வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

வட இந்திய உணவு வகைகள்-ராஜ்மா குழம்பு/கிரேவி

From மரபு விக்கி

Jump to: navigation, search

 தேவையான பொருட்கள்: நாலு பேருக்கு.


ராஜ்மா இரண்டு கிண்ணம் எடுத்துக்கொண்டு முதல் நாளே ஊற வைத்துக்கொள்ளவும்.


மசாலாவிற்கு: ஒரு ஸ்பூன் சோம்பு, உடைத்த மிளகு ஒரு ஸ்பூன், பெரிய ஏலக்காய் 4, லவங்கப் பட்டை ஒரு துண்டு, தேஜ்பத்தா எனப்படும் மசாலா இலை, இலவங்கம் 4


தாளிதம் செய்ய:

ஜீரகம்,சோம்பு ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் ஒரு கிண்ணம்

தக்காளி பொடியாக நறுக்கியது ஒரு கிண்ணம்.

பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் தனியாத் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

கெட்டித் தயிர் ஒரு கிண்ணம். மேலே தூவ சீஸ் துருவல் அல்லது புதிதான க்ரீம்.


சாதம் தயார் செய்ய:


பாஸ்மதி அரிசி 2 கிண்ணம், உப்பு, பட்டாணி(பச்சை அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணி ஊற வைத்தது அரைக் கிண்ணம். கிராம்பு, ஏலக்காய் வகைக்கு இரண்டு. வறுக்க நெய் ஒரு டீஸ்பூன்.


பாஸ்மதி அரிசியையும், பட்டாணியையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அல்லது பிரஷர் பானில் நெய்யை ஊற்றி கிராம்பு, ஏலக்காய் போட்டுக்கொண்டு பாஸ்மதி அரிசியைப் போட்டு வறுக்கவும். அரிசி முழுதும் நெய்யோடு நன்கு கலந்ததும், பட்டாணியைச் சேர்த்து உப்பையும் போட்டுவிட்டுத் தேவையான நீரை விட்டுக் குக்கரை மூடி சாதம் தயார் செய்து கொள்ளவும்.


இப்போது ராஜ்மா கிரேவி தயாரிக்கும் முறை.


முதலில் சொல்லி இருக்கும் மசாலாப் பொருட்களை நசுக்கிக் கொண்டு ஒரு சின்ன வெள்ளைத்துணியில் கட்டி ராஜ்மாவை வேக வைக்கையில் அதோடு போட்டுவிடவும். வேகும்போதே இந்த மசாலா அதற்குள் போய் இறங்கிக்கொள்ளும். முதல் நாளே ஊற வைத்து அளவாக நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். வெந்த ராஜ்மாவில் இருந்து மசாலாப் பையை எடுத்துவிடவும்.


அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக்கொண்டு வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, ஜீரகம் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப்போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் இஞ்சி பேஸ்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்து ஒரு கொதி விடவும். கெட்டித் தயிரில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையானால் அம்சூர் பொடி சேர்த்து ராஜ்மாவில் கொட்டிக் கலக்கவும். மறுபடி ஒரு கொதி விடவும். இதற்கு கரம் மசாலாப் பொடி தேவையில்லை. தேவை எனில் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம்.


தயாரிக்கப்பட்ட சூடான சாதத்தில் இந்தக் குழம்பை விட்டுச் சாப்பிடலாம். குளிர்நாட்களுக்கு ஏற்ற உணவு. படம் இன்னொரு முறை செய்கையில் எடுத்துச் சேர்க்கிறேன்.


--Geetha Sambasivam 20:48, 27 நவம்பர் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 27 November 2011, at 20:48. This page has been accessed 2,706 times.