வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 


*வரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்!



இந்தியாவின் தர்மம், இலக்கியம், கலை, கல்வி போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பவை வேதங்கள். இவை பற்பல மகரிஷிகளால் இயற்றப்பட்டவை. தங்கள் ஞானக் கண் திருஷ்டியால் அறிந்து அனுபவித்தவற்றை அவர்கள் வேதமாக்கினர். பழமையும், புனிதமும் கொண்டிருப்பதால் வேதங்களை அபௌருஷம் என்பார்கள். மனிதனால் இயற்றப் பெறாமல் இறைவனால் அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம் என்பது பொருள். இந்து தர்மங்கள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கும் மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்மம், வேதங்களையே அடிப்படையாகக் கொண்டது. வேதங்களில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் தார்மிக காரியங்களில் பயன்படுபவை. இந்தியாவில் தோன்றியுள்ள அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும் வேதங்களிலிருந்து உண்டானவையே. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் ஒரே கோட்பாட்டை உடையவர்களாகவே உள்ளனர். ஆனால், வேதங்கள் தோன்றிய காலத்தைப் பற்றிக் கூறும்போது தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகுள் எழுகின்றன. இந்தியப் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் போற்றும் அறிஞர்கள், வேதங்களின் காலத்தை நிர்ணியக்கும் விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பற்றி பேச விரும்புவதில்லை

                                                                                       
TN 124112000000.jpg


வேதங்கள் அபௌருஷம் என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வேத காலத்து மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களே தவிர, படைத்தவர்கள் அல்லர் என்பது இவ்வகை அறிஞர்களின் ஒருமித்த கருத்து. வரலாற்றுப் பார்வையில் வேதங்களை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் வேத காலத்தை நிர்ணயிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, வேதங்களில் பழமையானது ரிக் வேதம். அது தோன்றிய காலம் கி.மு. 1200. மாக்ஸ்முல்லர், ரிக்வேதம் இயற்றப்பட்ட காலம் 3200 ஆண்டுகளுக்கு முன் என்று நிர்ணயிக்கிறார். ஆனால் வேத-ஸம்ஹிதைகளிலும், கிரந்தங்களிலும் ஜோதிடம் பற்றிய பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லோகமான்ய பால கங்காதர திலகர், ஜெர்மானிய அறிஞர் யாகோவி ஆகிய இருவரும் தனித்தனியே வேதத்தின் ஆரம்ப காலம் கி.மு. 4000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் புகழ்மிக்க ஜோதிடராக விளங்கிய பாலகிருஷ்ண தீட்சிதர், சதபத கிரந்தத்தைக் கொண்டு ஜோதிடபூர்வமான ஆராய்ச்சி நடத்தி ரிக்வேத காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிப்படுத்துகிறார். இது திலகர் குறிப்பிட்ட காலத்துக்கும் சிறிது முற்பட்டது. திலகர் ரிக்வேதத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தி, பல பிரமாணங்களை சேகரித்தார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் கூறுகிறார்: வசந்த காலத்தில் மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ரிக்வேதம் தோன்றியது. தைத்திரீய ஸம்ஹிதையின் படி, பால்குன (பங்குனி) பவுர்ணமியன்று வருஷப் பிறப்பு கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆகவே, தேவர்களின் தாய் அதிதியின் காலம் இந்தியப் பண்பாட்டின் மிகப் பழமை பொருந்திய காலமாக இருக்க வேண்டும் என்றும் அது கி.மு. 6000-4000 இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்க வேண்டும் என்றும் திலகர் கூறுகிறார். ஆனால் மகா சூத்ரங்கள் குறிப்பிட்டுள்ள துருவ நட்சத்திரத்தின் தோற்றத்தை ஆதாரமாகக் கொண்டு வேதகாலத்தை கி.மு. 4000 என்று ஜெர்மன் அறிஞர் யோகோவி அறுதியிடுகிறார்.


திலகர் வேதகாலத்தை நான்கு பிரிவுகளாகக் கொள்கிறார்.


1. அதிதி காலம் (கி.மு. 6000-4000)
2. மிருகசீரிஷ காலம் (கி.மு. 4000-2000)
3. கிருத்திகை காலம் (கி.மு. 2500-1400)
4. கடைசி காலம் (கி.மு. 1400-500).




பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 01 - 04 - 2011.

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 1 April 2011, at 02:18. This page has been accessed 1,892 times.