வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மீட்டுருவாக்கம் தேவை

From மரபு விக்கி

Jump to: navigation, search

கா.அய்யப்பன்


 

தமிழ் இலக்கியச் சிந்தனை மரபில் கவனிக்கப்பட வேண்டிய இலக்கணப் பிரதி "நன்னூல்".

13ஆம் நாற்றாண்டில் பவணந்தி முனிவரால் செய்யப்பட்டு, பல்வேறு உரையாசிரியர்களால் உரை காணப்பட்டு, 19ஆம் நூற்றாண்டில் அச்சேற்றப்பட்டது.

19ஆம் நூற்றாண்டில் உருவான கல்வி நிறுவனங்களினூடாகப் பல தளத்துக்கு அதன் வாசிப்பு மரபு விரிந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அப்போது தொழிற்பட்ட கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்கள் உருவாக்குதல் என்கிற சிந்தனையோடு இது தொடர்புடையது.

  • இலக்கண வினா - விடை
  • இலக்கணச் சுருக்கம்
  • இலக்கணாகரம்
  • இலக்கணத் தெளிவு

போன்ற நிலையில் உரைநடை நூல்கள் உருவாயின.


1820இல் தாண்டவராய முதலியார் இலக்கண வினா - விடை என்னும் நூலைச் செய்து அச்சிட்டார்.

1828இல் விசாகப் பெருமாளையரும், 1865இல் ஆறுமுக நாவலரும், 1888இல் ஜி.யு.போப்பும் இதே தலைப்பில் நூல் செய்துள்ளனர்.

இலக்கணச் சுருக்கம் என்ற பெயரில்

  • சவேரிமுத்துப் பிள்ளை (1845)
  • இராசகோபாலப் பிள்ளை (1876)
  • வாசுதேவ முதலியார்
  • மழவை மகாலிங்கையர் (1979)
  • வரதாச்சாரி சீனிவாச முதலியார் (1884)

எனப் பலர் எழுதி வெளியிட்டிருக்கின்றனர்.


ஆனால், ஆறுமுக நாவலர் வெளியிட்ட இலக்கணச் சுருக்கம் (1878) மட்டும் 20 பதிப்புக்கும் மேல் கண்டிருக்கிறது.

  • தண்டியலங்காரம்
  • யாப்பருங்கலக்காரிகை
  • நன்னூல்

ஆகிய நூல்களை உரைநடையில் வெளியிட்டனர்.

இதில் நன்னூல் கவனிக்கப்பட வேண்டியதாய் உள்ளது.


செளந்தரநாயகம் பிள்ளை, நன்னூல் சுருக்கம் (1864) என்றொரு நூலை வெளியிட்டார். இவரே 1866இல் நன்னூல் சுருக்கச் சார்பு என்னும் நூலையும் இயற்றி வெளியிட்டிருக்கிறார்.


19ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியில் இவ்வகையான நூல்கள் உருவாகியிருக்கின்றன.


நன்னூல் இலகுபோதம், இது பல உரைகளையும் தழுவி, தெளிவுற எழுதிய உரையோடு, வினா - விடைகளும் சேர்த்து ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை செய்தது, யாழ்ப்பாணம் நாவலம் அச்சுக்கூடம், 1904 என்னும் நூல் வெளியானது.


இந்நூல் செய்ததற்கான காரணம் பற்றி, "தமிழுக்கிலக்கண நூல் பலவுள, அவையெல்லாவற்றுள்ளும் நன்னூல் மிக்க திட்பமும் நுட்பமுமுடையது. அதனை மாணாக்கர் வருத்தமின்றிக் கற்குமாறு, வினாவும் வினாவிற்குச் சூத்திரமும் சூத்திரபாகங்களும் பெரும்பாலும் விடையாக நிறுத்தியும், அவற்றோடு சூத்திரங்களையும் உரையையும் உதாரணங்களையுந் தந்தும் மயக்கந்தருவனாயுள்ள விடங்களையெல்லாம் நன்றாக விளக்கியும் முடித்தாம்...

என்று முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.


