அபிராமி அந்தாதி விளக்கவுரை 20

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் எழுபத்தொன்று

Syamala.jpg

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே

விளக்கம் :

தன் அழகுக்கு ஒப்புமையாக யாருமே இல்லாதவள் அன்னை அபிராமி. அருமையான வேதங்கள் எப்போதும் பழகிக் கொண்டிருப்பதால் சிவந்த திருவடித்தாமரைகளையுடையவள். குளிர்ச்சியான இளம்பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை நிறங்கொண்ட கோமளவல்லியான அன்னை உனக்குக் கொம்பு போல் துணையாக இருக்க, மனமே நீ எதையும் இழந்து ஏக்கம் கொள்ள வேண்டாம்.
உனக்கென்ன குறையுண்டு? அருமையான பாடல். மனக்குறையைத் தீர்க்கும் அருமருந்தான பாடல். அன்னை அபிராமி அருகிருக்க ஏன் அழுகிறாய் நெஞ்சே... மனமே உனக்கென்ன குறையுண்டு...? என மனத்தினை அமைதி செய்யும் அருமையான பாடல் இது..."அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" தன்னுடைய பேரழகுக்கு இணையாக ஒப்புமை கூறும்படி இவ்வுலகில் யாருமில்லாத தன்னிகரற்ற அழகுடைய அன்னை அபிராமி...


அன்னையின் பேரழகுக்கு யாரையாவது ஒப்புமை சொல்ல இயலுமா? அவளின் அழகு ஈடு இணையில்லாதது.. "அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்" அருமையான வேதங்கள் பழகுவதால் சிவந்த திருவடித் தாமரைகளையுடையவள்.. வேதங்களைத் தனது சிலம்பாக அணிந்தவள் என முன்னர் குறிப்பிட்ட அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை எப்போதும்  அவளின் திருவடிகளை ஒன்றியே இருப்பதால், அன்னையின் திருப்பாதங்கள் சிவந்தன என்று குறிப்பிடுகின்றார். "பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க "குளிர்ச்சியான இளம் பிறையைத் தன் திருமுடியிலே அணிந்த பச்சை வண்ணக் கோமளவல்லி எனும் கொம்பு போன்ற துணையிருக்க.. இளம் நிலவை இத்தனை அழகாக யாரேனும் பாடியுள்ளனரா என்பது ஐயமே... "பனிமாமதியின் குழவி" குளிர்ச்சியான பெரு நிலவின் குழந்தை எனும் பொருள் பொருள் படுகின்றது. அன்னையின் திருமுடியில் காணும் பிறை நிலவு அபிராமிப் பட்டருக்கு பெருநிலவின் குழந்தை எனத் தோன்றுகிறது..


அதைத்தான் இவ்வண்ணம் உரைக்கின்றார். "இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் " இழந்து இழந்து வருத்தமுறும் என் மனமே... ஏக்கம் கொள்ளாதே... மனத்தின் இயல்பு இது.. சிறுவயது தொடங்கி மரணமடையும்வரை மனமானது இழந்தவற்றிற்கெல்லாம் ஏக்கம் கொண்டு அழுகின்றது. ஏ மனமே... நீ ஏன் அழுகின்றாய்...எல்லாவற்றையும் நீ இழந்தாலும், உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை
அபிராமி இருக்கின்றாள்.. ஏக்கம் கொள்ளாதே... "உனக்கு என் குறையே" உனக்கு என்ன குறையுண்டு? உன்னைத் தாங்கும் கொம்பாக அன்னை அபிராமியிருக்க உனக்கென்ன குறையுண்டு என் மனமே... நீ கலங்காதிரு.... இளம் கொடி பற்றிப் படரக் கொம்பொன்று அவசியம். கொம்பில்லையெனில் அக்கொடியின் நிலை பரிதாபமே... மனமே...நீ பற்றிப் படர உனக்கு அபிராமி எனும் கொம்பு உன் அருகேயுள்ளது. பற்றிக் கொள்.. நீ இழந்த எதை எண்ணியும் வருந்தாதே..அழாதே.. உனக்கெந்தக்  குறையும் இல்லை...


