அன்றொருநாள்: மார்ச் 30:மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
கே.கே.கே. சிண்ட்ரோம்!
இன்று தொட்டும், தொடாமலும், தொடரும் அவியல் குவியல். பொறுத்தாள்க. அண்ணன் தம்பி இருவருக்கும் அறுவை சிகிச்சை. உயிர் மீட்கும் பணி. ஆனால், உயிர் இழக்கும் அபாயம் உண்டு. டாக்டருக்கென்ன! குத்து வாளுக்கும், அறுவை கருவிக்கும் உள்ள வித்தியாசம் உடலுக்கு புரியாது. வலி தாங்காமல் துடிக்கும். அதற்குத்தான் மயக்க மருந்து என்றார். 1,2,3... எண்ணச்சொன்னார்கள். 18ல் படு வேகம். 22,23ல் ஈனஸ்வரம். முப்பதை முழுங்கியாச்சு. முப்பத்தி...குரல் எழும்பவில்லை. ஆத்திரத்துடன், இன்ஃபினிட்டி! இன்ஃபினிட்டி! ஐயா டவுனு & அவுட்டு!
ஐ.ஸீ.யூ. வலி. முனகல். சின்ன தம்பி பாத்துக்கிறான். அடிச்சுப்பிடிச்சுண்டு எழுந்திருக்கிறான். பேஸ்து அடிச்சமாதிரி மூஞ்சி. ஈஸீஜி மிஷினில் நேர்கோடு. அழறான். ‘நான் சாகலைடா. மிஷின் தான் அவுட்.’ போன மூச்சு திரும்பி வந்தது, அவனுக்கு.
நர்ஸ் ஓடி வந்து சொன்னாளாம். அவர் என்னமோ உளரறார். வந்து பாருங்கோ. அடிச்சு, பிடிச்சுண்டு ஓடி வந்த பொண்ணு சொல்றா,’he is conjugating French verbs!!!
பெரிய டாக்டரும், சின்ன டாக்டரும் வந்தார்கள்.சின்னவர், பெரியவரிடம்: ( அவருக்கு தனித்தமிழ் தெரியாது!) ‘நேற்று சில குழப்பங்கள்.பேஷண்ட்டுக்கு நம்ம மேலே ரொம்ப கோபம். சேரி பாஷையில் திட்றார். இதெல்லாம் கேட்டு ரொம்ப நாளாச்சு!
சத்யம் பண்றேன். இது உண்மை. நினைவிழந்தும், நினைவுலா வரும் நினைவுகளின் பரிமாணமிது. யாராவது ஆன்மீகம் எழுதலாம். சரி, அதை பற்றி இப்போது என்ன பேச்சு?
மார்ச் 30, 1933: சார்! இன்று அமெரிக்காவில் டாக்டர்கள் தினம். திருமதி எடோரா ப்ரெளன் ஆல்மண்ட் அவர்களின் நல்லெண்ண தூது தினம்.
மார்ச் 30, 1942: இன்று டாக்டர்.க்ராஃபோர்ட் லாங் ஒருவருக்கு ஈதர் மயக்கமருந்தைக் கொடுத்து, அவருடைய கழுத்தில் கத்தி வைத்தார். அவருக்கு வலி தெரியவில்லை. அதுவும் ஒரு பிரமேயம். அதனால் தான் மயக்க மருந்து அனுபவ அறிமுகம். நம்ம வீட்டிலும் அதற்கு பெரிய மதிப்பு. என்னுடைய மகனின் அந்தத்துறையில் உள்ள சாதனைகளுக்கு பல பாராட்டுக்கள். இருக்காதா பின்னெ? மகன் தான் தந்தைக்காற்றும் உதவியை செய்து விட்டானே, தன்னுடைய திறனால், இலவச வைத்தியம் அளித்து, வலி நிவாரணம் தந்து, சிக்கலான சூழ்நிலையில், போர்க்களத்தில், டாக்டர்களின் தலைவன் என்று நற்பெயர் எடுத்து. அது மன நிறைவு,பகிர்ந்து கொண்டால்.
மார்ச் 30, 1958: இன்று, அமெரிக்காவின் சட்டமன்றங்கள் இந்த நாளை டாக்டர்கள் தினமாக விழா கொண்டாடுவதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கான சட்டத்தின் இயற்றியது.
