளைத்தது போன்று இருக்கும். இந்த உறுப்பின் உபயோகம் என்ன தெரியுமா ?
இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும். முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை கூட்டினுள் உட்கார்ந்து கொண்டு, தனது எச்சத்தைக் கொண்டு பொந்தின் துவாரத்தினை தனது கொம்பு முளைத்த அலகினை கட்டிடத் தொழிலாளியின் கையில் உள்ள கொலுறு போன்று உபயோகித்து காரை பூசியதுபோல் அடைத்துவிடும். பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும். அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு மனைவிக்கு உணவு கொண்டு வந்து ஊட்டிவிட வேண்டியது கணவனின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்ய வேண்டி இருப்பதால் ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும். பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.
முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.
இனி பாருங்கள் இருவாட்சியின் இரு காட்சிகளை.
Horn bill - 1
இரெட்டைச்செண்டுக் குருவி அல்லது சின்ன இருவாட்சி (Grey hornbill) (http://en.wikipedia.org/wiki/Image:Indian_Grey_Hornbill_I_IMG_4051.jpg)
அடுத்து வருவது மலை இருவாட்சி.
Horn bill - 2. மலை இருவாட்சி(The Malabar Great Indian Horn bill) (http://en.wikipedia.org/wiki/Image:Doppelhornvogel-09.jpg)
இப்பறவைகளை பங்களூரு, முதுமலை, பண்டிபூர், தேக்கடி இங்கெல்லாம் காணலாம்.
இயற்கையின் எழிலினைக்கூட்ட எப்படியெல்லாம் படைப்புகளைத் தந்துள்ளான் இறைவன் ! நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான் ?
|