வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - விசாகை

From மரபு விக்கி

Jump to: navigation, search

from rajam rajam@earthlink.net
to மின்தமிழ் <mintamil@googlegroups.com>

விசாகை


யார் இந்த விசாகை? மணிமேகலைக் காப்பியத்தில் அவள் பங்கு என்ன?


தருமத்தன் என்பவனுக்கு மாமன் மகள் விசாகை. இருவரும் இளைய வயதினர், அழகு பொருந்தியவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பேணி வந்தார்கள். அதாவது ஒருவர்மேல் ஒருவர் அன்புகாட்டிவந்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஊராருக்கு அது பொறுக்கவில்லை! மைத்துனன் முறைமையால் யாழோர் (== கந்தருவர்) வழக்கப் படி நடந்துகொள்கிறார்கள் என்று ஊரில் அலர் (== வம்புப் பேச்சு) எழுந்தது. அதுவும் அந்தப் பெண் ... விசாகையைப் பற்றித்தான் அந்த வம்புப் பேச்சு, பாவம்.


"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ ..."


"யாழோர் மணவினை" என்றால் ... தக்க வயது வந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உறவினர் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தாமாகவே சேர்ந்து ஆண்-பெண் உறவுகொள்ளுதல்.

"யாழோர்" என்று தமிழில்/தமிழக வழக்கத்தில் சொல்லப்பட்டவர்கள் ஆரிய வழக்கத்தில் "கந்தருவர்" என்று அறியப்படுவார்கள்.

நிற்க.


ஊராரின் பேச்சு விசாகையை வருத்துகிறது. அவள் தன் வீட்டை விட்டு வெளியேறி, காவிரிப்பூம்பட்டினத்தில் இருக்கும் உலக அறவியின் வழியே போய் ... கந்திற்பாவையிடம் வேண்டுகிறாள் உலகத்தவரின் பழியை நீக்கும்படி.


கந்திற்பாவையும் விசாகையின் வேண்டுகோளுக்கு இணங்கி ஊராருக்கு அவள் "மழை தரும்" பெருமை உடையவள் என்று சொல்கிறது. அதாவது, அவள் கற்புடைய பெண் என்று உறுதி சொல்வதாக வைத்துக்கொள்வோம்.


ஆனாலும், ஊராரின் மனதில் படிந்த கறை நீங்காது என்று நினைத்த விசாகை ... இந்தப் பிறவியில் அவனோடு (== தருமதத்தனோடு) நான் சேர முடியாது, அடுத்த பிறவியிலாவது அவனுடைய மனைவி ஆவேன் என்று தன் தாயிடம் சொல்லிவிட்டு ஒரு கன்னி மாடத்துக்குப் போய்விடுகிறாள்!


"கன்னி மாடமா?"

ஆம், ஒரு "கன்னி மாடம்" மணிமேகலைக் காப்பிய காலத்தில் பூம்புகாரில் இருந்திருக்க வேண்டும். முதல் முதலாக ஒரு கன்னி மாடம் பற்றி மணிமேகலையில்தான் தெரியவருகிறது. பிற குறிப்பு ஏதும் இல்லை.


அப்புறம்? தருமதத்தன் என்ன செய்கிறான்?


தருமதத்தன், அவன் தந்தை, தாய் எல்லாரும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறுகிறார்கள். தாழ்ந்துபோகச் செய்யும் துன்பத்தை நீக்கின கந்திற்பாவையைப் புகழ்கிறார்கள். தக்கண (== தென்) மதுரைக்குப் போகிறார்கள்.


தென்மதுரைக்குப் போன தருமதத்தன் ஒரு முடிவு செய்கிறான்.


இனி இந்தப் பிறவியில் விசாகையைத் தவிர வேறொரு பெண்ணை விரும்புவதில்லை என்று உறுதிகொள்கிறான்.


