rajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் <mintamil@googlegroups.com>
dateMon, Dec 6, 2010 at 8:58 PM
மணிமேகலை
ஆபுத்திரன் கதை -- பகுதி 2
மணிபல்லவத்தீவில் ... அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் போட்டுவிட்டு, உண்ணா நோன்பிருந்து உயிர்விடுகிறான் ஆபுத்திரன். அந்த ஆபுத்திரன் மீண்டும் பிறக்கிறானா? ஆமாம். எங்கே பிறக்கிறான்? சாவக நாட்டு மன்னனுடைய பசு ஒன்றின் வயிற்றில் பிறக்கிறான். ஆபுத்திரனாக இருந்தபோது சாவகம் போவதற்காகத் தானே தென்மதுரையிலிருந்து புறப்பட்டான்! ஆபுத்திரன் பிறவியில் இல்லாவிட்டாலும் அதற்கடுத்த பிறவியில் அவன் சாவக நாட்டில் போய்ப் பிறக்கிறான். அதைப் பற்றி இதற்கடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
அமுதசுரபியோ மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையில் காத்திருக்கிறது. யாருக்காக? மணிமேகலைக்காக.
இனி, மணிமேகலை மணிபல்லவத்தீவுக்கு வந்து கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபியைப் பெறவேண்டும்.
இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவுக்கு எப்படி வருகிறாள் என்று மட்டும் பார்ப்போம்.
பின்னணி
மதுரையில் பாண்டிய அரசியின் சிலம்பைத் திருடினவன் என்று கோவலன்மேல் தவறாகக் குற்றம் விழுகிறது; அதனால் அவன் கொலையும் செய்யப்படுகிறான். கோவலன் அப்படிக் கொலையான செய்தி கேட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி மனம் உடைந்து [பௌத்த] துறவியாகிறாள். தன் மகள் மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு ஒரு "மாதவர் பள்ளி"யில் புகுந்து அந்த இடத்தையே தனக்கு உறைவிடமாகக் கொள்கிறாள். இது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிகிறது.
மணிமேகலை மணிபல்லவத் தீவுக்கு வந்தது எப்படி?
மாதவி மணிமேகலையுடன் ஒரு மாதவர் பள்ளியில் அடைக்கலம் புகுந்த நிலை.
அப்போது...
காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடக்கிறது. பழைய வழக்கப்படி மாதவி அந்த விழாவிற்குப் போய் ஆடவேண்டும்; ஆனால் போகவில்லை. ஊரார் இதுபற்றிப் பேசுகிறார்கள். மாதவியின் தாய் சித்திராபதிக்கு இதனால் வருத்தம். மாதவியின் தோழி வயந்தமாலையை மாதவி இருக்குமிடத்துக்கு அனுப்பி அவளுக்கு ஊரார் சொல்லும் குறையை எடுத்துச் சொல்லச் சொல்கிறாள். வயந்தமாலையும் மாதவியிடம் போய் ஊரார் பழித்துச் சொல்லும் சொல் நாணத்தகுந்தது என்று சொல்கிறாள்.
அப்படி ஊரார் என்ன சொன்னார்கள்? பல கலைகளயும் கற்றுத் தேர்ந்த மாதவி அவற்றைத் துறந்து தவம் புரிவது "வெட்கக் கேடு" என்று.
"வேத்தியல் பொதுவியல் என்று இரு-திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியும் தாழ் தீங்குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகை-ச்-செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
கால-க்-கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவிய-ச்-செந்நூல் உரை-நூல் கிடக்கையும்
கற்றுத் துறை போகிய பொற்றொடி நங்கை
நற்றவம் புரிந்தது நாணுடைத்து"
[சுருக்கமான பொருள்: மன்னனுக்கு ஏற்றது மக்களுக்கு ஏற்றது என்ற இருவகைப்பட்ட கூத்து, பாட்டு, தாளம், யாழ் இசை, நாடகங்களுக்கு உரிய பலவகைப் பாடல்கள், தண்ணுமை முழக்குதல், குழல் இசைத்தல், பந்தாட்டம், மடைநூலில் உள்ள செய்திகள், சுண்ணம் இடித்தல், நீராடல், பள்ளியறையில் நடந்துகொள்ளும் வகை, காலத்துக்கேற்றபடி ஒழுகுதல், உடலால் செய்யப்படும் கரணவகைகள், குறிப்பு உணர்தல், கட்டுரைத்தல், மறைந்து விளையாடல், எழுதுகோலால் தீட்டுதல், மலர் தொடுத்தல், பல வகையில் அழகுபடுத்திக் கொள்ளுதல், மணிகள் கோத்தல், காலக் கணிதம், கலைகளை அறிந்து தெளிதல், நாடக மகளிர்க்கு என்று சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஓவிய நூல் சொல்லும் செய்திகளை அறிதல், ... இப்படி அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவள் தவம் புரியத் தலைப்பட்டது நாணமுடையது.]
