மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 7

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

fromrajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் <mintamil@googlegroups.com>

dateSat, Jan 8, 2011 at 4:48 AM
subjectமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பகுதி 7


பொருளடக்கம்

மணிமேகலை: உதயகுமரன் வெட்டுண்ட பின்

போன பகுதியில் ... உதயகுமரன் நள்ளிரவில் மணிமேகலையைத் தேடி ஊர் அம்பலத்துக்கு வந்ததையும், காயசண்டிகையைத் தேடிவந்த காஞ்சனன் தவறாக உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றதையும் பார்த்தோம். இந்தப் பகுதியில் அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.



மணிமேகலையும் கந்திற்பாவையும்

உதயகுமரனை வெட்டிவீழ்த்திய கையோடு காஞ்சனன் காயசண்டிகையைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு வான்வழியில் போக நினைத்து அவள் இருக்கும் இடத்தை நோக்கிப் போகிறான். அப்போது அங்கே தூணில் இருக்கும் பாவை ஒன்று அவனைத் தடுத்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது.

காயசண்டிகை வடிவத்தில் இருப்பவள் உண்மையில் அவன் மனைவியான காயசண்டிகை இல்லை; அவள் மணிமேகலை. உண்மைக் காயசண்டிகை தன் பசி நோய் தீர்ந்து வான் வழியே சென்றபோது விந்திய மலைக்கு மேலே போனதால் விந்தாகடிகை அவளை விழுங்கிவிட்டாள்.


இந்த விவரத்தைக் காஞ்சனனுக்குச் சொல்லிய கந்திற்பாவை அவனைக் கைம்மைத் துயர் கொள்ளவேண்டாம் என்று சொல்கிறது. உதயகுமரன் தன் ஊழ்வினையால் இறந்தான் என்றும், அப்படியே ஆனாலும் காஞ்சனன் ஆராயாமல் உதயகுமரனைக் கொன்றதால் காஞ்சனனையும் வினையின் பயன் தொடரும் என்றும் சொல்கிறது. இது கேட்டுக் காஞ்சனன் மிகவும் வருந்தி அந்த இடத்தை விட்டுப் போகிறான்.


முதியாள் ("சம்பாபதி") கோயிலின் உட்புறத்தில் கிடந்த மணிமேகலைக்கு நள்ளிரவில் நடக்கும் இதெல்லாம் காதில் படுகின்றது. அவள் உடனே எழுந்து காயசண்டிகையாக இருந்த தன் மாறுவடிவத்தைக் களைகிறாள்; பழையபடி மணிமேகலை ஆகிறாள்.


உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்துத் துடிக்கிறாள். பழைய கதைகளைச் சொல்லிப் புலம்புகிறாள். பழைய பிறவியில் இராகுலன் இறந்தபோது தான் தீயில் புகுந்ததைச் சொல்கிறாள். இந்தப் பிறவியில் மலர்வனத்தில் உதயகுமரனைப் பார்த்து அவன்மேல் தன் உள்ளம் போனதால் மணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத்தீவுக்கு எடுத்துச் சென்றதைச் சொல்கிறாள். மணிபல்லவத்தில் மாதவனின் பீடிகை மூலம் தன் பிறப்பையும் அவன் பிறப்பையும் உணர்ந்துகொண்டதைச் சொல்கிறாள். தான் காயசண்டிகை வடிவு எடுத்தது ஏன் என்றும் சொல்கிறாள். வெட்டுண்டு கிடக்கும் அவனைக் "காதல" என்று அழைத்துப் புலம்புகிறாள்.


"பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர்வினை ஒழிக்க-க்
காயசண்டிகை வடிவானேன், காதல!"

[சுருக்கமான பொருள்: பிறந்தவர்கள் இறந்துபோவதும், இறந்துபோனவர்கள் மீண்டும் பிறப்பதும் அறம் தரும் அமைதியினாலும் மறம் தரும் துன்பத்தினாலும் என்ற உண்மையை உனக்குச் சொல்லி உன்னைத் துன்பம் தரும் வினையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே காயசண்டிகை வடிவம் கொண்டேன், காதலனே!]


