அபிராமி அந்தாதி விளக்கவுரை 22

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் எழுபத்தொன்பது


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே


விளக்கம் :

அபிராமி அன்னையின் விழிகளிலே அருள் உண்டு. வேதங்கள் சொல்லுகின்ற வழிமுறையில் அவளை வழிபடும் நெஞ்சம் எம்மிடத்து உண்டு. ஆகவே அம்மையை வழிபடும் முறை தவிர்த்து, வீணான பழியையும் பாவங்களையுமே செய்து பாழும் நரகத்தில் அழுந்தும் கயவர்களோடு இனி நமக்கு என்ன நட்பு? அது தேவையே இல்லை...அற்புதம் நிகழ்த்திய பாடல் இது... ஒரு தை அமாவாசை இரவில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தேறியது.. அபிராமிப் பட்டரைப் பற்றி மன்னனிடம் இகழ்ந்துரைத்து அவனை ஆலயத்துள்  அழைத்து வந்தனர் கயவர்கள். அவனுக்கும் அபிராமிப் பட்டரின் பக்தி மனது புரியவில்லை. பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது மன்னன் அன்றைய திதியைப் பற்றி வினவினான். அறியாத பட்டரோ பௌர்ணமி என்றுரைத்தார்.


பட்டர்.jpg

கோபங்கொண்டெழுந்த மன்னனோ நிலவைக் காட்டு என்று கட்டளையிட்டான். அன்னையின் அன்பால் இன்றிரவு நிலவைக் காட்டுவோம் எனப்பதிலுரைத்த அபிராமிப் பட்டர், நெருப்பின் மீது ஒரு உறியில் நூறு கயிறுகளைக் கட்டி அதன் மீது நின்று பாடத்துவங்குகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிற்றினை அறுத்து, நூறாவது பாடலிலும் அன்னை வெளிப்படவில்லையெனில், நெருப்பில் வீழ்ந்து
மாள்வது என்பது அவருடைய எண்ணம்.. ஆனால் மனத்திலோ அபிராமி உலகைப் படைத்தவள். சூரிய சந்திரரைப் படைத்தவள். அவள் நினைத்தால் இதெல்லாம் சிறு காரியமல்லவா என்ற அசைக்க இயலாத நம்பிக்கை.. பாடிக்கொண்டே இருக்கின்றார்.ஒவ்வொரு கயிறும் அறுபட்டுக் கொண்டேயிருக்கின்றது.. எழுபத்தொன்பதாவது பாடலான இப்பாடலைத் துவங்கும் போது அன்னையானவள் தோன்றுகிறாள். இப்பாடலை அவர் நிறைவு செய்யும் வேளையில் தனது காதணியை கழற்றி வானில் வீச அது லவென ஒளிர்கின்றது.. கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது.. கயவர்கள் முகவாட்டம் அடைகின்றனர். மன்னனோ ஓடிவந்து பட்டரின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டுகின்றான். நெருப்பின் நடுவிருந்து கீழிறங்குகின்றார் பட்டர். தம் மீது விழுந்த பழியைத் தன் அளவற்ற பக்தியின் மூலம் துடைத்தார். அன்னையும்
தன் பாலகனைக் காத்தருளினாள். அவ்வதிசயம் இப்பாடலைப் பாடும்போதுதான் நிகழ்ந்தது..



"விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு" அபிராமி அன்னையின் திருவிழிகளிலே அருள் உண்டு.. அன்னையின் அருள் அளப்பரியது.. "வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு " வேதங்கள் சொல்லுகின்ற வழிகளிலே அவளை வழிபடும் நெஞ்சம் எமக்கு உண்டு... "அவ்வழி கிடக்க" அன்னையை வழிபட்டு அவள் அருளைப் பெற்று உய்வதற்கு வேதங்கள் சொல்லும் நல்வழி இருக்க... "வெம்பாவங்களே செய்து " கொடிய பாவங்களை மட்டுமே செய்து "பழிக்கே சுழன்று" பழியில் அகப்பட்டு "பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்" பாழும் நரகக் குழியில் விழுந்து அழுந்தும் "கயவர் தம்மோடு" கயவர்களோடு... கொடியவர்களோடு..."என்ன கூட்டு இனியே" இனிமேலும் என்ன நட்பு வேண்டியிருக்கின்றது? அபிராமியின் வழியிருக்கையில் மற்ற வழிகள் ஏன் தேவை? அவ்வழியில் சென்று அழுந்தும் கயவர்களின் நட்பும் நமக்கெதற்கு? அன்னையின் வழியே உத்தமம். அவள் திருவடிகளே சரணம்...