இவை 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒட்டுமொத்த இலக்கணப் பயில்வுச் சிந்தனை மரபினூடாக இணைத்துப் பார்க்கத்தக்கது.

  • ஆறுமுக நாவலர்
  • இராமாநுஜக் கவிராயர்
  • விசாகப்பெருமாளையர்
  • இராமானுசாச்சாரியார்
  • ஜி.யு.போப்

ஆகியோர் நன்னூலுக்கு எளிய உரை செய்ததோடு, முழுவதும் உரைநடையிலேயே தனி நூலும் செய்திருக்கின்றனர்.


கல்வி நிறுவனத்துக்குக் குறிப்பாக, இளைஞர்கள் கற்பதற்காக இப்படியான நூல்கள் செய்திருக்கின்றனர்.


புதிய முறையில் இலக்கணம் பயிற்றுவித்தலை இவ்வுரைநடை இலக்கண நூல்கள் வழி அறியலாம்.


பின்வரும் வாக்கியங்களில் உள்ள திசைச்சொற்கள்:-

1.அவள் இரவிக்கை தைத்துப் பிழைத்தாள்
2. அவன் இரண்டு பெயர் சாச்சிரசாரரை வைத்துக்கொண்டான்
3. இந்தக் கதவினை சாவியினால் திற
4. அவளுக்கு பண்டி தயார் ஆய் இருக்கிறது
5. நீ இவ் இடம் வரலாம் பருவாய் இல்லை
6. போய் இரண்டு ஜென்னல்களைப் பூட்டிவா
7. குதிரையை நன்றாய்ச் சவுக்கினால் அடித்தான்
8. நீர் ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று மிகவுங் கோருகிறேன்
9. இந்தச் சொக்காய் எனக்கு மிகவும் பிகுவாய் இருக்கிறது.
(நன்னூல் சுருக்கச் சார்பு: பக்.22).

திசைச் சொற்களுக்கு இதற்கு முன் இல்லாத உதாரணங்களைக் காட்டுகிறார்.

தமிழ் இலக்கண மரபில் திசைச் சொற்களுக்கு, தென்பாண்டி நாட்டார்

- ஆவினைப் "பெற்றம்" என்றும்
- சோற்றை "சொன்றி" என்றும்

தென்பாண்டி நாட்டார்,

- தாயைத் "தள்ளை" என்றும்

குடநாட்டார், தந்தையை "அச்சன்' என்றும்..."

இப்படித்தான் உதாரணங்களைக் காட்டுகிறார்.


மொழிக் கலப்பினூடாக உருவான புதிய சொல்லாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

  • இரவிக்கை
  • சாவி
  • பருவாயில்லை
  • பிகுவாய்

ஆகிய சொல்லாடல்களையும், அது உணர்த்தும் பொருளையும் அன்றைய சமூகச் சூழலோடு இணைத்துப் பார்க்கத்தக்கது.


தமிழ் கல்வி சிந்தனை மரபில் 19ஆம் நூற்றாண்டு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


தமிழ் நூல்கள் அனைத்தும் நூலாக்கம் பெற்ற அதே நேரத்தில் குறிப்பாக இலக்கண நூல்கள் எளிமையாகப் புரிந்து கொள்வதற்கான சிந்தனையும் தொழிற்பட்டிருக்கிறது.


அவை அன்றைய காலச் சூழலோடு இணைந்ததொரு சிந்தனை மரபோடு இணைந்தே செய்யப்பட்டிருக்கிறது.


கல்வி நிறுவனங்களுக்கென உருவாக்கப்பட்ட இலக்கணப் பயிற்சி நூல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.


ஆறுமுக நாவலரின் உரைநடை நூலைத் தவிர்த்து, வேறெந்த நூலும் இன்று காணுதற்கு அரிதாய் இருக்கிறது.


19ஆம் நூற்றாண்டில் வெளியான உரைநடை இலக்கண நூல்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக அச்சிட்டு மீட்டுருவாக்கம் செய்தால் பல்வேறு செய்திகளைப் பெறமுடியும்!


நன்றி:- தினமணி

--Ksubashini 07:51, 26 ஜூன் 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 26 June 2011, at 07:51. This page has been accessed 3,397 times.