ஒரு விஞ்சையனின் ("காஞ்சனனின்") மயங்கிய வெகுளியால் உன் கொடிய வினைப்பயன் உருவெடுத்து வர, இப்படி இறந்துபோனாயோ என்று கொதிக்கிறாள். அழுது ஏங்கிப் பெருமூச்சு விட்டு அவன் பக்கம் போக எழுந்திருக்கிறாள்.


"போகாதே, போகாதே, அல்லி மாலையணிந்த அவனிடம் போகாதே!" என்று ஒரு குரல் கேட்கிறது. அந்தக் குரல் தொடர்கிறது ...

"நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகளாயதூஉம்
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை!
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!"

[சுருக்கமான பொருள்: உனக்கு இவன் கணவனாக அமைந்ததும் நீ இவனுக்கு மனைவியாக ஆனதும் முன்னே பல பல பிறவிகளில் நடந்ததுதான்; இந்தப் பிறவியில் மட்டுமில்லை. மாறி மாறி வரும் பிறவிகளில் அழுந்துகின்ற துன்பத்திலிருந்து விடுபட முயலும் நீ ... இதற்காகத் துயரம் கொள்ளாதே!]


அப்படிச் சொன்ன குரல் அங்கே அந்தப் பொதியிலில் இருக்கும் தெய்வத்தின் குரல் என்று மணிமேகலை உணர்கிறாள். தன் பழைய பிறப்பைப் பற்றித் தெரியுமா என்று கேட்கிறாள்.


அதன் பிறகு அந்தத் தெய்வம் அவளுக்குப் பழைய பிறவியின் செய்திகளைச் சொல்கிறது. பழைய பிறவியில் இராகுலன் அவனுடைய சமையல்காரனை ("மடையனை") வாளால் வெட்டிக் கொன்றதனால்தான் அந்தப் பிறவியில் திட்டிவிடம் தீண்டி இறந்தான் என்றும் இந்தப் பிறவியில் காஞ்சனனால் வெட்டுண்டு இறந்தான் என்றும் சொல்கிறது.


இனி, மணிமேகலைக்கு என்னென்ன நடக்கும் என்பதையும் அந்தத் தெய்வம் சொல்கிறது. உதயகுமரன் இறந்தது கேட்டுச் சோழ அரசி மணிமேகலையைச் சிறையில் வைப்பாள்; பிறகு அறவண அடிகள் சொல்லைக்கேட்டு விடுவிப்பாள்; மணிமேகலை ஆபுத்திரனைப் பார்க்க அவனுடைய நாட்டுக்குப் போவாள்; அவனோடு மீண்டும் மணிபல்லவம் போவாள்; தீவதிலகை முலம் ஆபுத்திரன் தன் பழம்பிறப்பை உணர்வான்; அதன் பிறகு அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்புவான்; மணிமேகலை வஞ்சி நகரத்துக்குப் போவாள்; அங்கே பல சமயத்தவர் சொல்லும் வாதங்களையும் கேட்பாள்; அந்த வாதங்களினால் தளராமல் மறுமொழியும் சொல்லுவாள்.


இப்படி எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லிவிட்டுத் தான் அங்கே தூணில் உறையும் துவதிகன் என்பதையும் தெரிவிக்கிறது.


தன் இறுதிக் காலம் வரை தனக்கு நிகழக் கூடியவைகளைச் சொல்லுமாறு மணிமேகலை கேட்கிறாள். துவதிகனும் சொல்கிறான். மணிமேகலை காஞ்சியில் போய் அறம் செய்வாள்; அங்கேயே உயிர் நீங்குவாள்; அதன் பின் உத்தர மகத நாட்டில் போய்ப் பல பிறவிகள் எடுப்பாள். அந்த எல்லாப் பிறவிகளும் அவளுக்கு ஆண்பிறவியாகவே அமையும். அவ்ள் அருளறத்தை விடாமல் கடைப்பிடித்துத் தலைச்சாவகன் ஆகிச் சார்பு அறுப்பாள்.