வணிகம் செய்கிறான். பெரும் பொருள் ஈட்டுகிறான். சிறந்த வணிகர்களுக்கு வேந்தன் கொடுக்கும் "எட்டி"ப் பட்டத்துக்குரிய பூவைப் (== எட்டிப்பூ) பெறுகிறான். மிக உயர்ந்த செல்வப் பெருக்குடன் வாழ்ந்துவருகிறான்.


இப்படியே ... ஆண்டுகள் உருண்டு போயின. அவனுக்கும் 60 ஆண்டு அகவை ஆகிறது.


அப்போது ஓர் அந்தணன் தருமதத்தனிடம் போய்ச் சொல்லுகிறான்.


" ... ஈங்கு
என் செய்தனையோ இருநிதிச் செல்வ!
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனை ஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக ..."

[சுருக்கமான பொருள்: பெரும் செல்வத்தை உடையவனே, இங்கே இருந்துகொண்டு என்ன செய்கிறாய்? பத்தினி இல்லாதவர்கள் பல அறச் செயல்களைச் செய்தாலும் புத்தேள் (== தேவர்) உலகத்தை அடையமாட்டார்கள் என்பதைக் கேட்டுப் புரிந்துகொண்டிருக்கிறாயா? கேட்டதைப் புரிந்துகொண்டாய் என்றால் ... இனியும் காலம் தாழ்த்தாமல் உன் ஊருக்குத் திரும்பிப் போ.]


தக்கண மதுரை நகரமே வெறுமையாகும்படி ... தருமதத்தன் அங்கேயிருந்து வெளியேறிப் புகாருக்கு வருகிறான்.


அப்படித் தருமதத்தன் அங்கே வந்ததை விசாகை கேள்விப்படுகிறாள்; வீட்டுப் பக்கம் வருகிறாள். வெட்கப்படாமல், பலர் முன்னிலையில் அவன் முன்னே போய் ... பின்வருமாறு சொல்கிறாள்.


"நம்முள் நாம் அறிந்திலம்; நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன?
ஆறைந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது; என்
நாறைங்கூந்தலும் நரை விராவுற்றன;
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?"

[சுருக்கமான பொருள்: நமக்கு ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியவில்லை. நம்மை மயக்கிய அந்தப் பழைய அழகு எங்கே மறைந்து போனது? உனக்கு 60 ஆண்டுகள் அகவை. எனக்கு நரை கலந்த கூந்தல். நம் இளமையும் காம உணர்வும் எங்கே ஒளிந்துகொண்டன?]


"இப்பிறப்பாய்! இனி யான் நின் அடி அடையேன்;
அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்"

[சுருக்கமான பொருள்: இந்தப் பிறவியில் உனக்கு அடிச்சியாக இருக்கமாட்டேன். அடுத்த பிறவியில் உனக்கு அடித்தொழில் செய்வேன்.]


"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;
வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா;
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை ஆவது;
தானம் செய் ..."

[சுருக்கமான பொருள்: இளமை, உடல், பெருத்த செல்வம் ... இவை ஒன்றுமே நிலையானதில்லை. புதல்வர் மூலமாய்க்கூடப் புத்தேள் உலகத்தை அடைய முடியாது. சிறந்த அறமே உயர்ந்த துணை ஆகும். அதனால் தானம் செய்.]


இப்படி மாமன் மகள் விசாகை சொன்னதைத் தருமதத்தன் கேட்கிறான்.

விசாகையுடன் சேர்ந்து பலவகை நல்ல அறம் செய்கிறான்.

குமரிப் பெண்ணாகவே மூப்பு அடைகிறாள் விசாகை. அமரன் (== கந்திற்பாவை) அருளால் பழிச்சொல் நீங்கிய விசாகை ஊரார் நடுவே போய்வரத் தயங்கவில்லை.

அப்படி ஒரு நாள், கொடிகள் பறக்கும் வீதியில் அவள் வந்துகொண்டிருக்கும்போது ...

