அன்றொரு நாள்: ஆகஸ்ட் 14.1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்


வித்து ஓரிடம்; வளரும் விருக்ஷம் வேறிடம். வரலாறு முன் நின்று பேசும்; தள்ளி நின்று, தனி மொழியும் பகரும்; தோழி வாயிலென்று ஒன்றும் உண்டு. ஆக மொத்தம், அலசலும், ஆய்வும், ஆதாரங்களும் திருப்புமுனைகளை மீள்பார்வை செய்வது நலமே. அதற்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும், சற்றே விட்டேற்றியாக, தள்ளி நின்று வரலாற்றை புரிந்து கொள்வதும், மேலும் நலமே.


நாளைய தினம், இந்தியாவின் சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15 ,1947. இது விருக்ஷம். கலோனியத்துவம் மங்கி, மங்கி அணையத்தொடங்கிய தினம்; விருக்ஷம் கானகமாயிற்று சில வருடங்களில். ஆங்காங்கே அடிமைத்தளைகள் தளர்ந்து வாடி விழத்தொடங்கின. மலேஷியாவின் விடுதலையும் இத்துடன் தொடர்புள்ளதே, தொலைதூரப்பார்வையில். வித்திட்ட தினம் ஆகஸ்ட் 14, 1941, அதுவும் நடுக்கடலில்!


அன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்ட ‘அட்லாண்டிக் சார்ட்டர்’: சாராம்சம்:
இந்த இரண்டாம் உலகயுத்தத்தின்அறுவடையாக, நாடு பிடிக்கமாட்டோம்;
எந்த பிராந்தியத்திலும், மக்கள் சம்மதமின்றி மாற்றங்கள் வாரா.
மக்களுக்கு தனக்கு வேண்டிய அரசை அமைத்துக்கொள்ள முழு உரிமை உண்டு;
சுயாட்சி இழந்தவர்களுக்கு அது மீட்கப்பட வேண்டும்;
எல்லா நாடுகளிடையே சுமுகமான தங்கு தடையற்ற வணிகம் வளரவேண்டும்;
வாழ்வாதாரங்களும், செல்வ நிலையும் யாவருக்கும் மேன்மை அடையவேண்டும்;
நாஜி கொடுங்கோலாட்சி ஒழிந்த பின், சாந்தி நிலவவேண்டும்;
அவ்வாறு நிலவும் சாந்தியினால்,புவியெங்கும் யாவரும் தாராளமாக புழங்குவது எளிதாக வேண்டும்.
உலகெங்கும் அமைதி நிலவினால், வன்முறை நாடுகளின் ஆயுதக்குறைப்பு, சர்வசம்மதத்தால் நிறைவேற வழி தோன்றலாம் என்ற இலக்கு, இந்த ‘அட்லாண்டிக் சார்ட்டருக்கு’ எனலாம். இந்த பாழாப்போகும் உலகம் ஏன் இந்த இலக்கை அடையமுடியவில்லை என்பதை பிறகு பார்க்கலாம். அது நீண்டதொரு முடியா வழக்கு.

இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சில் கலோனியத்தில் ஊறின கட்டை. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், நவநாகரீக கலோனியத்தை, அமெரிக்காவின் நலனுக்காக ஆதரிப்பவர் என்று கூறினால், அதை மறுப்பது எளிதல்ல. அவர்கள் இருவரும் தலைமறைவாயினர், 1941ல் இம்மாதம், உலகப்போர் மும்முரத்தின் போது. வரலாற்று தலமாயிற்று, ந்யூஃபெளண்ட்லாந்தின் ப்ளசெந்தியா விரிகுடா. அகஸ்டா என்ற அமெரிக்கக் கப்பலும், ‘வேல்ஸ் இளவரசர்’ என்ற பிரிட்டீஷ் போர்க்கப்பலும், அவர்களின் ரகஸ்ய பேச்சு நடந்த இடங்கள். பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், இங்கிலாந்தின் கலோனிய ஆக்ரமிப்பு மனப்பான்மையை இனம் கண்டு கொண்ட அதிபர் ரூஸ்வெல்ட் தன் மனக்கிடக்கையை சர்ச்சிலுடன் பகிர்ந்து கொண்டார் என்றும், நாஜியின் ஆக்ரமிப்புக்கும், இங்கிலாந்தின் கலோனியத்துவத்துக்கும் ஒப்புமை கூறி, அதை குறை கூறினார் என்றும், அதன் பயனாகவே இந்த பிரகடனத்தின் ஷரத்துக்கள் 2,3 &4 ஆவணப்படுத்தப்பட்டன என்று பிறகு தெரிய வந்தது. அதன் விளைவாகவே, 1947ல் இந்திய விடுதலை, பின்னர் கலோனிய அஸ்தமனம் என்கிறது ஒரு வரலாற்று பதிவு. சுருங்கச்சொல்லின், இரண்டாம் உலகயுத்தத்தில் வெற்றி பெற அமெரிக்க தயவு தேவை, இங்கிலாந்துக்கு. அதற்கான விலை இந்திய விடுதலை என்பது அன்று நடந்த அளவளாவுதலிருந்து தெரிய வருகிறது. வரலாறு தனி மொழியும் பகருமல்லவா!

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏஜெண்ட்-ஜெனெரல் ஸர் கிரிஜா சங்கர் பாஜ்பாய், 1941ல் நேருவும், படேலும் அவரை மதித்தனர். அதிபர் ரூஸ்வெல்ட்டின் பிரத்யேக பிரதிநிதி, இந்தியாவுக்கு: கர்னல் ஜான்ஸன், 1941ல் அவருக்கு இடப்பட்ட முதல் பணி: விடுதலைப் போரை பற்றி அறிந்து கொள்வதும், நேரு முதலான தேசீயத்தலைவர்களுடன் அறிமுகம் செய்து கொள்வதும். இது தோழி வாயில். ராஜதந்திர உபாயங்களுக்கு உகந்த குறுக்குப்பாதை.

வரலாற்றில் மறவாமல் பதிவு செய்ய வேண்டிய ஒரு முனி புங்கவர், மணி ஐயர் எனப்படும் ஸர்.டாக்டர். ஜஸ்டிஸ். சுப்ரமணிய ஐயர். அகில இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவதியதில் அவருடைய பங்கு மகத்தானது. ஆனால், வெளியில் தெரியாதது. 1920 களிலேயே அமெரிக்க அதிபர் உட்ரோ வில்ஸனுக்கு ஒரு மடல் எழுதி கலோனிய அரசை மாட்டி வைத்தார். அது பற்றி ஒரு நாள் பார்க்கலாமா?

http://colnect.com/en/stamps/stamp/95334-WWIIAtlantic_Charter-Series_of_1903-United_States


உசாத்துணை:
Weigold.A. (2008): Churchill, Roosevelt, and India: propaganda during World War II: Taylor & Francis







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:05, 16 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஆகஸ்ட்_14.1&oldid=7909" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 16 ஆகஸ்ட் 2011, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,338 முறைகள் அணுகப்பட்டது.