"கச்சி முற்றத்து நின் உயிர் கடை கொள
உத்தர மகதத்து உறு பிறப்பெல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு-த்
தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி"

இறுதியாக, மணிமேகலா தெய்வம் ஏன் அவளை மலர்வனத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத்தில் வைத்தாள் என்பதையும் விளக்குகிறான்.


இதையெல்லாம் கேட்டு மணிமேகலைக்குத் துயரம் நீங்குகிறது. வலையிலிருந்து தப்பித்த மயில் போல மனத்தின் மயக்கம் நீங்குகிறது.



சோழ அரசியும் மணிமேகலையும்

உதயகுமரன் இறந்தது சோழ அரசனுக்குத் தெரிகிறது. அவன் உதயகுமரனை ஈமத்தில் வைக்கும்படியும் மணிமேகலையைச் சிறை செய்யும்படியும் கட்டளை இடுகிறான்.


உதயகுமரனின் தாயான சோழ அரசியோ கலங்குகிறாள். வாசந்தவை என்னும் ஒரு மூதாட்டி அவளுக்கு அறிவுரை சொல்கிறாள் ... "மன்பதை காக்கும் மன்னன் முன்னால் துன்பம் கொள்ளாதே" என்று.


அரசி மணிமேகலையை வஞ்சிக்க நினைக்கிறாள். அரசனிடம் போய் ... "பிக்குணிக்கோலம் கொண்டவள் மேல் மனம் வைத்தவனுக்கு ("உதயகுமரனுக்கு") அரசியல் தெரியவில்லை. அறிவு நிறைந்த அந்தப் பெண்ணுக்குச் சிறைக்கூடம் தகுதியான இடம் இல்லை. அவளைச் சிறையிலிருந்து வெளியே விடவேண்டும். அவள் என்னோடு இருக்கட்டும். அவள் தன்னுடைய ஓடு ("பிச்சைப் பாத்திரம்") எடுத்துப் போனாலும் யாரும் தடுக்கப் போவது இல்லை" என்று சொல்லி மணிமேகலையை விடுதலை செய்து தன் இருப்பிடத்திற்குக் கூட்டிப் போகிறாள்.


அதன் பிறகுதான் அரசியின் வஞ்சம் உண்மையான உருவம் எடுக்கிறது.


மணிமேகலை பைத்தியக்காரியானால் ஊரார் அவளை அடிப்பார்கள் (அல்லது, "கல் எறிவார்கள்") என்று நினத்து அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கிறாள். மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தவள் அதனால் அந்த மருந்து அவளை மயக்கவில்லை.


அடுத்து, அரசி ஒருகாமுகனைக் கூப்பிட்டு மணிமேகலையிடம் போய் அவள் உடலைக் கெடுத்து அதைப் பலருக்கும் தெரிவிக்கும்படிச் சொல்லுகிறாள். மணிமேகலையோ மணிமேகலா தெய்வம் கொடுத்த மந்திரத்தை ஓதி ஓர் ஆண் போல இருக்கிறாள். காமுகனுக்குக் குழப்பம். ஆடவர் அணுக முடியாத இடத்தில் எப்படி ஓர் ஆண்மகன் வந்தான் என்று குழம்புகிறான். நரகத் துயர் செய்யும் அரசியின் எண்ணம் அவனுக்குப் புரியவில்லை. அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறான்!


அதன் பின், அரசி மணிமேகலையைப் புழுக்கறையில் அடைக்கிறாள். மணிமேகலையோ இன்னொரு மந்திரத்தால் ("ஊண் ஒழிக்கும் மந்திரம்") உடம்பு வாடாமல் இருக்கிறாள்.


இதையெல்லாம் பார்த்து அரசிக்கு வியப்பு! பொருமுகிறாள்; நடுங்குகிறாள்; தவச்செல்விக்குத் தான் சிறுமை செய்ததை அவளிடமே சொல்லிப் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டி வணங்குகிறாள்.


