இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் -- பறவைகளும் அவற்றின் குரலும்
மனிதர்களில் பல விதங்கள் இருந்தாலும், அவர்கள் பல மொழிகள் பேசினாலும் அவர்களின் குரல்கள் கிட்டத் தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் பறவைகள் அப்படி அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அந்த தனித் தன்மையே பலரை அவற்றின் குரலைப் பதிவு செய்திடவும், சிலரை அக் குரல்களை கடியாரங்களில் அளித்திடவும் தூண்டுகிறது.
பறவையின் குரல் என்ற உடனே நம்மில் பலருக்கும் நினைவு வருவது குயில்தான். நன்றாகப் பாடிடும் கலைஞருக்கு இசைக் குயில் எனப் பட்டம் கொடுப்பதும் உண்டு.
(குயில் ஜோடி – படம் கல்பட்டு நடராஜன்)
அப்படி என்ன இருக்கிறது அந்தக் குயிலின் குரலில்? கணீரென்ற ஒலி தான்.
குயிலை விட அழகாய் ஒலி எழுப்பிடும் பறவைகள் பல உள்ளன. உதாரணத்திற்கு புல் புல் (அதிலும் சிவப்பு மீசை கொண்ட புல் புல் என்று சொல்லப் படும் வகை (Red whiskered bulbul), மலை மைனா (Hill myna), “ட்ரில்லிங்….ட்ரில்லிங்” எனக் கத்திடும் மாம்பழத்தான் (Tree pie), சன்னக் குரலில் குழலூதிடும் வானம்பாடி (Sky lark) எனப் பல உண்டு.
(சிவப்பு மீசை கொண்ட புல் புல் - படம் விக்கிபீடியாவில் இருந்து)
சிரித்திடும் பறவை ஒன்றுண்டு. அது தான் குக்கபர்ரா என்றழைக்கப் படும் ஆஸ்திரேலியப் பறவை.
(குக்கபர்ரா ஜோடி படம் இணைய தளத்தில் இருந்து)
குக்கபர்ராவின் தொடர் சிரிப்பினைக் கேட்க சுட்டியை அழுத்துங்கள் (Ctrl+click on link below) அல்லது சுட்டியினை காபி செய்து வலைத் தேடியில் பேஸ்ட் செய்து enter பட்டனை அழுத்தவும்.
http://wwtuw.youtube.com/watch?v=2DL4Nsi2lOk
(சிரிப்பின் நடுவே ஏப்பம் வேறா?)
லயர்பேர்ட் என்றொரு பறவை.
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு வினோதப் பறவை இது. ‘லயர்’ என்றவுடன் ‘Liar’ பொய் சொல்பவர் என்று எண்ணி விடாதீர்கள். ‘Lyre’ என்பது ஒரு இசைக் கருவி.
(படங்கள் இணைய தளங்களில் இருந்து)
இந்தப் பறவையின் தோகை போன்ற வால் சிறகுகள் ‘லயர்’ என்ற இசைக் கருவியினைப் போல் இருப்பதால் இப் பறவைக்கு ‘லயர் பேர்ட்’ என்ற பெயர் வந்தது.
இதன் தோகை பதினாறு இறகுகள் கொண்டது. நடு இரண்டு இறகுகள் கம்பி போன்று நீண்டவை. வெளி இரண்டு இறகுகளும் சிறிது அகலமானவை. அவற்றின் நிறம் மிக அழகாக இருக்கும். மற்ற பன்னிரண்டு இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போன்று இருக்கும்.
லயர் பறவைகளில் இரு வகைகள் உண்டு. ஒன்று “மிக அழகான லயர் பறவை” (Superb Lyre bird). மற்றொன்று “ஆல்பர்ட் லயர் பறவை” (Albert Lyre bird) என்பது. முன்னதின் ஆண் பறவை சுமார் 80 முதல் 98 சென்டிமீடர் வரை நீளமும் பெண் பறவை 74 முதல் 84 சென்டிமீடர் வரை நீளமும் இருக்கும். ஆல்பர்ட் (விக்டோரியா அரசியின் கணவர்) ‘லயர் பறவை’ முன்னதை விட சற்றே சிறியது.
http://farm4.static.flickr.com/3172/2743568495_cb43fdd1a4.jpg
http://en.wikipedia.org/wiki/File:Lantfarku.jpg
(http://en.wikipedia.org/wiki/File:Superb_lyrbird_in_scrub.jpg)
இனப் பெருக்க காலத்தில் ஆண் பறவை அடர்ந்த செடிகள் நடுவே மண்ணாலும் இலை சருகுகளாலும் ஒரு மேடை அமைத்து அதனடுவில் நின்று கொண்டு தன் இசைக் கச்சேரியை ஆரம்பிக்கும். கச்சேரி என்றால் என்ன மாதிரிக் கச்சேரி தெரியுமா?
