இறைவனைக்காண்போம்! ஆந்தைக்கோர் நண்பரில்லை!மரபு விக்கி இருந்து ஆந்தைக்கோர் நண்பரில்லை…….. தமிழ் நாட்டில் நிலை என்ன? படியுங்கள் மேலே. “ஆந்தை அலறினால் ஆபத்து. கோட்டான் கூவினால் சாவு நிச்சயம்.” (கோட்டான் என்பது தானியக் கிடங்கு ஆந்தை.) இது பரவலாக உலவி வரும் ஒரு கருத்து. இதனால் ஆந்தையைக் கண்டவுடன் அடித்துக் கொல்வோர் பலர் உண்டு. அப்படியே ஆந்தை அலறினால் ஆபத்து என்பதோ கோட்டான் கூவினால் கோடி துன்பம் என்பதோ உண்மை என்றாலும் ஆந்தை செய்தது என்ன? முன்னறிவிப்பு தானே செய்தது அது? உங்கள் வீட்டிற்குத் தந்தி கொண்டு வரும் ஊழியர் நல்ல செய்திகள் கொண்ட தந்தியும் கொண்டு வருகிறார். கெட்ட செய்திகள் கொண்ட தந்திகளையும் கொண்டு வருகிறார். நல்ல செய்தி கொண்டு வந்ததற்காக அவருக்கு பரிசளிப்பதோ, கெட்ட செய்தி கொண்டு வந்ததற்காக அவரைக் கொல்வதோ இல்லையே? ஆந்தை ஒன்று தப்பித் தவறி பகலில் தன் இருப்பிடம் விட்டு வெளியே வந்திடுமானால் அதைக் காகங்களும், மனிதர்களும் கொன்று விடுவது ஏன்? என்ன பாவம் செய்தன அவை? ஆந்தைகள் பற்றிய உண்மைதான் என்ன? ஆந்தைகள் மனித வர்க்கத்தின் நண்பர்கள். எப்படி? ஆந்தைகளின் முக்கிய உணவு எலிகள். ஒரு இரவில் ஆந்தையின் குஞ்சு ஒன்றே மூன்று, நான்கு எலிகளைத் தின்னும். வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளிலும் எலிகள் விளைவிக்கும் சேதத்தினைக் கட்டுக்குள் வைத்திருப்பதே ஆந்தைகளும், பாம்புகளும் தான். அத்தாட்சி வேண்டுமா? கீழே உள்ள படத்தைப் பாருங்கள். ஆந்தையின் குஞ்சொன்று முழு எலியை விழுங்கிக் கொண்டிருக்கிறது. (கருப்பு வெள்ளை படம் – க.ந.நடராஜன்) அடடா முழு எலியை குஞ்சு விழுங்கி விட்டதே. ஜீரணமாகுமா? கவலையே வேண்டாம். மூன்று நான்கு மணி நேர இடைவெளிக்குப் பின் வாயினால் ஒரு உருண்டையைக் கக்கும். அந்த உருண்டையைக் கையில் எடுத்து அமுக்கினால், அது வெறும் மயிர்களாலும், எலியின் எலும்புகளாலும் (ரத்தம், சதையின்றி சுத்தம் செய்யப் பட்டது) ஆனது என்பதைக் காணலாம். முன்பெல்லாம் மருந்துக் கடைகளில் கிடைத்திடும் “ஹ்யூலெட்ஸ் மிக்ஸ்சர்” என்ற ஜீரண சக்தி அளித்திடும் மருந்தின் விளம்பரப் படம் என்ன தெரியுமா? ஆந்தை! ஆந்தைக்கு மற்றும் சில விசேஷங்கள் உண்டு. அவை ஆந்தையை அருகில் சென்று பார்த்தவர்களுக்கு தான் தெரியும். அந்த சிறப்புகள் என்ன? ஒன்று, ஆந்தை தன் தலையை கிட்டத் தட்ட 359 டிகிரி திருப்ப வல்லது. அதனால் இங்கிலாந்து விவசாயிகளிடம் நிலவி வந்த ஒரு கருத்து என்ன தெரியுமா? ஒரு ஆந்தையைக் கொல்ல வேண்டுமா? அதைச் சுற்றிச் சுற்றி நடந்தாலே போதும். அது தன் கழுத்தை முறுக்கிக் கொண்டு இறந்து விடும். அவர்கள் அறிந்திருக்க வில்லை ஆந்தை 359 டிகிரி திருப்பிய தங்கள் தலையை ஆந்தைகள் கண் இமைக்குமுன் மீண்டும் 0 டிகிரி நிலைக்குத் திருப்பி விடுகின்றன என்பது. அதனால் அவர்கள் ஆந்தைகளைச் சுற்றி நடந்தால் அவை தங்கள் கழுத்தை முறுக்கியே இறந்து விடும் என்று நினைத்தார்களாம்! ஆந்தைகளின் மற்றொரு விசேஷம் அவை பறக்கும் போது சிறகுகளை அடித்திடும் சத்தம் சிறிதும் வராது. இது இறைவன் அவைகளுக்கு அளித்த ஒரு வரம் என்று சொல்ல வேண்டும். சத்தம் வருமானால் எலிகளைப் பிடிக்க அவை பின் தொடரும் போது, சிறகடிக்கும் சத்தம் கேட்டு எலிகள் ஓடி ஒளிந்து விடுமே! (இந்த விஷயத்தில் புறா, காடை, கவுதாரி போன்ற பறவைகள் நேர் எதிர். அவை பறக்கும் போது பட படவென சிறகடிக்கும் சத்தம் கேட்கும்.) ஆண்டவன் படைப்புகளில் தான் எத்தனை வினோதங்கள்! ஆந்தைகள் படும் அல்லல்களைப் பார்க்கும் போது, பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே’ பாட்டுடன் கீழ்க் கண்ட வரிகளையும் சேர்த்துப் பாடினால் என்ன என்று தோன்றுகிறது: ஆந்தைக்கோர் நண்பரில்லை பாரினிலே நந்த லாலா நேசக் கரமுந்தன் கொண்டே நீ மாற்றிடுவாய் இன் நிலை நந்தலாலா நடராஜன் கல்பட்டு.
--Geetha Sambasivam 19:39, 30 நவம்பர் 2011 (UTC) |