தன்னைக் கொடுமைப்படுத்திய அரசியிடம் விவேகம் பேசுகிறாள் மணிமேகலை!


போன பிறவியில் இராகுலன் இறந்தபோது தான் தீயில் புகுந்ததைச் சொல்லி, அப்போது இந்த அரசி இராகுலனுக்காக எங்கேயிருந்து அழுதாள் என்று கேட்கிறாள்! பிறகு பொருள் நிறைந்த சொற்களைச் சொல்கிறாள்.


"உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன்தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரிய(து);
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின், ஆய்தொடி,
எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்"

[சுருக்கமான பொருள்: (உன் மகனுடைய) உடலுக்காக அழுதாயோ? உயிருக்காக அழுதாயோ? உடலுக்காக அழுதாய் என்றால் ... உன் மகனை எடுத்துப் போய்ப் புறங்காட்டில் ("மயானம்") வைத்தது யார்? உயிருக்காக அழுதாய் என்றால் ... (போன) உயிர் எந்த இடத்தில் புகும் என்பதை அதன் செய்கைகளினால் தெரிந்துகொள்ள முடியாது. அந்த உயிர்மேல் உனக்கு அன்பு உண்டானால் எந்த உயிர்மேலும் இரக்கம் காட்டவேண்டும்.]


இப்படிச் சொல்லி, ஏன் உதயகுமரனுக்குக் கள்ளத்தனமாய்க் காஞ்சனன் வஞ்சனை செய்தான் என்றும் விளக்குகிறாள். (இதைத் துவதிகன் சொல்ல மணிமேகலை கேட்டிருந்தாள், இல்லையா.)


போன பிறவியில் சமையல் செய்யக் காலம் தாழ்த்து வந்த சமையல்காரன் தன் பதட்டத்தினால் சமையல் கலங்களைக் கீழே போட்டுத் தானும் விழுந்தான். அதனால் இராகுலன் ஒரு முனிவனுக்கு உணவு படைக்க முடியவில்லை. சினம் கொண்ட இராகுலன் அந்தச் சமையல்காரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அந்தக் கொடிய வினைதான் இந்தப் பிறவியில் உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் வெட்டி வீழ்த்தியது!


இதைச் சொல்லிவிட்டு, அரசி தனக்குச் செய்த கொடுமைகளிலிருந்து தான் பிழைத்தது எப்படி என்றும் விளக்குகிறாள். அதோடு, தான் ஏன் அந்தரம் செல்லும் மந்திரம் ஓதித் தப்பித்துப் போகவில்லை என்பதையும் தெரிவிக்கிறாள்.


"அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்"

[சுருக்கமான பொருள்: அந்தரத்தில் எழுந்து போவதையும் இன்னொருவர் வடிவம் கொள்வதையும் நான் நினைக்கவில்லை. (ஏன் என்றால்), போன பிறவியில் இருந்த என் காதலனை (இந்தப் பிறவியில்) பெற்ற உன்னுடைய கொடுமையான துயரத்தை நீக்கி, தீமையைக் கொடுக்கும் கொடிய வினைகளையும் தீர்ப்பதற்காகவே.]


தொடர்ந்து வேறு சில உலக நிகழ்ச்சிகளயயும் எடுத்துச் சொல்லி, காமம், கொலை, கள், களவு, பொய் என்ற இவை உலகத்தோருக்குத் துன்பம் தருவன என்பதால் இவைகளைத் துறக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.


"மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்;
கற்ற கல்வி அன்றால் காரிகை;
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்;
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்;
... ... செல்லுலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்;
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்"

[சுருக்கமான பொருள்: இந்த மிகப் பெரிய உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு இவையெல்லாம் துன்பம் தருவன. அதனால் அவற்றைக் கைவிடவேண்டும். (இல்லாவிட்டால்) ஒருவர் கற்ற கல்விக்கு அழகு இல்லாமல் போய்விடும். பகைமையைப் பகைத்தவர்களே முழுவதும் உணர்ந்தவர்கள். அல்லல் படுகின்ற மக்களுக்கு அவர்களுக்கு இல்லாததைக் கொடுத்து அந்தக் குறையை நிறைவு செய்கிறவர்கள்தான் வளப்பம் நிறைந்த இந்தப் பெரிய உலகத்தில் உண்மையாக வாழ்கிறவர்கள். வருந்தி வந்தவர்களுடைய கொடிய பசியைப் போக்குகிறவர்களே இனிமேல் தாங்கள் போகப்போகிற உலகத்தை அறிந்தவர்கள். துன்பத்தை அறவே நீக்கும் துணிவான பொருளை உணர்ந்தவர்கள் உலகத்தில் உள்ள எந்த உயிருக்கும் அன்பு காட்டுவதைக் கைவிடமாட்டார்கள்.]


மணிமேகலை இப்படி ... "ஞான நன்னீரை" நன்கு தெளித்து அரசியின் செவிமுதல் வார்க்கிறாள். வார்த்து, மகன் இறந்த துயரம் நெருப்பாக மனமே விறகாக அரசியின் உள்ளத்தைச் சுட்டுக்கொண்டிருக்கிற வெம்மையான தீயை அவித்துவிடுகிறாள்!


அரசியும் தேற்றாங்கொட்டையினால் தெளிந்த நீரைப் போலத் தெளிவு பெறுகிறாள். பகைமையை நினைக்காத மனம் கொண்டவளாய் ... மணிமேகலையைத் தொழுகிறாள்!


மணிமேகலை திடுக்கிடுகிறாள்! அரசி அப்படித் தன்னைத் தொழுததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!


"காதலற் பயந்தோய்; அன்றியும் காவலன்
மாபெரும் தேவி! என்று எதிர் வணங்கினள்"

[சுருக்கமான பொருள்: "என் காலதலனைப் பெற்ற தாய்! அதோடு, மன்னனின் பட்டத்துக்குரிய தேவி!" என்று சொல்லி எதிர் வணக்கம் செய்தாள்.]



சித்திராபதி, மாதவி, சுதமதி, அறவண அடிகள் இவர்கள் அரசியைப் பார்க்க வருதல்

உதயகுமரன் பற்றிச் சித்திராபதி கேள்விப்படுகிறாள். தன் சூழ்ச்சியால் மணிமேகலையின்பின் போனவன் வாளால் வெட்டுப்பட்டு இறந்தான் என்று கேட்டு நெஞ்சு நடுங்குகிறாள்; மெய் வருந்துகிறாள்; மாதவி மகளைச் சிறையிலிருந்து மீட்க வேண்டி அரசியிடம் வந்து அவள் கால்களில் விழுகிறாள். இதற்குமுன் யாரும் படாத துன்பம் தான் பட்டதாகச் சொல்கிறாள். மாதவி மாதவர் பள்ளியுள் புகுந்ததும் அரங்கத்தில் ஆடவேண்டிய கூத்தி மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தியதும் நாடகக் கணிகையர்க்குத் தகுதியில்லாத செயல்கள் என்றும் அவை சிரிக்கத் தகுந்தவை என்றும் சொல்லி வருந்துகிறாள்.


உதயகுமரன் இறந்தது மட்டுமில்லாமல் அந்த ஊருக்கு இன்னொரு துயரமும் வரக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறாள். அதாவது ... அந்த ஊரைக் கடல்கொண்டு போகும் என்ற இந்திர சாபம் ஒன்று உண்டு என்றும் மணிமேகலைக்குத் துன்பம் வந்தால் மணிமேகலா தெய்வம் அந்தச் சாபம் பலிக்குமாறு செய்துவிடுவாள் என்றும் தான் அஞ்சுவதாகச் சொல்லி, மணிமேகலையைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அனுப்பிவிடுமாறு கேட்கிறாள்.


அரசி அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை. சித்திராபதியின் வாழ்க்கையைப் பழித்துச் சொல்லி மணிமேகலை தன்னிடமே இருப்பாள் என்று சொல்லிவிடுகிறாள்.