பாடல் எழுபத்திரண்டு


என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே

விளக்கம் :


நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையான அன்னை அபிராமியே... தன் குறைகள் எல்லாம் தீர்வதற்காக எங்கள் ஐயன் சங்கரனார் தன் திருமுடி மீது வைந்த உந்தன் திருவடித் தாமரைகளையே நானும் எனது குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன். இனிமேலும் எனக்கு ஒரு பிறவி வந்தால் அது உன் குறையே... வேறு யார் குறையுமல்ல...அன்னை மேல் எவ்வளவு உரிமை கொண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பார்.? உன்னை.. உன் திருவடித் தாமரைகளை நான் போற்றி வணங்குவதால் இனி எனக்குப் பிறவி இல்லை... மீண்டும் நான் பிறந்தால், அது உன் குற்றம்தான்... வேறு
யாருடைய குற்றமுமல்ல என அன்னை மேல் தான் கொண்டிருக்கும் உரிமையைப் பறைசாற்றுகிறார். "இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்" நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான அன்னை அபிராமி.. மின்னல் தனது ஒளியின் தன்மையில் வலிமை பெற்றிருந்தாலும், அதை நாம் நோக்கும் போது அது மிகவும் மெலிந்தது என்பதை அறிகின்றோம். எனவேதான் முன்னர் ஒருமுறை மின்னலையொத்த  இடையையுடையவளே எனப் பாடினார் அபிராமிப் பட்டர்.


நம் கவிஞர்கள் பலரும், பெண்ணின் இடையை மின்னலுக்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கின்றனர். ஆனால் இப்பாடலில், அம்மின்னலைக் குறை சொல்லும்படி இன்னும் மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையானவள் என்று அம்மையைப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். "தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே " தனது குறைகள் எல்லாம் தீர்ந்து போக எங்கள் தலைவனான சிவபெருமான்
தனது சடைமுடி மேல் வைத்த உனது திருவடித் தாமரைகளையே... "என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் " நானும் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போகும்படி நின்று வணங்கிப் போற்றுகின்றேன்.. "இனி யான் பிறக்கின்" இனிமேலும் நான் பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... "நின் குறையே அன்றி யார் குறை காண்" அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப் போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது..நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய குற்றம்தான்.. அன்னையே.. என் குறைகளெல்லாம் தீர்த்து என் பிறவியை அறுத்துவிடு.. மீண்டும் என்னை பிறவாமல் செய்து விடு....


பாடல் எழுபத்து மூன்று


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

விளக்கம் :

அபிராமி அன்னையே.. நீ அணியும் மாலை கடம்ப மலர்களால் ஆனது. உனது படைகளோ ஐவகை மலரம்புகள். உனது வில் கரும்பு வில். வைரவர் உன்னை வணங்கும் நேரம் நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன..உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள், ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்,
இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள். அன்னை கொண்டுள்ள வில், அம்புகள், அவள் அணியும் மாலை, வைரவநாதர் அவளை
வணங்கும் நேரம் இவையெல்லாம் அன்னையே உன் பெருமைகள்.. எனக்கென்று நீ தந்துள்ள செல்வம்.. நீதான்.. நீயே பெரும் செல்வம்... என அபிராமிப் பட்டர் உரைப்பது சிறப்பு. குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும் பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.