மார்ச் 30, 1991: ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ் (பெரியவர்) அதில் (பொது சட்டம் 101 -473) இன்று கையொப்பமிட்டு பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் இந்த தினத்தை, டாக்டர்களுக்கு வாழ்த்துமடலனுப்பி, டாக்டர்கீர்த்தி பாடி, நன்றி நவின்று, கொண்டாடுகிறார்கள்.While in Rome, Be a Roman. நானும் சட்புட்னு ஒரு அமெரிக்க டாக்டரின் கீர்த்தி பாடிவிடுகிறேன்.
குற்றம்,குறை காணும் போது, சாதனைகளையும் மெச்சினால் தான் பாரபக்ஷமில்லாத தணிக்கை. அது அரிது என்பதால், நமக்கு பல ஐஏஎஸ் நண்பர்கள். அவற்றில் ஒருவர் வீ.கே.தார். ஜனாதிபதியின் காரியதரிசி பதவியை ஏற்றபின், என்னை பார்க்க வந்திருந்தார். நான் அவரிடம் சத்தம் போட்டேன், ‘உங்கள் ஜனாதிபதிக்கு சின்ன பிரச்னை. அமெரிக்காவில் சிகிச்சை. என் மனைவி வஸந்தாவை உனக்கு தெரியும். அவள் புற்று நோயினால் தவிக்கிறாள். சிக்கல்கள். உமது ஜனாதிபதியிடம் சொல்லு.’ சும்மா கத்தினேன். அவர் சொல்லிவிட்டாரே! ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் என்னை வரச்சொல்லி ஆணையிட்டார். போனேனா? பெரியவர் சொல்றார்,’ ஏஜிகாரு! அவள் என் பெண் மாதிரி. ஜனவரி 26 டில்லி வந்து விடுங்கள். என்னுடைய விருந்தாளி, ராஷ்ட்டிரபதிபவனில். என் அமெரிக்க டாக்டர் வருகிறார். நான் செய்த ஏற்பாட்டை ஒத்துக்கொள்.’ எனக்கு தலைகால் புரியவில்லை. சில நாட்கள் கழித்து தகவல்: டாக்டர் டில்லியில் சில மணி நேரம் தான் இருப்பார். குறிப்பிட்ட தேதியில் அவரை பம்பாய் ராஜ் பவனில் சந்திக்கவும். போனோம். ஒரு உரையாடல்:
சில நிமிடங்கள் காத்திருந்தோம், தோட்டத்தில் நின்று கொண்டு. சற்றே தாமதமானது. வருத்தம் தெரிவித்த டாக்டர்,அவருடைய மனைவி, வஸந்தா, நான், குழந்தை ஸுஜாதா.
டா: பேஷண்ட் யாரு? வ: நான் தான். டா: உன்னை பார்த்தால் நோயாளி மாதிரி இல்லவேயில்லை. டா. மனைவி: நீ அழகான பெண். என் பெண்ணுக்கு உன் வயசு தான் இருக்கும். வாருங்கள், உள்ளே. தேனீர் விருந்து. குழந்தையுடன் விளையாடுகிறார்கள். மெளனமாக டாக்டர் ஆவணங்களை பார்க்கிறார். சில கேள்விகள் கேட்டபின், பரிசோதனை.
பொதுவில் சொன்னது: இந்த சிக்கல் உலகில் ஆறு புற்று நோயாளிகளுக்கு ஏற்பட்டது. அவர்களில் ஐந்து பேர் நம்மிடம் இல்லை. நீ மட்டும் தான் அதிர்ஷ்டசாலி. இவளை போற்றி காப்பது என் கடமை. பிறகு வஸந்தாவிடம் தனித்து சொன்னது: நீ நோயாளி அல்ல. இந்த சிக்கல் வந்ததிற்கு காரணம், தவிர்க்க முடியாத அசுர சிகிச்சை. இனி பயமில்லை. என்னிடம் தனித்து, மனைவியிடம் பரிவுடன் நடப்பது பற்றி, யதார்த்தமான அறிவுரை வழங்கினார். அவள் எதோ சொல்லியிருக்கவேண்டும். என்னை நீ நன்றாக அவளை பார்த்துக்கொள்கிறாய் என்று வாழ்த்தினார். இதையெல்லாம் விடுங்கள்.குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். மென்மையாக, யாமிருக்கும் சூழ்நிலையில், குழந்தையும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதை அவளுக்கு புரிய வைத்திருக்கிறார். இவர் மனிதனா? தெய்வமா?
