அன்றொரு நாள்: ஏப்ரல் 6மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
தமிழ்நாட்டில் ராஜாஜி அவர்கள் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பெடுக்கும் திருவிழா இனிதே நிறைவேறியது. அது பற்றியும் ஒரு நாள் எழுத வேண்டும். உமது சுவை கூட்ட ஒரே ஒரு வேதாரண்ய நிகழ்வை மட்டும் இங்கே கூறுகிறேன். சாதிமதபேதமொழிந்த நுட்பத்தை அதில் காண்பீர்கள். உப்பு பொறுக்கியவர்களை கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். ஒருவர் தன்னை புரோகிதர் என்று சொல்லிகொள்ளவும், ஆணவம் பிடித்த மாஜிஸ்ட்டிரேட், உமக்கு அங்கு என்ன வேலை என்று கேட்க, அவரும் ‘கலோனிய அரசு செத்து விட்டதாகக் கேள்விப்பட்டோம். அந்திமச்சடங்கு செய்ய வந்தோம்.’ என்றார். கோர்ட்டில் கல கலவென சிரிப்பு. அடுத்து வந்தவர் தன்னை நாவிதர் என்று சொல்லிக்கொண்டார். ஏற்கனவே சினத்தில் மூழ்கியிருந்த கோர்ட்டார் அவரை பார்த்து முறைக்க, அவரும் பணிவன்புடன் ‘மொட்டையடிக்க வந்தேன்’ என்றார். சிரிப்பொலி வானை பிளந்தது. அந்த சிக்கலான வேளையிலும் தன் நகைச்சுவையை இழக்காத தமிழன் எங்கே போனான்? இக்காலம் நிஷ்டூரமும், குத்தல் பேச்சும், அசிங்கமான எள்ளலும் தான், எள்ளும் கொள்ளுமாக, வெடித்த வண்ணம்! எல்லாம் கர்மவினை!* தினந்தோறும், சளைக்காமல் கட்டுரைகளும், கடிதங்களும் எழுதி வந்த காந்தி மஹான், ஏப்ரல் 3, 1930 அன்று ‘ஐந்தாம் தேதி வருகிறது. உப்பு காய்ச்சி, கலோனிய அரசை காய்ச்சி எடு’ என்றார். அஹிம்சை பாதையிலிருந்து அணுவளவும் பிறழாதே என்றார். முதலில், தொண்டர்கள் வழி நடத்த, மக்கள் தாமாகவே கட்டுப்பட்டு இயங்கினர். போதாக்குறையாக, இது தான் தருணம் என்று கதர் பிரசாரம், மது விலக்கு பிரசாரம், கஞ்சா எதிர்ப்பு, அன்னியத்துணி பகிஷ்காரம், கிராம பரிசுத்தம், தீண்டாமை ஒழிப்பு, பசு பரிபாலனம் ஆகியவையும் சூடு பிடித்தன. இன்று கூட அநேகர் புரிந்துகொள்ளாத காந்தி மஹாத்மியம் யாதெனில், அவர் நாடியது மனமாற்றம் என்பதும், அதில் அவர் கண்ட வெற்றி, வரலாறு காணாதது என்பதும் தான். 25 நாட்களில் 40 நகரங்களிலும், கிராமங்களிலும் உரையாற்றினார். குறைந்தது ஐம்பதாயிரம் மக்கள் அவற்றால் தாக்கம் அடைந்தனர். மகுடி ஊதி மக்களை மயக்கினார் என்றால், மிகையாகாது. தண்டி யக்ஞசாலைக்குத் திரும்புவோம். ஏப்ரல் 5 மாலை தண்டி கிராமத்தை அடைந்தார், காந்தி. மற்றவர்களுக்கு இல்லாத வசதி ஒன்றையும் அனுபவிக்காத அண்ணலின் நகைச்சுவை அபாரம். உலகமுழுதிலிருந்தும் நிருபர்கள் சூழ, வல, வந்தவர், பாம்பே க்ரானிகிள் நிருபரிடம், ‘மக்களின் எழுச்சியை அடக்குமுறை செய்து உசுப்பிவிடும் அரசு, தலையிடாமல் இருக்கிறதே. என் வாழ்த்துக்கள்.’ என்றார். அன்று இரவு ஒரு பாடாகக் கழிந்தது. ‘தண்டி க்ஷேத்திரம் ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. சோத்துக்கும் தண்ணிக்கும் வழியில்லை. ஆயிரக்கணக்கானோர். ரயிலுல், ரோடும் இல்லாத இந்த சகதியில் தரும யுத்தம் நாட வந்துள்ளீர்கள்.’ என்றார். இன்றைய தினத்திற்கு 82 வருடங்கள் முன்னால், இதே தினம் காலை 8 30 மணி: குனிந்து உப்பு கலந்த மண்ணும் சகதியுமாக ஒரு பிடி எடுத்து, கலோனிய அரசை ஒரு பிடி பிடித்தார், அண்ணல் காந்தி. அவருடைய வாக்கு, ‘ இந்த பிடி சகதியின் சக்தியால், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை உலுக்குகிறேன்’. கவிதைக்குயில் சரோஜினி தான் அருகில் இருந்தார். உணர்ச்சி பொங்கிட, அவர்’ எங்களை உய்விக்க வந்த பிதாவே’ என்றார். நான் எழுதுவதை நீங்கள் படிப்பதில்லை. மார்ச் 12 அன்று, ‘இணைத்திருக்கும் படத்தில் இருக்கும் மெஜாரிட்டியை நோக்குக.’ என்றேன். யாரும் அவ்வாறு செய்யவில்லை. செய்திருந்தால் பெண்ணினம் வகித்த யாகசாலை பொறுப்பை கவனித்திருப்பீர்கள். காந்தீய பிரசாரத்தில் நடைமுறை பெண்ணியம் பீடு நடை போட்டது. போலீஸ் இலாக்கா/கலால் இலாக்கா அதிகாரிகள் இருந்தார்கள், வேறு எங்கோ ஒளிந்து கொண்டு! நிருபர்களிடம் காந்திஜி கூறினார். ‘அரசு எழையின் உப்பை ஏகபோகமாகக் கையாளும் சட்டம் உடைந்து விட்டது. இனி நாடெங்கும் உப்பு காச்சுங்கள். அரசினால் என்ன செய்ய இயலும்?’ என்றார். இந்த இழை ஒரு பின்னலிழை. எளிதில் முடிச்சு போடமுடியாது. வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து இருக்கிறது, தொடர்வது. நன்றி,
இன்னம்பூரான் 06 04 2012 http://2.bp.blogspot.com/_EUIkeX2uxLA/SImg1eD1pVI/AAAAAAAADAo/97_6B4eBbSw/s400/16.jpg
உசாத்துணை: http://www.mkgandhi.org/articles/salt_satya.htm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:09, 10 ஏப்ரல் 2012 (UTC) |