கருமை உள்ளம் கொண்ட கயவன் ஒருவன் விசாகைமேல் காமம் கொள்கிறான். காமம் கொண்டு, தன் தலையில் சூடியிருந்த பூமாலையை எடுத்து அவள்மேல் போட முயல்கிறான்.


"சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
... "

[சுருக்கமான பொருள்: தன் சுருண்ட கரிய தலைமுடியைச் சுற்றி, கீழே தொங்குகிற மலர் மாலையை விருப்பத்தோடு வளைத்து எடுத்து ... "மரபுவழிப்பட்டவர்கள் சொன்ன மணமுறை இதுதான்" என்று சொல்லி (அவள் மேலே) போட வேண்டி ...]


அப்படி அந்தக் கயவன் விசாகையின் மேல் அந்த மாலையைப் போட்டானா?

"மாலை வாங்க ஓங்கிய செங்கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு ..."

[சுருக்கமான பொருள்: தன் தலையில் சூடியிருந்த மாலையை எடுத்த செங்கையை ... அவனால் தன் கரிய தலைமுடியை விட்டு எடுக்க முடியவில்லை; மேலே தூக்கிய சிவந்த கை கீழே இறங்கவில்லை.]


இதை அந்தக் கயவனுடைய தந்தை ககந்தன் கேள்விப்படுகிறான்.


ககந்தனுக்குக் கடுமையான சினம் பொங்குகிறது. மகனின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான்!


அப்படிப்பட்ட முறை தவறாத மன்னர் குலம் சோழர் குலம்!



விசாகையின் கதை ஏன் சொல்லப்படுகிறது?


தவ வழிப்பட்ட மணிமேகலையை விரும்பிய சோழ இளவரசன் உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வாளால் வெட்டி வீழ்த்திவிடுகிறான், இல்லையா?


இந்தச் செய்தியைச் சோழ அரசனுக்குத் தெரிவிக்க வருகிறவர்கள் ... அரசனை வாழ்த்தி ... அவன் முன்னோரின் நேர்மை முறையை எல்லாம் எடுத்துச் சொல்லி ... ஒரு பீடிகை போடுகிறார்கள்.


அப்போதுதான் விசாகை கதையைச் சொல்கிறார்கள்.

இப்போதும் அந்த மாதிரி நடக்கிறதா என்று மன்னன் கேட்கிறான்.

மன்னனுக்கு அவன்மகன் உதயகுமரனின் செய்தி தெரிவிக்கப்படுகிறது.



விசாகையின் கதையில் புதைந்து கிடக்கும் உண்மைகள் பல.


காப்பியத்தின் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது; தேடுபவருக்குத் திறமை இருந்தால் கிட்டும் புதைபொருள் நிறைய.


மாமன் மகள், மைத்துனன் உறவு முறை, யாழோர் மணமுறை, ஊரார் வம்பு, கன்னி மாடம், தென்மதுரையில் வணிகம் செய்ய வாய்ப்பு, வணிகத்தில் சிறந்தோர் வேந்தனிடமிருந்து எட்டிப்பூ பெறுதல், வணிகன் போனபின் மதுரை வெறிச்சோடுதல், பத்தினி இல்லாமல் எந்த அறம் செய்தாலும் பயன் இல்லை என்பது, அகவை முதிர்ந்த நிலையில் காமம் விலகுதல், சோழர் குல அரசியல் நேர்மை, ...


இப்படி ஒரு சிறு கிளைக்கதையில் எத்தனைத் துணைக்கருத்து வளம்!


"இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா" என்று தொடங்கும் வரிகளை எத்தனைப்பேர் மனப்பாடம் செய்திருப்போம்! அவை யாரால் எப்போது ஏன் சொல்லப்பட்டன என்று விசாகை கதையைப் படித்தால் அல்லது எப்படித் தெரியவரும்?


அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்!

அன்புடன்,
ராஜம்

--Ksubashini 06:32, 29 அக்டோபர் 2011 (UTC)

Contributors

Ksubashini

This page was last modified on 29 October 2011, at 06:32. This page has been accessed 2,083 times.