இதற்குள் ... மாதவியும் உதயகுமரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, சுதமதி அறவண அடிகள் இவர்களுடன் அரசியிடம் வருகிறாள்.


அறவண அடிகளைக் கண்ட அரசி அவருடைய பாதங்களை வணங்குகிறாள். அவர் இருப்பதற்கு ஏற்ற இருக்கையை அமைத்து அவருடைய பாதங்களைத் தூய்மை செய்தபின் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள்.

"யாண்டு பல புக்க நும் இணையடி வருந்த, என்
காண் தகு நல் வினை நும்மை ஈங்கு அழைத்தது;
நாத் தொலைவு இல்லை; ஆயினும் தளர்ந்து
மூத்தது இவ்-யாக்கை; வாழ்க, பல்லாண்டு!"

[சுருக்கமான பொருள்: பல ஆண்டுகள் ஆகி முதிர்ந்துவிட்ட தங்கள் இணையடிகள் வருந்தும்படியாகத் தங்களை இங்கு வர அழைத்தது என்னுடைய நல்வினையே! (தங்கள்) நாவிற்குத் தளர்ச்சி இல்லை. ஆனாலும், இந்த உடல் முதுமையினால் தளர்ந்து போனது. பல ஆண்டுகள் வாழவேண்டும்.]


அறவண அடிகள் மறுமொழியாகச் சொல்கிறார்.

"பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே"

[சுருக்கமான பொருள்: பிறப்பது, மூப்பது, நோயால் பிணிக்கப்படுவது, இறப்பது இவையெல்லாம் இயல்பானவைதான்.]


தொடர்ந்து, அரசிக்கு 12 வகை "நிதானங்கள்," நல்வினை, தீவினை இவைகளுக்கு விளக்கம் கொடுத்து, அரசியோடு பிற பெண்களும் நல்ல அறத்தைப் போற்றவேண்டும் என அறிவுரை சொல்கிறார்.



மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலையிடம் அவள் பிற (சமய) அறங்களையெல்லாம் கேட்டு வந்த பிறகு அவளுக்குத் தானே இவை (நிதானங்கள் போன்ற) எல்லாவற்றையும் விளங்கச் சொல்லுவதாக உறுதி கொடுக்கிறார்.



மணிமேகலையின் உறுதி

அதன் பின் மணிமேகலை ஒரு முடிவு செய்கிறாள்.

"தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின்;
இந்நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்;
ஆபுத்திரன் நாடு அடைந்ததன் பின்னாள்
மாசு-இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு
எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல்;
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா,
மனக்கினியீர்"

[சுருக்கமான பொருள்: அரசன் தேவியும் ஆயத்தாரும், சித்திராபதியும் மாதவர் (அறவண அடிகள்) சொன்ன நல்ல மொழிகளை மறக்காமல் அதன்படி நடந்து கடைத்தேறுங்கள். இந்த நகரத்தில் நான் இருந்தால் ... "மன்னன் மகனுக்கு வந்த கூற்று இவள்" என்று சொல்வார்கள். நான் ஆபுத்திரன் நாட்டுக்குப் போய் அதன் பின் மணிபல்லவத்துக்கும் போய்த் தொழுதுவிட்டு, வஞ்சிக்குப் போய் மாபெரும் பத்தினிக்குக் (கண்ணகிக்குக்) குறையில்லாத நல்லறத்தை எல்லா இடங்களிலும் செய்வேன். என் மனத்துக்கு இனியவர்களே, எனக்கு இடர் உண்டாகுமோ என்று கவலைப்படவேண்டாம்!]


எவ்வளவு பொறுப்போடு பேசுகிறாள்! சில நாட்கள் முன் மனம் நெகிழ்ந்த குழந்தையா இவள்?


