அன்றொரு நாள்: அக்டோபர் 27

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)


இந்தியாவின் பத்தாவது ஜனாதிபதி கொச்செரில் ராமன் நாராயணன் (கே.ஆர்.என்.) அவர்கள் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்பதை நான் பெரிது படுத்தவில்லை. அவருடைய முன்னேற்றம் தகுதி அளித்த வரன். மருத்துவரான தந்தை பரமஏழை. கே.ஆர்.என். படித்தது எல்லாம் கிருத்துவ பள்ளிகள். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விருது, முதலிடம். நான் மானசீகமாக அமர்த்திக்கொண்ட குருநாதர்களிடம் ~( ஹெரால்ட் லாஸ்கி (வாத்தியரம்மாவை 16 வயதில் மணந்த முந்திரிக்கொட்டை!), ஸர் லையனல் ராப்பின்ஸ் (of the ‘penumbra of approbation’ fame), ஸர் ஃப்ரெட்ரிக் வான் ஹேயக் (of ‘The Road to Serfdom’ fame), அவருடைய பரம வைரியான ஸர் கார்ல் பாப்பர் (of ‘The Road to Hayekdom’ fame) )நேரடியாக பாடம் படித்து, பொருளியல் பட்டம் பெற்றார். சிபாரிசின் மீது 1949ல் இந்தியாவின் வெளியுறவு துறையில் (ஐ.ஃஎப்.எஸ்.) நியமனம். அது என்ன சிபாரிசு? ஆனானப்பட்ட லாஸ்கி, ஆனானப்பட்ட நேருவுக்கு கொடுத்த சிபாரிசு, இந்தியாவின் நலனை நாடி. பல நாடுகளில் தூதராகப் பணி. பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், வெளியுறவுத்துறை தலைவராகவும் பணி. எங்கும் நல்ல பெயர். ஓய்வு பெற்றபின், இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதால், அரசியல் பிரவேசம், ஒட்டப்பாளையம் 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் எம்.பி. ஆக இவரை அனுப்பியது. 1985லிருந்து அமைச்சரவையிலும், எதிர்க்கட்சியிலும். 1992ல் உப ஜனாதிபதி. 1997ல் ஜனாதிபதி. இவருக்கு இரண்டாவது தவணை கிடைக்கவில்லை. நேர்மையான மனிதரல்லவா! நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் உள்குத்து கசமுசாவில் கசங்கியது, ஜனாதிபதி பதவி. பேஷ்! ஓய்வுக்கு பின் உலகிலளாவிய சுதந்திர இயக்கங்களுக்கு ஆதரவு தேடினார்.


இவர் ஒரு நவீன ஜனாதிபதி. முதல் தடவையாக, மரபை (அது என்ன மரபோ!) மீறி பொது தேர்தலில் வாக்கு அளித்த ஜனாதிபதி. பாப்ரி மஸ்ஜித் இடிப்பட்டபோதும், கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரி கொளுத்தப்பட்டபோதும், தன் கண்டனத்தை, பட்டவர்த்தனமாக உரைத்தார் (ஜனாதிபதி வாயை திறக்கலாமோ?). இருமுறை பிரதமர் நியமனம், நாடாளுமன்ற கலைப்பு ஆகிய பளுவான தீர்மானங்கள் எடுக்கும் போது, பழைய பத்தாம்பசலி முறைகளை தவிர்த்து, உகந்த ஆலோசனைகளை பெற்று, சொந்தமாக சிந்தித்து, ஆணைகள் பிறப்பித்தார். 1999ல் பொது தேர்தல் நடந்து, வாஜ்பேயி அவர்கள் உகந்த முறையில் பிரதமரானதின் பின்னணி ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு. இருமுறை மத்திய அரசை மாநிலங்களில் ஜனாதிபதி அரசை ஊன்றுவதை மீள்பார்வைக்கு அனுப்பி ஒரு ஜனநாயகக் கோட்பாட்டை வகுத்தார். அரசு வெட்ட வெளிச்சத்தில் நடமாடவேண்டும் என்று இப்போது பேசி தீர்க்கிறோம். ஹஸாரேயும், சைபலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கே.ஆர்.என். என்றைக்கோ, ஜனாதிபதியின் ஆணைகளின் பின்னணியை விளக்கி பிரகடனங்கள் பிரசுரிப்பதை துவக்கினார். அப்றம் அது சப்பரமாச்சுது!


