அன்றொரு நாள்: ஜூன் 28

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அன்றொரு நாள்: ஜூன் 28


கல் தோன்றி, மண் தோன்றாக்காலத்திலிருந்து, இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நானோ வினாடியிலும் லக்ஷோபலக்ஷம் நிகழ்வுகள். அவற்றில் ஒரு நாளைக்கு ஒன்று என்று தனது நினைவுலகத்திலிருந்தும், நனவுலகத்திலிருந்தும், கனவுலகத்திலிருந்தும், படித்ததிலிருந்தும், தேடியதிலிருந்தும், ஒரு நிகழ்வை பற்றி எழுதவே ஒரு நாள் பிடிக்கிறது. கட்டுரை நீண்டு விடுகிறது. ‘ஏன் இந்த எமெர்ஜென்ஸியை பற்றி அரைகுறையாகவும், சுருக்கமாகவும் எழுதி விட்டீர்கள்?’ என்று ஒரு நண்பர் வினவினார். ‘என்னால் இயன்றதை மட்டுமே நான் எழுத முடியும். இது யாவரும் பொறுப்புணர்ச்சியுடன் மடலாடும் இழை. திருவேங்கிடமணி கேட்ட மாதிரி வினாக்களும் நல்வரவே.’ என்றேன். இது நிற்க.


இன்று மூன்று நிகழ்வுகளை பற்றி எழுதவேண்டிய வரலாற்று நிர்பந்தம்.


ஜூன் 28,1914: அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்டிரிய இளவரசர் ஃப்ரான்ஸ் ஃபெர்டினாண்டும் அவரது மனவி ஸொஃபியும் கவிரோ ப்ரின்ஸிப் என்பவனால் சரஜீவோ என்ற ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவமே லக்ஷக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்ட முதலாவது உலக யுத்ததிற்கு அடி கோலியது.


ஜூன் 28,1919: முதலாவது உலக யுத்தம் முடிந்து, சரணடைந்த ஜெர்மனி,வெர்ஸேய்ல்ஸ் என்ற ஃப்ரென்ச் இடத்தில் சமாதன ஒப்பந்தம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. கடுமையான ஷரத்துக்கள்.அமெரிக்க ஜனாதிபதி வில்ஸன் அவர்களில் நியாயமான 14 பாயிண்ட் ஷரத்துக்கள் நீர்த்துப்போயின. நாடு பறித்தல், காலனி பறித்தல், அபகீர்த்தி பெற்ற 231வது ஷரத்துப்படி கடுமையான நஷ்ட ஈடு அபராதம், ராணுவத்தை குறைத்தது எல்லாம் நடந்தேறியன. ஆக மொத்தம், ஜெர்மானிய மக்களுக்கு, வறுமை, பட்டினி, இரண்டாவது உலக யுத்தத்திற்கு, இதுவே மூலாதாரம். தெரிந்தே இந்த கூத்துக்கள் நிகழ்ந்தன. பிரபல பொருளியல் வல்லுனர் ஜான் மேனார்ட் கீன்ஸ் ‘சமாதானத்தின் பொருளியல் தாக்கங்கள்’ என்று எழுதிய நூல் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதன் படிப்பினைகளை மறக்கலாகாது.


ஜூன் 28,1921:‘ஆந்திர பெட்டு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்களின் ஜென்மதினம். ‘லைசன்ஸ் ராஜ்’ அவரால் களையப்பட்டது. அவரால் நியமனம் செய்யப்பட்ட நிதி அமைச்சர் மன் மோஹன் சிங் அவர்களின் பட்ஜெட் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது. காலம் தான் மாறிப்போச்சு. ஆளும் மாறிப்போயிட்டார்! பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்கள் பன்மொழிபுலவர். படித்த மேதை. பிரதமரான பிறகு பலவித சர்ச்சைக்கும் உள்ளானார். நேரு வம்சாவளியின் சொத்து ஆன காங்கிரஸ் கட்சியும், இவரை பிற்காலம் புறக்கணித்தது. இவருடைய ஆட்சியில் தான் பாப்ரிமஸ்ஜீத் அவலம் நடந்தது. அலஹாபாத்தில் நள்ளிரவில், போலீஸ் பாதுகாப்புடன் ஊர் வலம் வந்து வன்முறைகளை கண்ட நான், கணிசமான அளவு, இவரையும், ‘கண்டும் காணாமல்’ இருந்ததற்குக் குறை சொல்லுவேன். மற்ற சர்ச்சைகள், சேகர் குப்தாவின் குற்றச்சாட்டுக்கள் என்றெல்லாம் சுற்றாமல், திரு.ராமசந்திர குஹா இவரை பற்றி எழுதியதை, குறிப்பால் உணர்த்தி விட்டு, அவருடைய கட்டுரையின் இணைய தொடர்பு அளித்து,விடை பெற்றுக்கொள்கிறேன்.


திரு.ராமசந்திர குஹா:

‘...காங்கிரஸ் கட்சிக்கு ‘வேண்டாபடாதவராக‘ ஆகி விட்டார், நரஸிம்ஹ ராவ் அவர்கள்...இந்தியாவின் பொருள் ஆதாரத்தை அவர் உயர்த்தியதைப்பற்றி பேசாத அந்தக்கட்சி, அவரை பாப்ரிமஸ்ஜித் அவலத்துக்குக் குறை கூறினர். நேரு வம்சாவளியினர் அல்ல என்பதும் மட்டுமல்லாமல், நேரு-காந்தி குழுவுக்கு கூழைக்கும்பிடு போடாதாதும் அவர் குற்றமே!...அவருடைய சாதனைகளை மறந்து, தவறுகளை மட்டும் நினைவூட்டுவது, மிக கவனத்துடன் திட்டமிட்ட வரலாற்றுக் கூத்து...’.


மேலும்் படிக்க:

http://www.telegraphindia.com/1100327/jsp/opinion/story_12252417.jsp


இன்னம்பூரான்

28 06 2011







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:06, 29 ஜூன் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூன்_28&oldid=7182" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 ஜூன் 2011, 13:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,919 முறைகள் அணுகப்பட்டது.