அதன் பின், அவர்கள் எல்லாரையும் வணங்கிவிட்டு, அந்தி மாலையில் போய் உலக அறவி, முதியாள் ("சம்பாபதி") குடிகை, ஒளி நிறைந்த தூண் (துவதிகன் இருக்கும் தூண்) ... எல்லாவற்றையும் வலம்வந்து ... வானமே வழியாகப் பறந்து போகிறாள்.



மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைதல்

வான் வழியே போன மணிமேகலை ...இந்திரனின் மருமானுடைய ("புண்ணியராசனுடைய") நகரத்தின் வெளியே உள்ள ஒரு சோலையின் உள்ளே இறங்குகிறாள். அங்கே வாழ்ந்துவருகிற மாதவனுடைய இரண்டு அடிகளையும் வணங்கி, "இந்த நகரத்தின் பெயர் என்ன? இந்த நகரத்தை ஆளுகிற மன்னவன் யார்? " என்று கேட்கிறாள்.


மாதவன் சொல்கிறான்.

"நாகபுரம் இது; நன்னகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கு(ம்) நோய் உயிர்க்கு இல்"

[சுருக்கமான பொருள்: இது நாகபுரம். இந்த நல்ல நகரத்தை ஆள்கிறவன் பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன். இங்கே இவன் பிறந்த நாள் முதல் மழை பெய்வது தவறவில்லை. மண்ணும், மரமும் பல வளங்களைத் தந்துகொண்டிருக்கின்றன. உயிர்களை உருக்கித் தொல்லைப்படுத்தும் நோய் இல்லை.]


என்ன அருமையான செய்தி கிடைக்கிறது மணிமேகலைக்கு!


அதே நேரத்தில், மன்னன் புண்ணியராசன் தன் குழாத்தோடு அதே சோலைக்கு வருகிறான். தரும சாவகனின் அடியிணைகளை வணங்குகிறான். மணிமேகலையைப் பார்க்கிறான்!


இப்படித்தான் மணிமேகலை மறுபிறவி எடுத்திருக்கிற ஆபுத்திரனைப் பார்க்கிறாள்!

(விவரங்கள் அடுத்த பகுதியில்.)




தாய் தந்தையரின் துயரக் கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்த, அந்தக் கண்ணீரால் மலரின் தூய்மை கெட்டது என்று தூய புது மலர் பறித்து வருவதற்காக மலர்வனம் போன மெல்லியல் பெண்ணுக்கு எத்தகைய மாற்றம் -- மிகச் சில நாட்களில்!

இதை எழுதும்போது என் நெஞ்சு பிசைகிறது; தொண்டை அடைக்கிறது; கண்ணும் கசிகிறது.ம்


இந்தக் காதைகளில் அக்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பலவும் தெரியவருகின்றன. எடுத்துக் காட்டாக, இதற்கென்றே இருக்கும் ஒருமூதாட்டி அரசியிடம் வந்து "மன்னன் முன்னால் உன் துயரத்தைக் காட்டாதே" என்று அறிவுரை சொல்வது, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது எப்படி அழைப்பது, எப்படி வாழ்த்துவது -- இந்த மாதிரிச் செய்திகள்.

தாய்ப்பாசத்தால் மணிமேகலைக்குக் கொடுமை செய்த சோழ அரசி அவள் சொன்ன அறிவவுரை கேட்டு உடனே திருந்துகிறாள். மணிமேகலயின் காலில் விழவும் தயங்கவில்லை! அரசியின் சமயச் சார்பு பற்றிக் காப்பிய ஆசிரியர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனாலும் ... அவள் புத்தவழி நின்ற, வயது முதிர்ந்த அறவண அடிகளை அன்போடு மென்மையாக நலம் உசாவும் முறையும், அவர் பாதங்களைத் தூய்மை செய்து தன் இரு கைகளால் வணங்கித் தொழுவதும் அவளுடைய மிக உயர்வான பண்பட்ட மனப்பாங்கைக் காட்டுகிறது.

Highly sophisticated!

இப்படிப் பல.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்

--Ksubashini 07:24, 15 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 15 ஜனவரி 2011, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,183 முறைகள் அணுகப்பட்டது.