அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 29

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


பாணன்,விறலி, ஆற்றுப்படை, பரிபாடல், நாச்சியார் திருமொழி, திருவாசகம், திருப்புகழ், கோபால கிருஷ்ணபாரதியார், அருணாச்சல கவிராயர், மஹாகவி பாரதியார் எல்லாருமே நீரோட்டங்கள். ஊற்றாகப் பெருகி வரும். சிற்றோடையாக ஆடி வரும். ஆறாக ஓடி வரும். மஹாநதியாக பிரவாஹமெடுத்து, ஆடியும், ஓடியும், கலகலவென்று பாடியும் வரும். ஏன்?, நுறையும், நுங்குமாக, பொங்கியும் நீர் வீழ்ச்சியும் ஓரழகிய நீரோட்டம் தான். ஓடும் மேகங்கள் சுமப்பது நீரின் ஆவியே. மெல்ல மெல்ல நடந்து வரும் பனி ஆறு சுமப்பது கங்கையம்மனின் பால்யம். ஒரு பார்வை: கலையின் அழகு படைப்பில். படைப்பின் ஆத்மா, இந்த நீரோட்டத்தில். இந்த பீடிகை, உச்சரிப்புக்கே சவாலாக அமைந்த பெயருடைய, வாழ்வியலின் சவாலை சமாளிக்க சில அரிய ஆலோசனைகள் அளித்த ஹங்கேரிய மனோதத்துவ பேராசியர் ‘சிக்ஸெண்ட்மீஹைஇஇ’யை (Mihali Csikszentmihalyi) அறிமுகம் செய்ய. அவருடை பிறந்த தினம், ஸெப்டம்பர் 29, 1934. மிஹலி என்று சுருக்கமாக அவரை குறிப்பிடுவோம்.
மிஹலிக்கு ‘இவ்வருட சிந்தனை செம்மல்’ என்று விருது 2000ல் அளிக்கப்பட்டது. மக்களுக்கு மகிழ்ச்சி, திருப்தி, நிறைவு ஆகியவை கிடைப்பது எப்படி என்ற ஆய்வில் தன் வாழ்நாள் முழுதும் செலவழித்த மிஹலியின் தீர்வு: எதோ ஒரு ஈடுபாடு ~பக்தி/தேசாபிமானம்/ சமதாயப்பணி/அரசியல் கடமை/மீன் பிடிப்பது/வேப்பம்பூ ரஸம்/இலக்கியம் படைப்பது ~ அது யாதாயினும், அதில் ஆழ்ந்து செயல்படும்போது, நேரம் போவது தெரிவதில்லை; மன நிறைவு ததும்புகிறது; இது ஒரு நீரோட்டம் போல. செயலின் இலக்கு அந்த செயலே. அகம்பாவம் காணாமல் போய் விடுகிறது. செயல்களின் சங்கிலித்தொடர் கண்டீரோ? படைப்பாற்றலும் அந்த சங்கிலித்தொடரில் மிளிரும் அணிகலன்களில் ஒன்று. உலகின் தலை சிறந்தப் படைப்பாளிகளில் 90 பேர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த மிஹலி, இளம்பிள்ளை வாதத்திற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சாக்ஸ் என்ற விஞ்ஞானியின் மன நிறைவையும் அதை சாதித்த நீரோட்டத்தையும் ஆய்வு செய்த பின் சொல்வதாவது: படைப்பு இல்லையெனில் நிறைவு இல்லை. படைப்பின் உயிர்நாடி, இந்த நீரோட்டத்தில்.


உளவியல் என்ற சொல்லை விட மனோதத்துவம் என்ற சொல் எனக்கு பிடித்திருக்கிறது. சமீபத்தில் அரிஸ்டாட்டில் என்ற கிரேக்க தத்துவஞானியின் அறிவுரைகள் எவ்வாறு இன்றைய உலக சூழ்நிலையில் பயன்படுகின்றன என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதே சமயம் என்றோ படித்த கீழ்க்கண்ட நூல்கள் ஞாபகத்தில் வந்தன.


Bertrand Russell: Conquest of Happiness;
Andre Maurois:The Art of Happiness: Selected Writings;
(Author not remembering): JOY


அமெரிக்கன் மனோதத்துவ மன்றத்தின் தலைவர் மார்ட்டின்.செலிக்மன் சொல்வது போல, அவற்றை நினைவு கூர்ந்த பின்னும், மிஹலியின் சிந்தனைக்கு நம் எல்லோரின் வாழ்வியலை மேன்படுத்தும் இயல்பு உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது. அவர்கள் இருவரும் இளம் மனோதத்துவ நிபுணர்களை ஆரோக்கியமான வழிமுறைகளில் மனிதனின் மனோபலத்தை சிறப்புற வகையில் கூட்டும் முயற்சிகளில் செயல்படுகிறார்கள்.


இதில் எனக்கு அதிகப்படி ‘நீரோட்டம்’ யாது எனில், தமிழறிஞர் ரெ.கா. என் எழுத்தை ஆற்றுப்படை போல என்றார். ஒரு சமயம், இது நீர்வீழ்ச்சி என்றார், திருமதி.கீதா சாம்பசிவம். நான் மின் தமிழில், ‘நீயிரும் வம்மின்’ அல்லது ‘சிந்திப்போமே’ இழையில் மிஹலியின் ‘நீரோட்டம்’ என்ற சிந்தனையை விவரித்தபோது, அதை பெரிதும் வரவேற்றார், திரு.ரெ.கா.


இந்த வாழ்வியல் ட்யூட்டோரியலை பற்றி தமிழில் நிறைய சொல்வதற்கு இருக்கிறது. இது செல்லுபடியாகட்டும், முதலில். இன்று என்ரிக்கோ ஃபெர்மி என்ற ஜீனியஸ்ஸை பற்றி எழுதுவதாக இருந்தேன். அவரை அடுத்த வருஷம் வரச்சொல்லி விட்டேன்.


இன்னம்பூரான்
29 09 2011


உசாத்துணை;
Mihaly Csikszentmihalyi talks about Flow
http://www.pursuit-of-happiness.org/history-of-happiness/mihaly-csikszentmihalyi/










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:27, 30 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 30 செப்டெம்பர் 2011, 05:28 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,682 முறைகள் அணுகப்பட்டது.