இறைவனைக் காண்போம், தூக்கணாங்குருவி 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் :

4. தூக்கணாங் குருவி



Weaver Bird (Baya).
Weaver Bird (Baya).jpg



பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்கு துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராக கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள.

Weaver bird.
Weaver birdkudu.jpg


ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.


கூட்டினை பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி கிச் கிச் கிச் கிச்......சீ............ என தன் குரலை எழுப்பும் துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சரகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும்.






Weaver bird-house inspection on

(“வீடு நல்லா இருக்கான்னு பாக்க வாணாம் நான்?” கூட்டினுள் பெண் பறவை)



Weaver bird-house inspection on.jpg

மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றொ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும் ! பொல்லாத பறவை ! தூக்கணாங்குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றி பின்னர் பார்ப்போம்.


தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)


உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று விவசாயிகளுக்கு நஷ்டம் விளைவிக்கும்.


அழகான கூட்டினைப் பின்னிடும் தூக்கணாங் குருவிக்கு சில சமயம் பயித்தியம் பிடித்திடுவதும் உண்டு கட்ட ஆரம்பித்த கூட்டினை எப்படி முடிப்பது என்று அறியாமல் மேலும் மேலும் பின்னிக் கொண்டே போகும். உதாரணத்துக்கு இங்கு கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக்கத் தொங்கிடும் கூடு ஒன்று.


Weaver bird colony.

Weaver bird colony.jpg

தூக்கணாங்குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல் கூடும் குஞ்சுகளும் பாம்புமாக தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களை தயார் செய்கிறது இப்பறவை.


(தூக்கணங்குருவிக்கு மற்றொரு பெயர் ‘பாயா’ என்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!)


இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!



(வண்ணப் படங்கள் இணய தளங்களில் இருந்து)





நடராஜன் கல்பட்டு

--Geetha Sambasivam 04:17, 5 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 5 ஜனவரி 2011, 04:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,215 முறைகள் அணுகப்பட்டது.