‘மாதம் மும்மாரி பெய்ததா?’ என்ற விட்டேற்றி’ ஜன ‘அதிபதவி’ மரபிலிருந்து விலகி, நாட்டை பற்றிய தன் கவலையை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நிகரற்றவர் கே.ஆர்.என். இந்தியாவின் குடியரசு தினத்தின் பொன் விழாவில் (26 01 2000) அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்...


‘இந்தியர்கள் திறன் மிகுந்தவர்கள்; இந்தியா தான் திறனிழந்தது’ என்ற எள்ளலின் யதார்த்தம் சுடுகிறதே;
நம் தேசீய கீதத்தின் ‘ஜன கண’ என்ற மக்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ‘அதிநாயக’ ஆளுமையை மந்திரோபதேசம் என்ற பொருள்பட ஆராதிக்கும் போது, ஒரு அக்னிபரிக்ஷையில் இறங்குவோம்;
சேறிலும், சகதியிலும் அபாரா தொழில் வளர்ச்சி; சேரிகளிலிருந்து விண்கலங்கள் புறப்பாடு!
நாளிதழ்களில் அன்றாடம் வரும் தீநிமித்தங்களை படிக்க கல்நெஞ்சம் வேண்டுமே;
சாது மிரண்டால், காடு கொள்ளாது, நம் நாட்டில்;
வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிற அந்த உரையில் அவர் எழுப்பிய வினாக்கள்:


ஏழைபாழைகளுக்கு கல்வி அளிப்பதை சுயநலம் தடுக்கிறதா?
மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்னார்வம் கொண்டு ஏன் கல்வி அளிப்பதில்லை?
நம்மூர் கார்களும், பஸ்களும் ஏன் இப்படி ரோட்டில் தறி கெட்டு ஓடுகின்றன?
குப்பையை ஏன் தெருவில் வீசுகிறார்கள்?
அரசு ஊழியர்கள் மக்களை ஏன் உதறுகிறார்கள்?
மக்கள் பொதுவுடமைகளை நாசம் செய்கிறார்களே, ஏன்?
ஏன் சிறார்களை துன்புறுத்துகிறோம்?
சுற்றுப்புறத்தை ஏன் பாழ்படுத்துகிறோம்?
பெண்ணியம் பேச்சளவில் தானா?


புத்தரும், மஹாவீரரும், குரு நானக்கும், கபீர் தாசரும், மஹாத்மா காந்தியும் வாழ்ந்த நன்னாடா, இது?
‘காந்தி மஹானின் வைஷ்ணவனுக்கு மாற்றான் வலி தெரியுமே. அவன் எங்கே?
உரையின் ஈற்றடியில், ‘மற்றவர்கள் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை மற்றவர்களுக்கு செய்யாதே’ என்ற விவிலியத்தின் பொன்மொழிக்கு அடித்தளமாக, வியாசரின் "Aatmanaha pratikulaani pareshaam na samaacharet."...(தனக்கு முரணாக அமைவதை கொண்டு மற்றவர்களுக்கு அரண் அமைக்க இயலாது.) மூலமந்திரமாக உச்சரிக்கிறார்,ேக்.ஆர்.என்.

அவருடைய ஆதங்கம் 2000ல் உரைக்கப்பட்டது. இன்று?


இன்னம்பூரான்

27 10 2011

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/YoungKRN.jpg/200px-YoungKRN.jpg

உசாத்துணை:

http://www.indiatogether.org/opinions/speeches/krn2000.htm





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 05:48, 29 அக்டோபர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_அக்டோபர்_27&oldid=8481" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2011, 05:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,778 முறைகள் அணுகப்பட்டது.