லலிதாம்பாள்.jpg

பாடல் எண்பது


கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே


விளக்கம் :

பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகான என் அபிராமி அன்னையே... நீயே என்னை உன் அடியார்க் கூட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டாய். எனது கொடிய வினைகளையெல்லாம் ஓட்டிவிட்டாய். என்னை நோக்கி ஓடிவந்தாய். உன் திருவுருவை உள்ளபடியே எனக்குக் காட்டினாய். அத்திருவுருவைக் கண்ட என் கண்களையும், மனத்தையும் இன்புறச் செய்தாய். அக்களிப்பிலே என்னை நடமாட வைத்தாய்..
இதோ அன்னை வெளிப்பட்டாள்... தன் திருவுருவினைத் தன் அன்பனான அபிராமிப் பட்டருக்குக் காட்டினாள். தன் காதணியைக் கழற்றி விண்ணில் எறிந்தாள். தை அமாவாசை அன்று அன்னையின் காதணி வானில் நிலவென நின்று ஒளிர்ந்தது. இதோ இப்பாடல்களைப் பாடும் வேளையில் நம் மனத்திலும் இத்திருக்காட்சி தென்படுவதை நாமும் உணர்கின்றோமல்லவா? தன் அடியவர்க்கு வரும் துயரை
எல்லாம் துடைத்திட அன்னையானவள் தானே நேரில் வருகின்றாள்.. சந்திரனைப் படைத்ததும் அன்னைதானே... அவள் ஆணையை ஏற்று சந்திரன் அன்று வெளிப்பட்டிருக்க மாட்டானா?


இயற்கையைப் படைத்தவள் அவ்வியற்கைக்கென்றே சில நியதிகளையும் நிர்ணயித்தாள்.. அந்நியமங்களை மீறுவதற்கு அவளுக்கு அதிகாரம் உண்டு.. ஆயினும் அவள் அதைச் செய்யவில்லை. தான் நியமித்த நியமங்களை அவள் மீறவில்லை.. ஆயினும் நிலவினை விட ஒளி படைத்த தன் காதணியை எடுத்து விண்ணில் எறிந்தாள்..சந்திர சூரியரைப் படைத்த அன்னையின் காதணியும் தன் கடமையைச் செவ்வனே செய்தது. அன்றைய நாள் உலகுக்கு நிலவென நின்ற பெருமையையும் பெற்றது.. உலகத்தோர் வியந்தனர். கள்வர்கள் வெட்கித் தலைநாணினர். மன்னனும் அதிசயித்தான். விரைந்து ஓடி நெருப்பின் நடுவே நின்றிருந்த பட்டரைக்  கீழே வரச்செய்தான். அன்னையின் திருவருளை உணர்ந்து கொண்டான். கண்கள் மூடி ஒருமுறை இப்பாடலை ஓதிப் பாருங்கள்.. அபிராமிப் பட்டரின் உள்ளத்து நெகிழ்ச்சி அவர் பாடலில் தென்படுவதை உணர்வீர்கள்..அத்தனை மகிழ்ச்சி... அபிராமிப் பட்டர் நெருப்பின் நடுவே தான் வீழுவதைக் காத்ததற்காய் மகிழவில்லை.. அன்னையின் திருவருளை அகிலம் அறிந்து கொண்டதற்காக மகிழ்ந்தார். தனக்கு அன்னையின் திருக்காட்சி கிட்டியதற்காக
மகிழ்ந்தார்... அதுதான் ஒரு பக்தனின் உண்மையான மகிழ்ச்சி..."ஆடகத் தாமரை ஆரணங்கே" பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகியே...