சில நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பறவைகள் விலங்குகள் போலக் கத்தியும், பிரபல நடிகர்கள் போலப் பேசியும் நடித்தும் காண்பிப்பார்களே பல் குரல் விற்பன்னர்கள் அதைப் போன்று பல பறவைகளின் குரல்களையும் ஒலித்துக் காட்டும் இந்தப் பறவை. அது மட்டும்தான் என்பதில்லை. மனிதர்கள் எழுப்பும் எந்த ஒலியினையும் இசைத்துக் காட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அது மரமறுக்கும் ரம்பத்தின் ஒலியோ, தானியங்கிக் கேமிராவின் ஒலியோ, காரின் அபாய அறிவிப்பு ஒலியோ, சொட்டு சொட்டாக குழாயில் இருந்து வாளியில் விழும் தண்ணீரின் ஒலியையோ இப்படி எந்த ஒலியானாலும் அதனால் இசைத்துக் காட்ட முடியும். இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு பொய் சொல்லும் பறவையும் (Liar bird) தான்.
இப்படிப் பல குரல்களிலும் எழுப்பப் பட்ட இசையினில் மயங்கி ஒரு பெண் பறவை அரங்கை நெருங்கினால் ஆண் பறவை உடனே தன் முதுகின் மீது தோகை சிறகுகளை விரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பட படவென அடித்தபடி இப்படியும் அப்படியுமாகச் சுற்றிச் சுற்றி நடனம் ஆடும். நடு நடுவே நமஸ்காரம் செய்வதுபோல உடலைத் தரையைத் தொடச் செய்யும். (மனுசன் கல்யாணமாகி சில வருசங்களுக்குப் பின்னாலே பொஞ்சாதிக்குத் தோப்புக்கரணம் போட்டா இது முன்னாடியே போடும். அது தான் வித்தியாசம்!)
‘நீங்கள் லயர் பேர்டி’ன் குரல் வளத்தினையும் நடனத்தின் நளினத்தினையும் பார்க்க வேண்டுமா? செல்லுங்கள் இங்கே:
http://www.youtube.com/watch?v=VjE0Kdfos4Y
அல்லது சுட்டியினைக் காப்பி செய்து கூகிள் ஸர்ச்சில் பேஸ்ட் செய்து enter button னை அழுத்தவும்.
இப்படிக் குரலழகு கொண்ட பறவைகள் பல உள்ளன.
சரி. குரல் அழகில்லாத பறவைகள் உண்டா என்றால் உண்டென்பேன். உதாரணத்திற்கு சில நாரைகளின் குரல் நாராசமாய் இருக்கும். (நாராசம் என்ற சொல்லே அதில் இருந்துதான் பிறந்திருக்குமோ?)
பக்கி என்றொரு பறவை. இதன் ஆங்கிலப் பெயர் என்ன தெரியுமா? “நைட் ஜார்”. இரவிலே நாராசம் கொண்ட (jarring sound) ஒலி எழுப்பிடிது இது என்பார்கள். என்ன ஒலி அது? “சிக் சிக் சிக் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்……” என்பது தான் அந்த ஒலி.
(பகலில் தன் குஞ்சின் மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டுள்ள பக்கி)
(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)
இப்படிப் பல வித ஒலி எழுப்பும் பறவைகளைப் பார்த்திருந்தாலும், இலக்கியத்தில் வந்திடும் நாராச ஒலி கேட்டு உயிர் விடும் பறவை பற்றிக் கேள்விப் பட்டதில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களும் அது பற்றி சொன்னதில்லை.
ஒருக்கால் மக்கள் எழுப்பிய நாராச ஒலி கேட்டு அவை “டோடோ” பறவை போன்று இவ்வுலகில் இருந்தே மறைந்து விட்டனவோ!
(மடகாஸ்கர் தீவில் வாழ்ந்து முற்றிலுமாய் மறந்த டோடோ)
நடராஜன் கல்பட்டு
--Geetha Sambasivam 05:56, 24 அக்டோபர் 2012 (UTC)