வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

லெமூரியா-ஆய்வுக் கட்டுரை--4

From மரபு விக்கி

Jump to: navigation, search

லெமூரியா- குமரிக்கண்டம்- கோண்ட்வானா (பாகம்-4)


லெமூரியா மற்றும் குமரிக் கண்டம் பற்றி இதுவரை பார்த்தோம் ; இனி கோண்ட்வானா: கோண்ட்வானா எனும் சொல்லை அறிமுகம் செய்தவர், ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவைச் சேர்ந்த மெட்லிகாட் எனும் புவியியலாளர். 1860 களில் ஜார்கண்ட் மற்றும் தாமோதர் நதி பள்ளத்தாக்குகளில் உள்ள படிவப் பாறைகளில் நிலக்கரிப் படிவங்களை அவர் கண்டு பிடித்தார். அந்தப் பாறைகள் இருந்த வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் “கோண்ட்” இன பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் நினைவாக அந்த படிவப் பாறைகளுக்கு ‘கோண்ட்வானா பாறைகள்’ என பெயர் வைத்தார். அந்தப் பாறைகள் உருவான காலம் கோண்ட்வானா காலம் என அழைக்கப்பட்டது. தொடந்து பூமிப்பந்தின் தென் பாதியில் நடந்த புவியியல் ஆய்வுகளின் போது இந்த கோண்ட்வானா பாறைகள் தென்அமெரிக்கா,ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா ஆகிய கண்டங்களிலும் பெருமளவில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. (பின்னாளில் இக்கண்டங்களின் ஒருங்கிணைந்த பகுதிக்கு கோண்ட்வானா நிலம் என்ற பெயர் சூட்டப் பட்டது- இது பற்றி பிறகு பார்ப்போம்.) இனி, கண்டங்கள் நிலைத்திருப்பவை-நகரும் தன்மை அற்றவை எனும் கருத்து புவியியலாளர்கள் மத்தியில் நிலவிவந்ததால் , 1850 களில் அரும்பிய லேமூரீயா கோட்பாடு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் புகழ் பெற்று விலகியது. 1910களில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஆல்பிரட் வேக்னர் எனும் பருவநிலையியலாளர் (இவர் புவியியலாளர் அல்ல) , ஆப்ரிக்காவின் மேற்குக் கரையும் தென் அமெரிக்காவின் கிழக்குக் கரையும் அமைப்பில் ஒன்று போல் இருப்பது கண்டு வியந்தார். இதே போன்ற வியப்பு இதற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு சிலருக்கு ஏற்பட்டது. ஆனால் “இது இப்படித்தான்” என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால் ஆல்பிரட் வேக்னரால் அப்படி விட்டுவிட முடியவில்லை. “ஒருவேளை இந்த இரண்டு கண்டங்களும் முன்பு ஒன்றாக இணைந்து இருந்திருக்குமோ” எனும் எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. அந்த எண்ணங்களின் அடிப்படையில் “கண்டப் பெயர்ச்சி” (காண்டினெண்டல் டிரிப்ட்) கோட்பாட்டை 1913இல் வேக்னர் முன் வைத்தார். “இன்று பூமியில் உள்ள கண்டங்கள் முன்பு ஒன்றாக இணைந்திருந்தன-பின்னர் அவை பிரிந்து நகர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன”-என்பதுதான் காண்டினெண்டல் டிரிப்ட் கோட்பாட்டின் சாரம். ஆனால் அன்றைய புவியியல் அறிஞர்கள் வேக்னேரின் கோட்பாட்டை எள்ளி நகையாடினர். “We need not learn Geology from a weather man” என நையாண்டி செய்தனர், ‘அடர்த்தி குறைவான நிலப்பரப்புப் பாறைகள் , அடர்த்தி அதிகமான கடல்பரப்புப் பாறைகளை எப்படிக் கிழித்துக் கொண்டு நகந்திருக்கும்’ என அவர்கள் வினா எழ்ப்பினர். ஆக, வேக்னேர் உயிரோடு இருந்த பொது அவரின் கோட்படுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது கசப்பான உண்மை.


ஆக்கம்: திரு சிங்கநெஞ்சம் சம்பந்தம்


--Geetha Sambasivam (பேச்சு) 09:55, 19 மே 2014 (GMT)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 19 May 2014, at 09:56. This page has been accessed 1,896 times.