அபிராமி அன்னையே... "என்னைத் தன் அடியாரில்" "கூட்டியவா" என்னை உனது அடியார்களின் கூட்டத்தில் சேர்த்தவளே... "கொடிய வினை ஓட்டியவா" எனது கொடிய வினைகளை ஓட்டியவளே... "என் கண் ஓடியவா" என்னை நோக்கி ஓடி வந்தவளே.... "தன்னை உள்ள
வண்ணம் காட்டியவா" உனது திருவுருவை உள்ளபடியே காட்டியவளே... உன் திருவருளால் உன் காதணியை நிலவெனக் காட்டியவளே... "கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா" உன்னைக் கண்டதும் என் கண்களும் மனமும் இன்புறும் வண்ணம் செய்தவளே... "நடம்" "ஆட்டியவா" அவ்வின்பத்தில் என்னை நடனமாடச் செய்தவளே.... உன் கருணையே கருணை... என் விழிகளில் உன்னைக் காட்டினாய்.
என் மனத்திற்கு இன்பத்தைக் கூட்டினாய். உலகிற்கு நிலவினைக் காட்டினாய்..நீயே தெய்வம் என்பதை அனைவருக்கும் உணர்த்தினாய்.. அன்னையே... உன் கருணைப் பேராற்றில் என்னைக் கரைத்து விட்டவளே... அபிராமியே... உன்னை எப்படித்தான் போற்றுவதோ...?


பாடல் எண்பத்து ஒன்று


அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என் கண் நீ வைத்த பேரளியே


விளக்கம் :

  அழகிய அபிராமி அன்னையே... அனைத்துத் தெய்வங்களும் உனது பரிவாரங்களே... ஆகவே அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். அவர்களைப் போற்ற மாட்டேன். அறிவில்லாத சிறியேன் என் மீது நீ வைத்த பேரன்பினால், நெஞ்சத்தில் வஞ்சகம் கொண்ட கொடியவரோடு நட்பு கொள்ள மாட்டேன். தங்களுடையதெல்லாம் உன்னுடையதென்றிருப்பவர்கள் சிலரே. அத்தகைய ஞானிகளோடு நான் சண்டையிட மாட்டேன். அன்னை காட்சியளித்த பின்னர் அபிராமிப் பட்டரின் பாடல்களில் உற்சாகம் கரைபுரண்டோடுகின்றது. அதுவரை அச்சத்திலும், அரிய நம்பிக்கையிலும் பாடிய பட்டர், இப்போது அளவற்ற ஆனந்தக் கூத்தாடுகின்றார். அதனால்தான் உன்னைத் தவிர வேறு யாரையும், எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டேன். ஏனெனில் எல்லாத் தெய்வங்களும் உனது பரிவாரங்கள்... எனவே அவர்களைப் போற்ற மாட்டேன். வணங்கமாட்டேன். உனது பேரன்பினால் வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன். உன்னையே தஞ்சமென்றடைந்த ஞானிகளிடம் பிணங்க மாட்டேன் எனப்பாடுகின்றார்.


உலகில் நம் வாழ்க்கை நல்வழியில் சென்று கொண்டிருந்தாலும், சிற்சில சமயங்களில் வஞ்சகரின் நட்பு - கூடா நட்பு நம்மை வந்தடைகின்றது. நம்மால் அவற்றை உதறித் தள்ள இயலாது. வல்லமையும் நல்நெஞ்சும் படைத்த கர்ணனே, துரியோதனின் நட்பை உதறித்தள்ள இயலாது அழிந்தான். ஆயினும் அன்னையின் பெருங்கருணையானது நம்மை அப்படிப் பட்ட நட்புக்களிடமிருந்து
காத்தருள்கின்றது. தங்களின் மெய், பொருள், ஆவி அனைத்தும் உனதே என்று உன் மேல் பற்றுவைத்து வாழும் ஞானியரின் நட்பை அன்னை நமக்குத் தந்தருள்கின்றாள். அந்நட்பும் அன்னையின் அன்பால் நம்மை விட்டகலுவதில்லை..."அணங்கே " அழகிய அபிராமி அன்னையே.... "அணங்குகள் உன் பரிவாரங்கள் " அனைத்துத் தெய்வங்களும் உந்தன் பரிவாரங்கள்.. "ஆகையினால் வணங்கேன் ஒருவரை " ஆகையால் அவர்களுள் யாரொருவரையும் நான் வணங்க மாட்டேன்.. "வாழ்த்துகிலேன் " அவர்கள் யாரையும் வாழ்த்த மாட்டேன். போற்றமாட்டேன்.
"நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் " நெஞ்சத்தில் வஞ்சம் கொண்ட வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன்.


