அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 28

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


லேசாகக் காய்ச்சலடிச்சாலும் பத்து மாத்திரை!
கிலேசமாச்சுதடி, வலிக்குதுன்னு முனகினா.
ஊசி போட்டுட்டானே, வெள்ளைக்கோட்டு டாக்டரு.
காசு, பணம் எல்லாம் பிடுங்கிட்டாரு டாக்டரு!


இப்படித்தான் இந்தக்காலம்! அண்டிபயாடிக்ஸ் மாத்திரை எல்லாம் ஆனை விலை, குதிரை விலை. வாயில் நுழையாத பேர்கள் வேறே. அந்தக்காலம் என்றால், 1946/47 காலகட்டம் என்க. புதுக்கோட்டையில் பரமசிவம் பிள்ளை என்று திவான் இருந்தார். மாஜி திவானாகவும் இருந்திருக்கலாம். என்னமோ வியாதி. பென்சிலின் வேணுமாம். மதராசுக்குக் கார்கள் பறந்தன. எங்களிடையே, கண்ணும்,காதும், மூக்கும் வைத்து, வதந்திகள் பறந்தன. இந்த மருந்து வந்த விதம் சொன்னால் ,மூக்கில் விரலை வைப்பீர்கள், வியந்து போய். ஸர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்க் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர், ஆறு வாரம் விடுமுறை நாட்கள் கழிஞ்சு, ஸெப்டமர் 28, 1928 அன்று தன் சோதனைச்சாலையில் நுழையராரு. போர அவசரத்திலே கழுவாம வச்சுருந்த சோதனைத்தட்டில், எங்கிருந்தோ வந்த பெனிசிலின் மாசு/பசலை (mould ~உளுந்து வடை ஊசிப்போறமாதிரி) மகிஷாசுரமர்த்தினி போல, கிருமிகளை த்வம்சம் செய்திருந்ததைக் கண்டு வியந்தார். தற்செயலாக வந்தடைந்த இந்த மருத்துவ நிகழ்வு, அவருக்கு நோபல் பரிசு வாங்கிக்கொடுத்தது; இரண்டாம் உலகயுத்ததின் போது, பல வீரர்களின் உயிரை காப்பாற்றியது. எனக்கு மார்க் வாங்கிக்கொடுத்தது. 1947ம் வருடம், முதல் முறையாக எஸ்.எஸ்.எல்.சியில் அப்ஜெக்டிவ் கேள்விகள். ஒரு சொல் விடை பகுதியில் பென்சிலுனுக்கு ‘சர்வரோக நிவாரணி’ (ரைட்டு ஆனா தப்பு!) என்று ‘கீர்த்’ பாடி, மார்க் வாங்கினேன். இது நிற்க.


1929ல் இது பற்றி அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு. பத்தே வருடங்களில், ஃப்ளோரி என்பவரும், சையின் என்பவரும் பென்சிலின் மருத்துவ குணங்களை எடுத்துக்கூறினர். அதை பெருமளவு உற்பத்தி செய்யும் வகையை ஹீலி என்பவர் கண்டு பிடித்தார். ஸர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்க் அவர்களின் மற்றொரு முக்கியமான கண்டுப்பிடிப்பு: உமிழ்நீர், சளி போன்ற உடல் சுரக்கும் திரவங்களுக்கும் கிருமி நாசினி சக்தி இருக்கிறது என்பதே. 1921ல், அதுவும் தற்செயலாக, லைஸோஸைம் என்ற அந்த பொருளை பற்றி கண்டுபிடித்தார். பென்சிலினை விட இதை தான் முக்யமாகக் கருதினார். இது ஒரு புறமிருக்க, 1941ல் பென்சிலைனை ஒரு நோயாளிக்குக் கொடுக்க முடிந்தது. ஒரு சிறுமியை 1943ல் ஃப்ளெமிங்க் காப்பாற்றி விட, அது பெரிய மருத்துவ செய்தியாக கருதப்பட்டு, ஒரு பெனிசிலின் கமிட்டி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி துவங்கியது. 1943லியே கிருமி அடிப்படையில் ஸ்டெ ரெெப்டோமைசின் வந்தது. 1950/60 களில் அமோக அண்டிபயாடிக்ஸ் வரவு. தொத்து வியாதிகள் ஓடி மறைந்தன, என்றார் அமெரிக்காவின் சர்ஜன்ஜெனெரல் ஸ்டீவர்ட். அது மிகை என்று பிற்காலம் அறிந்தோம். கிருமிகளும், ஸூப்பர் கிருமிகளும் 2011ல் நடமாடுகின்றன. தற்காலம், அதி வேகமாக முன்னேறிய விஞ்ஞானம், நவீன உத்திகளை கையாண்டாலும், கோடிக்கணக்கான இயற்கை அளிக்கும் ஆண்டிபயாட்டிக்ஸ்ஸின் ஆளுமை அதிகம் தான் என்பதில் ஐயமில்லை. ஒரு விஞ்ஞானக்குறிப்பு, இந்தியாவில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நாட்டு மருந்தாக சில பசலைகள் (மோல்ட்) பென்சிலின் போல் பயன்பட்டதாக சொல்கிறது.


ஒரு உபரி செய்தி: பெரிய பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கு மேலாக நோபல் பரிசு வாங்கியிருக்கலாம். ஆனால், இரண்டு நோபல் பரிசு பெற்றவர்களை அளித்த ஒரே பள்ளிக்கூடம்: கில்மார்க் அகாதமி: சர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங்க் & பாயிட் ஆர் பிரபு.
இத்தனை சமாசாரங்களை எனக்கு அளித்தது இங்கிலாந்தின் நாடாளுமன்றம். கில்மார்க் தொகுதியின் பிரிதிநிதி திரு,டேஸ் ப்ரெளன் மே 11, 2009 அன்று பெருமையுடம் ஆற்றிய உரை. நம்மவர்களுக்கோ வெளி நடப்பு செய்யவே நேரம் போதவில்லை! ஹூம்!
பாமர கீர்த்தி மாதிரி, விஞ்ஞான போதினி ஒன்று தேவையோ? இல்லை. ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்த பராமுகக் கீர்த்தி மாதிரி ஆகி விடுமோ?


இன்னம்பூரான்
28 09 2011
http://stampshungary.com/files/filainfo/images/011_alexander_fleming_0.preview.jpg

உசாத்துணை:
http://www.publications.parliament.uk/pa/cm200809/cmhansrd/cm090511/debtext/90511-0021.htm#0905122000002










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:23, 28 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 28 செப்டெம்பர் 2011, 14:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,074 முறைகள் அணுகப்பட்டது.