அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
என்னத்தை சொல்றது? மெய்ஞ்ஞானமோ, அழிந்து போகும், உடலாகிய மெய்யை பற்றி அல்ல. விஞ்ஞானமோ ‘மெய்யும் பொய்யோ?’ ‘பொய்யும் மெய்யோ?’ என்று வினவியபடி, தேடிக்கொண்டே இருக்கிறது. பாத்தேன்! 2011 ஐ 1835 இல் கட்டிப்போட்டேன், சந்திர மண்டல சித்திரங்களை இணைத்து விட்டு. முழுப்பொறுப்பையும் என் தலையில் சுமக்கிறேன். வினவவும். வினயமாக விடை கூறுகிறேன். ஆகஸ்ட் 25,1835 முதல் ஐந்து நாள் நியூ யார்க் கதிரவன் என்ற இதழில் காலக்ஷேபமாக நிகழ்ந்த வானவியல் கட்டுரைகளின் ரத்னசுருக்கமும், அதை அறிமுகம் படுத்த, ஆகஸ்ட் 21, 2011 இல் லண்டன் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையின் தலைப்புகளையும், அவற்றை சார்ந்த என் வினாக்களையும் முன் வைத்து, உங்களுடைய மேலான அபிப்ராயங்களை, ஆவலுடன் நாடுகிறேன்.
ஆகஸ்ட் 21, 2011 ‘அமெரிக்க ஸ்பேஸ் மையம் மனிதர்கள் வேறுலகங்களுக்கு புலன் பெயர்வதை பற்றி ஆலோசனை கேட்கிறது.’ ~ கேட்டதா?
‘கடலோடிகள் மாதிரி கிரகமோடிகள் வேண்டும். விண்ணப்பிக்கவும்.’ ~ விண்ணப்பித்தீர்களா?
‘கருவை உறைய வைத்து, வேறுலகம் சென்ற பின் உயிர்ப்பிப்போம்.’ ~ உயிர்ப்பித்தார்களா?
‘பிரபஞ்சத்தின் சுரங்கங்களை அறிவோம். அவற்றில் பயணிப்போம்.’ ~ யாத்ரா பலன் யாதோ?
‘அணுசக்தி கூட கொஞ்சூண்டு. பிரபஞ்சப்பயணம் நூற்றுக்கணக்கான வருடங்கள் பிடிக்கும்.’ ~ உயிருடன் இருந்தீரோ?
‘ஆல்ஃபா சென்சுரி’ விண்மீன் தான் நமக்கு அண்டை வீடு.’.’ ~ ஆமாம்! அடுத்த வீட்டுத்திண்ணை.
‘வாயேஜர் விண்கலத்தில் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்தால், ‘ஆல்ஃபா சென்சுரி’ அடைய 70 ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.’ ~அப்பாடா!
‘இப்புவி ஒரு அங்குலத்தின் ஐந்தில் ஒரு பங்கு விட்டமுள்ள வட்டம் என்றால், ஆல்ஃபா சென்சுரி 800 மைல தூரம்.’ ~அம்மாம் தூரமா?
GREAT ASTRONOMICAL DISCOVERIES LATELY MADE BY SIR JOHN HERSCHEL, L.L.D. F.R.S. &c. At the Cape of Good Hope [From Supplement to the Edinburgh Journal of Science]
புதிய தொலை நோக்குக்கருவியும் ,நவீன விஞ்ஞான கோட்பாடும் இங்கே...சந்திர கிரஹத்தில் கானகங்களும், மாபெரும் ஏரிகளும், பிரமிடுகள் உளன. காட்டெருமைகள் மேய்கின்றன. நீலமேக யாளிகளை மலை மேல் காண்கிறோம். வட்டவடிவம் கொண்ட அதிசயப்பிராணிகள் நடக்கவும் நடக்கின்றன; நீந்தவும் செய்கின்றன. இருகால் பிராணிகள் வசிக்கும் குடில்கள் கண்டோம்; அவை அக்னி பிரயோகம் செய்வதையும் கண்டோம். கோயில்களில் தங்க விமானம் பளபளக்கிறது.; பறக்கும் மனிதர்கள் (வெஸ்பர்டில்லியோ~ஹோமோ) வேறு. அறுபது அடி நீளமான எங்கள் தொலை நோக்கியின் உதவியால், சந்திரனின் மலைகளையும், மடுக்களையும், சமவெளிகளையும் தெளிவாகக் காணமுடிந்தது. சர்வே செய்து, அளவுகளை, இது வரை விஞ்ஞானத்தின் வரலாறு காணாத வகையில், சரி பார்க்க முடிந்தது...என்ன தான் தொலை நோக்கினாலும், ஒளி தர சூர்யன் வேண்டுமே. அதையும் சரிக்கட்டினோம். சொல்லி மாளாது. விஞ்ஞானிகளில் ஒட்டு மொத்தமான கூட்டு ஆராய்ச்சிகளினால், ஒளிமயமான தொலைநோக்கு திறன் அடைந்தோம்...ஜலவாயு~ பிராணவாயு நுண்~ஆராய்ச்சி கருவியின் மேன்மையும், உபயோகமும் விலை மதிப்பற்றவை...எங்கள் லென்ஸ்ஸெ 14,826 இராத்தல் எடை. 42 ஆயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் சக்தி யுடையது. இந்த புவியில் இல்லாத சந்திரனின் அதிசயம், அங்குமிங்கும் அலையும் மலைகள்! மலைத்து விட்டோம், ஒரு ஆழமான, விஸ்தாரமான ஏரியை பார்த்து. ஏனெனில், அது மரண ஏரி! எண்டோமியான் எரிமலைகளை கண்டோம். க்லோமெடீஸ் மலைத்தொடரில் எத்தனை குழிகள், பள்ளங்கள்!
மிக ஆர்வத்துடன் நாங்கள் கண்டுபிடித்த இரு பெரிய வளையங்களை பற்றி: ‘அவை சூரியமண்டலத்திலிருந்து பிரிந்து போன இரு துருவங்களில் அமைந்த பூலோக அமைப்புகளின் துண்டங்கள். அவை சந்திரமண்டலத்தில் சரணடைந்த விந்தையை, மர்மத்தை என்னவென்று சொல்வது?
புகழ் வாய்ந்த யேல் கல்லூரியில்: மாணவர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், ஆன்மீக/தெய்வீக/சட்ட மேதைகள் யாவரும் தினந்தோறும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களிடையே, ‘சர் ஜான் ஹெர்ஷலின் ஆய்வுகளை கண்டீரோ? சூர்யக்கதிர் இதழ் படித்தீர்களோ? சந்திரனில் மனித நடமாட்டம் பார்த்தீர்களோ?’ போன்ற கேள்விகளால், ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டு இருந்தனர்.
இது தான் சாக்கு என்று நானும் ஓடி வந்து விட்டேன்.
இன்னம்பூரான் 25 08 2011
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 00:31, 25 ஆகஸ்ட் 2011 (UTC) |
