அழகு தெய்வங்கள் நமஸ்கார ஸ்லோக விளக்கம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 அழகு தெய்வம்


இந்த நவராத்திரியில் பலரும் தேவி மஹாத்மியம் படிப்பது வழக்கம். இங்கே நாம் கொஞ்சமே கொஞ்சமாய் அதில் ஒரு சிறு பகுதியைப் பார்க்கப் போகின்றோம். இது தேவி மஹாத்மியத்தில் அத உத்தம சரித்திரத்திற்குப் பின்னர் வரும் ஐந்தாம் அத்தியாயத்தில் இருந்து எடுக்கப் பட்டது. சில முக்கிய ஸ்லோகங்களையும், அதற்கான அர்த்தங்களும் மட்டுமே அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லப் படும்.


சும்ப, நிசும்பர்களால் அவதிப்பட்ட தேவர்கள் ஆதி பராசக்தியை நினைத்துத் தொழுகின்றனர். கஷ்டப் படும் வேளையின் தன் உதவி கிட்டும் எனத் தேவி அளித்திருந்த வாக்குறுதியை நினைவு கொண்டனர். எவராலும் வெல்ல முடியாத அந்தத் தேவி ஒருவளால் மட்டுமே நாம் காப்பாற்றப் படுவோம் என்ற உண்மையை நன்குணர்ந்து தேவியைப் பல்வேறு துதிகளால் துதிக்க ஆரம்பித்தனர்.


1.“நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை ஸததம் நம:
நம:ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதாஸ்ம தாம்”


தேவிக்கு நமஸ்காரங்கள், மஹா தேவிக்கு நமஸ்காரங்கள், சிவ வடிவினள் ஆனவளுக்கு சுபமானவளுக்கு என்றும் நமஸ்காரம். ப்ரக்ருதி வடிவானவளும், பத்ரை எனப்படும் நியதிகளின் வடிவானவளும் ஆன அந்த தேவியை நமஸ்கரிக்கின்றோம்.


இங்கே பத்ரை எனப்படுபவள் பசுமாட்டை மட்டுமில்லாமல் மாதங்களில் வரும் வளர்பிறை, தேய்பிறைத் திதிகள் ஆன த்விதியை, ஸப்தமி, த்வாதசி போன்ற திதிகளையும், பத்ரா நதியையும் குறிப்பிடுகின்றது. ஆகவே அம்பிகையை ஒட்டியே இயற்கையும் அமைந்துள்ளது என்பதை ப்ரக்ருதியானவளே என்ற சொல்லில் இருந்தும் தெரிந்து கொள்கின்றோம்.


2.ரெளத்ராயை நமோ நித்யாயை கெள்ர்யை தாத்ர்யை நமோ நம:
ஜ்யோத்ஸ்ணாயை சேந்துரூபிண்யை ஸுகாயை ஸததம் நம:


2. ப்ரக்ருதி என்னும் இயற்கை வடிவான இந்த அன்னை ஒரு சமயம் பயங்கர உரு எடுத்தும் வருகின்றாள். அந்த பயங்கர வடிவினளையும் நமஸ்கரிக்கின்றோம். ரெளத்ராயை நமோ, இந்த ப்ரக்ருதி அழிந்தாலும் அம்பிகை நித்திய ஸ்வரூபிணி. என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவள். அந்த நித்திய கல்யாணிக்கு நமஸ்காரங்கள். நித்யாயை நம: கெளர்யை நம: கெளரி என்றால் வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ள பெண் என்ற பொருளில் வரும். இந்த பூமியும் அப்படியே. பச்சை, வெண்மை, மஞ்சள் கலந்தே காணப்படுகின்றது. பூமி என்ற பொருளும் வரும். பேச்சு என்ற பொருளும் வரும். அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் பூமியாக மட்டுமின்றி அனைவருக்கும் வார்த்தையாகவும், பேச்சாகவும் வெளிப்படுகின்றாள் அன்னை. நம் வாக்கினிலே சரஸ்வதி உறைகின்றாள் எனப் புரிந்து கொண்டோமானால் அமங்கலமான பேச்சுக்களே எழாதல்லவா?? எல்லாவற்றிற்கும் மேல் இமவான் புத்திரி கெளரி, பருவமடையான எட்டு வயதே ஆன கன்னிப் பெண்ணான இவளே அந்த ஈசனைக் குறித்துத் தவம் இருந்தாள். அவளை நமஸ்கரிக்கின்றோம்.


3.கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம:
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை சர்வாண்யை தே நமோ நம:””


கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம: நின்னைச் சரணடைந்தேன் என்கின்றார் பாரதியார். அது போல் தேவியைச் சரணடைந்தவர்க்குச் சகல கல்யாணங்களும், சகல நன்மைகளும், சகல முன்னேற்றங்களும் அளிப்பவள் ஆன அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள். அரசருக்கு வெற்றியை ஈட்டித் தரும் விஜயலட்சுமியும் அவளே, முறையற்ற போர்களில் தோல்வியைத் தருபவளும் அவளே. இப்படி அரசரின் நெறியைக் காக்கும் அந்த சிவபத்தினிக்கு மீண்டும் நமஸ்காரங்கள்.


4.துர்க்காயை துர்க்கபாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை
க்யாத்யை ததைவ க்ருஷ்ணாயை தூம்ராயை ஸததம் நம:


துன்பங்களில் இருந்து விடுவிப்பவளே துர்கா. அவளே நம்மை இந்தத் துன்பத்தில் இருந்தும் விடுவிக்க வேண்டும். சகலத்தையும் ஆக்குபவளும் அவளே, அழிப்பவளும் அவளே. அனைத்திலும் பொருள் வடிவினள் அவளே. அனைத்திலும் உறைந்திருக்கும் ஜீவ சக்தியும் அவளே. அவளே அனைத்துக்கும் காரிய காரணமும் ஆகின்றாள். க்யாத்யை= கீர்த்தி வடிவானவளும் அவளே. க்ருஷ்ணாயை= கரிய நிறத்தினளான காளியும் அவளே. தூம்ராயை= புகை வடிவினளும் அவளே. இப்படி அனைத்திலு நிறைந்திருக்கும் தேவிக்கு என்றென்றும் நமஸ்காரங்கள்.


5. அதிசெளம்யாதி-ரெளத்ராயை நதாஸ்-தஸ்யை நமோ நம:
நமோ ஜகத்ப்ரதிஷ்ட்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:


அதி செளம்யாதி= மிக மிக இனிமையான வடிவான தேவியைக் குறிக்கின்றது. அடுத்து உடனே ரெளத்ராயை= பயங்கர வடிவினளைக் குறிக்கின்றது. நம்ம அம்மா நம்ம கிட்டே ஒரு சமயம் கொஞ்சுகின்றாள். மறு சமயம் கண்டிக்கின்றாள். சில சமயங்கள் தண்டனை மிகக் கடுமையாகவும் இருக்கின்றது அல்லவா?? அதே தான் இங்கேயும். இப்படி மாறி மாறித் தோற்றமளித்து நம்மைக் காக்கும் அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள்.


ஜகத்ப்ரதிஷ்ட்டாயை= அகில உலகுக்கும் ஆதார சுருதி அம்பிகையே தான். அந்த ஆதார சக்தியாக, சுருதியாக விளங்குபவளுக்கு நமஸ்காரங்கள். க்ருத்யை= அனைத்திலும் காரியமாக, இயங்கும் சக்தியாக விளங்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

--Geetha Sambasivam 12:02, 27 அக்டோபர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 27 அக்டோபர் 2012, 12:03 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,091 முறைகள் அணுகப்பட்டது.