"தாமம் கடம்பு" அன்னையே நீ அணிந்துள்ள மாலையானது கடம்ப மாலை.. "படை பஞ்ச பாணம்" உனது படைகளோ ஐவகை மலரம்புகள்... "தனுக்கரும்பு" உனது வில்லோ கரும்பு வில். "யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது" வைரவர் உன்னை வணங்கும் நேரமானது நள்ளிரவு... சிவாலயங்களை இரவில் காக்க வேண்டிய பொறுப்பு வைரவரிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே வைரவர் அன்னையை வணங்கும் நேரம் நள்ளிரவே.. "எமக்கு என்று வைத்த சேமம்" இத்தனை பெருமைகளையுடைய அன்னையே..நீ எமக்கென்று வைத்துள்ள செல்வங்களாவன... "திருவடி" உனது திருவடிகள்..."செங்கைகள் நான்கு" அபயந்தந்து வரமளிக்கும் உனது செம்மையான நான்கு
திருக்கரங்கள்..."ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை " ஒளிபொருந்திய,செம்மையான அம்மையே... உனது திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்.."ஒன்றோடு இரண்டு நயனங்களே" உனது மூன்று திருக்கண்கள்.. இவையே நீ எமக்களித்த செல்வங்களாகும்...உனது பெருமைகள் நீ கடம்ப மாலை அணிந்து, பஞ்ச பாணங்களை படைகளாகக் கொண்டு, கரும்பு வில்லையேந்தியிருப்பது.. அகிலத்தைக் காக்கும் உந்தன் ஆலயத்தைக் காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமோ நள்ளிரவு... எனக்கு நீ அளித்த செல்வமோ... நீதான்... நீயே என் செல்வம்.... என் சேமம்.... உன் திருவடிகள், உனது திருக்கரங்கள், உன் திருநாமம், உன் திருக்கண்கள்..அபிராமியே... காத்தருள்வாய்....


பாடல் எழுபத்து நான்கு


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?

விளக்கம் :


மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும், பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன் என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில் தங்கி மகிழும் பயனை விரும்புவரோ? "இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று அரங்கனைப் பாடிய ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது..பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், வேதங்களும் போற்றி வணங்கக்கூடிய அன்னையபிராமியின் திருவடிகளைப் பற்றினோர்க்கு எல்லாச்  செல்வங்களும் கிட்டும். ஆயினும் அவர்களுக்கு அச்செல்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல... அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை..."நயனங்கள் மூன்றுடை நாதனும் " மூன்று கண்களையுடைய சிவபெருமானும், "வேதமும்" நால்வகை வேதங்களும், "நாரணனும்" நாராயணனும், "அயனும்" பிரம்மனும் "பரவும்" வணங்கிப் போற்றும் "அபிராமவல்லி அடியிணையைப்" அபிராமி அன்னையின் திருவடிகளை... "பயன் என்று கொண்டவர்" தங்களின் பயன் என்று கொண்ட அடியவர்கள் "பாவையர் ஆடவும் பாடவும்" மகளிர் ஆடிடவும், பாடிடவும், "பொன் சயனம் பொருந்தும் " பொன்னாலான கட்டிலினையுடைய
"தமனியக் காவினில்" பொற்காட்டினில், இந்திரலோகத்தில்.... "தங்குவரே?" தங்கி இன்புறும் மகிழ்ச்சியினை விரும்புவார்களோ???


மானுட மனமானது சிற்றின்பத்தை நாடுகின்றது.. இந்திரலோகம் என்பது சிற்றின்பத்தின் கனவு.. பொன் நிறைந்த காட்டினில், பொன்னாலான படுக்கையில் படுத்திருக்கும் வேளையில், தேவ மகளிர் வந்து ஆடிப்பாடி நம்மை மகிழ்விக்கும் ஒரு நிகழ்வு என்பது சிற்றின்பத்தை நாடும் மனது வேண்டுவது... ஆனால் அதுவோ நிலையான இன்பம்? அன்னை அபிராமியின் திருவடிகளை அபயம் எனப் பற்றி, அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பைப் பெற்று அவள் அடியாராகும் இன்பமே பேரின்பம்.. அதுவே நிலையானது.. ஆகவேதான் உலகம் போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன.. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும்
மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர்.. மனமே...நீயும் அவள் திருவடிகளையே பற்று.. அவளே அபயம் என்பதை உணர்... அவளையே சரணடை... அவளே உன்னைக் காப்பாள்.. உன்னைத் தன் அன்பர்க் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை உனக்களிப்பாள்... அபிராமியின் திருவடியிணைகளே சரணம்........

Thiridevi.jpeg

எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்


--Geetha Sambasivam 13:14, 31 மார்ச் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2011, 09:53 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,793 முறைகள் அணுகப்பட்டது.