பெயர்: Dr.Edward J Beattie MD: CMO, Memorial Sloan-Kettering Cancer Center, New York. உலகளவில் பிரபல ஆஸ்பத்திரி அது. அவருக்கு குரு வந்தனம் செய்வோர்களின் பட்டியல் கணக்கில் அடங்கா. அவருடைய சாதனைகளை அளவிடமுடியாது. அவரை மாடல் என்று பாவித்த ஏகலைவ சிஷ்யகோடிகள் உலகெங்கும். அவர் தாயுமானவராக வந்து வஸந்தாவை காப்பாற்றினார். பத்து வருடங்களுக்கு இடை விடாமல், ஆவணங்களை பார்த்து மருத்துவ ஆலோசனை அளித்தார், அவரும், அவருடைய சகபாடி, டாக்டர்.டி.டி.ஹேக்ஸ் அவர்களும். ஒரு நாள், அவள் குணம் அடைந்து விட்டதாக எண்ணலாம் என்றார். மார்ச் 3, 1998ல் மறைந்த இந்த சான்றோனுக்கு புகழ்மாலை சூட்டும் போது, நாராக நாங்களும் உடனிருப்பது இயல்பே. காசும்,காப்பீடும் அமெரிக்க மருத்துவத்துறையில் கோலோச்சுகிறார்கள் என்றாலும், இந்த இரு டாக்டர்களும் வஸந்தாவுக்கு இலவச சிகிச்சை அளித்தார்கள் என்பதையும் மறக்காமல் சொல்லவேண்டும். அவ்வப்பொழுது நான் அனுப்பிய கலைப்பொருட்கள் பாத காணிக்கை.
இந்தியர்கள் யாவரும் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களுக்கு பாத காணிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவருடைய பிறந்த/இறந்த தினமாகிய ஜூலை 1 அன்று, இந்தியா டாக்டர் தினமாகக் கொண்டாடுகிறது: அன்றொரு நாள்: ஜூலை 1 இழையை மீள்பார்வை பார்ப்பது நன்மை பயக்கும்.
“... இந்தியாவில் ஜூலை முதல் தேதியை ‘டாக்டர் தினமாக’ கொண்டாடுகிறோம். அது ஒரு நன்றிக்கடன், பாரத ரத்னா டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களுக்கு: ஜென்மதினம் ஜூலை 1,1882; மறைந்த தினம்: அதே தினம்: 1962. கல்கொத்தா இந்தியாவிலேயே பெரிய நகரம். அங்கு டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த மலர் வளையங்களை உருவாக்க, புஷ்பங்கள் கிடைப்பது அரிது ஆகிவிட்டது என்று நாளிதழ்களில் செய்தி. ஏன் தெரியுமா? அன்று அதிகாலையே அன்னாருக்கு பூமாலைகள் சூட்ட எல்லா புஷ்பங்களும் வாங்கப்பட்டனவாம்! அன்று படித்த அந்த செய்தி இன்றும் நினைவுக்கு வரும்போது நெஞ்சு நிமிர்ந்து, இந்தியா ‘awesome’ மட்டுமல்ல; அது ‘பாருக்குள்ளே நல்ல நாடு; பட்டொளி வீசு பறக்குது பாரீர்’ என்று பண்ணிசைக்கத் தோன்றுகிறது, அம்மா! காளிகாட் வாழும் காளி மாதாவே! பகவன் ராமகிருஷ்ணரின் இஷ்டதேவதையே! உன் தவப்புதல்வன் பிதான் சந்திராவின் மேன்மையை பார். அவனுடைய மருத்துவ, சமுதாய, அரசியல் பணிகளை பார். எண்பது வருடங்கள் அவனை வாழவைத்து, எங்களையும் எக்காலமும் வாழவைக்கிறாயே! ஆம். அவருடைய பெயரில் வருடம்தோறும் வழங்கப்படும் டாக்டர்.பி.சி.ராய் பரிசில், மருத்துவ உலகில் மிகவும் பிரசித்தம். வங்காளத்தின் முதல்வராக (1948லிருந்து 1962 வரை) அரசியலில் வைர, வைடூர்யமாக, மருத்துவர்களில் மாணிக்கமாக, மானிடர்களில் ரத்னமாக திகழ்ந்த அவரது அமரகாவியத்தை என்றென்றும் பாடுவோம். 1961ல் அவருடன் அருகில் இருந்து அளவளாவும் பாக்கியத்தை எனக்கு அருளினாயே, என் அன்னையே! உன் பாதாரவிந்தங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், அம்மா!..”
ஆமாம். கே.கே.கே.சிண்ட்ரோம் பற்றி யாராவது சொல்லுங்களேன்.
இன்னம்பூரான் 30 03 2012 http://www.indiancancersociety.org/images/1987b.jpg
http://www.nytimes.com/1998/03/03/classified/paid-notice-deaths-beattie-edward-j-md.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:29, 31 மார்ச் 2012 (UTC) |