"எனது உனது என்று இருப்பார் சிலர் " சிலர் மட்டுமே தங்களது மெய், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது என்று இருப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் ஞானிகள்.. "யாவரொடும் பிணங்கேன் " அவர்கள் யாரோடும் சண்டையிட மாட்டேன். அவர்களை விட்டு விலக மாட்டேன். "அறிவு ஒன்றும் இலேன் " அறிவே இல்லாதவன். அடி முட்டாள் (?) (பாருங்கள்.. அபிராமிப் பட்டர் அறிவில்லாதவராம்) "என் கண் நீ வைத்த பேரளியே" என் மீது நீ வைத்த பேரன்பினை என்னவென்றுரைப்பேன்..அன்னையே அறிவில்லாத எளியேன் என் மீது நீ வைத்த பேரன்பால், வஞ்சகர் தொடர்பில்லாது ஞானியர் தொடர்பு கிட்டியது. அவர் நட்பை நான் என்றும் விலக்கேன். உன்னைத் தவிர அனைத்துத் தெய்வங்களும் உன் பரிவாரங்களே... எனவே அவர்களை நான் வணங்கேன். வாழ்த்தேன்.. உன்னை மட்டுமே வணங்குவேன். அழகிய
அபிராமியே... உன்னை மட்டுமே வாழ்த்துவேன்.

Lalithasri.jpeg

பாடல் எண்பத்திரண்டு


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

விளக்கம் :

வண்டுகள் மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே...அபிராமி அன்னையே... இவ்வுலகமெல்லாம் ஒளியாக நின்ற உந்தன் ஒளிரும் திருமேனியை எண்ணும்போதெல்லாம், எந்தன் ஆழ்மனது மகிழ்ச்சியுற்று விம்மி, மகிழ்வெள்ளத்தில் கரைபுரண்டு ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றது. உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன்...? அன்னையை மறப்பதென்பது பட்டரால் இயலும் காரியமா? அவளை எண்ணும்போதெல்லாம் அவர் ஆழ்மனங்களெல்லாம்... மகிழ்கின்றனவாம். மகிழ்ச்சி வெள்ளத்தில் விம்மி கரைபுரண்டு, வெளியாகி - ஆகாயமாகி விடுகின்றனவாம். அதாவது வெளியெல்லாம் பரவி நிற்கும் அன்னையோடு ஒன்றி விடும்போது அன்னையை... அவள்
சாமர்த்தியத்தை எப்படித்தான் மறக்க இயலும்? இப்பாடலைப் பாடும்போதே நமது அந்தக்கரணங்கள் அன்னையின்பால் செல்வதை உணரலாம்... ஆயின் அதை அனுபவித்துப் பாடிய அபிராமிப் பட்டர் எப்படிக் களித்திருப்பார்!!



"அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே" வண்டுகள் மொய்த்திருக்கின்ற தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... "அகில அண்டமும் " அகில உலகும் "ஒளியாக நின்ற " ஒளியாய் நின்ற "நின்" "ஒளிர் திருமேனியை" உனது ஒளிர்கின்ற திருமேனியை "உள்ளுந்தொறும்" நினைக்கும்போதெல்லாம் "அந்தக் கரணங்கள்" எனது ஆழ்மனங்களெல்லாம்..."களியாகி" மகிழ்ச்சியுற்று "விம்மி "
விம்மி "கரைபுரண்டு" கரைபுரண்டு "வெளியாய் விடில்" ஆகாயத்தோடு ஒன்றிவிடும்போது... ஆகாயமாய் நிற்கும் உந்தன் பேரொளியோடு ஒன்றி விடும்போது ... "எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே" என் மனத்தை இப்படி மகிழ்விக்கும் உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன் அபிராமியே...தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..நாம் தரும் உரைகளில் பிழைகளோ திருத்தங்களோ இருப்பின் பெரியோர்கள் மன்னித்து, அவற்றைத் திருத்தி இவ்விடம் பதிவு செய்யும்படி அன்போடு
வேண்டுகின்றோம். நன்றி..

ஸ்ரீலலிதா.jpg

எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்


--Geetha Sambasivam 13:19, 31 மார்ச் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2011, 08:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,786 முறைகள் அணுகப்பட்டது.