மாதவியோ தான் நாணம் இழந்ததை வேறு வகையில் பார்க்கிறாள். அதனால் சுதமதிக்கு இப்படி மறுமொழி சொல்கிறாள்:
"காதலனுக்கு நேர்ந்த கடும் துயரைக் கேட்டும் உயிர் விடாமல் இருக்கிறேன்; அதனாலேயே ஊராரின் புகழை இழந்துவிட்டேன்; அப்போதே நாணத்தையும் இழந்துவிட்டேன். பத்தினிப் பெண்டிர் என்றால் ... தங்கள் காதலர் இறந்துபோனால் அவருடன் இறப்பர், இல்லாவிட்டால் தீப்புகுவர், இல்லாவிட்டால் நோன்பு வாழ்க்கை வாழ்வர். நான் அப்படி எதுவுமே செய்யவில்லை. [கண்ணகியான] பத்தினியோ [பாண்டிய] அரசனின் ஊருக்குத் தீமூட்டினாள். மகள் மணிமேகலை அருந்தவப் படுத்தப் படுவது அல்லது தீய [கணிகைத்] தொழிலில் புகமாட்டாள்."
இப்படி ... ஊரார் புகழ முடியாத நிலையில் தான் இருப்பதாலேயே தன் நாணத்தை இழந்ததாகக் கருதி வருந்துகிறாள் மாதவி. அதோடு, கண்ணகியையும் புகழ்ந்து மணிமேகலையைத் தவ வழியில் புகுத்த நினைப்பதாகவும் தெரிவிக்கிறாள்.
அது மட்டுமில்லாமல் அந்த மாதவர் பள்ளியில் அறவண அடிகள் தனக்கு என்ன அறவுரை சொன்னார் என்பதையும் சொல்கிறாள்:
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது"
[சுருக்கமான பொருள்:
பிறவி என்பது துன்பம் தருவது;
பிறவாமை என்பது மிகப் பேரின்பம் தருவது;
துன்பத்திற்கு அடிப்படை பற்று;
பேரின்பம் என்பது பற்று அறுத்தவர்களுக்கே கிடைக்கும்]
இப்படிச் சொல்லிய அறவண அடிகள் மாதவிக்குப் "பஞ்சசீலத்தின்" தன்மையையும் எடுத்துச் சொல்லி நல்வழி காட்டியிருக்கிறார்.
["பஞ்ச சீலம்" -- காமம், கொலை, கள், பொய், களவு இந்த ஐந்து வழக்கங்களையும் முழுவதுமாகத் துறத்தல்]
இப்படியிருக்கும் தன் நிலைமையைப் பற்றிச் சித்திராபதிக்கும் மற்றப் பெண்களுக்கும் வயந்தமாலை எடுத்துச் சொல்லவேண்டும் என்பது மாதவியின் வேண்டுகோள். வயந்தமாலை ஏமாற்றத்துடன் திரும்புகிறாள்.
வயந்தமாலையும் மாதவியும் பேசிக்கொண்டபோது மணிமேகலை அங்கே மலர் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். நடந்த உரையாடல் அவள் காதில் விழுகிறது. தந்தை தாய் இருவருடைய துன்பத்தைப் பற்றியும் கேட்டு நெஞ்சம் கலங்கி அவள் கண்களில் நீர் வழிந்து அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர்களின் தூய்மையை மாசுபடுத்திவிடுகிறது. மாதவி அவள் கண்ணீரைத் துடைத்து, புதிதாகத் தூய மலர் எடுத்து வரும்படிச் சொல்கிறாள். தோழி சுதமதி மணிமேகலையை மலர்வனத்திற்குக் கூட்டிச் செல்கிறாள்.
வீதிவழியே போன மணிமேகலையைப் பார்த்த மக்கள் வருந்துகிறார்கள்; "இவளை அருந்தவப்படுத்திய தாய் [மாதவி] கொடியவள்" என்று பழிக்கிறார்கள்.
"நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுந கொல்லோ மடந்தை-தன் நடை?
மாமயில் ஆங்குள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொல்லோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக்கு
எஞ்சல கொல்லோ இசையுந அல்ல"
[சுருக்கமான பொருள்: இவள் மலர் கொய்ய மலர்வனம் புகுந்தால்... இள அன்னங்கள் இவள் நடைக்கு முன் தங்கள் நடை ஒப்பாமல் நாணம் அடையும். இவள் சாயலை மயில்கள் கற்க முடியுமோ? பசுங்கிளிகளின் சொல் இவள் சொல்லுக்கு ஒப்புமையாகா.]
இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள்.
எட்டிகுமரன் என்ற வணிகனுக்கோ மணிமேகலை வீதிவழியே போவதைப் பார்த்ததும் அவள் தந்தை கோவலன் நினைவு வருகிறது. மிகவும் வருந்துகிறான். அவன்
சுதமதியும் மணிமேகலையும் மலர்வனத்திற்குப் போய்விடுகிறார்கள்.
அபோதுதான் சோழ இளவரசன் உதயகுமரன் மதம் பிடித்த காலவேகம் என்ற யானையை அடக்கிவிட்டு வீதி வழியே வருகிறான். நண்பன் எட்டிகுமரனைப் பார்க்கிறான். எட்டிகுமரனின் வருத்தம் பற்றிக் கேட்கிறான். எட்டிகுமரன் தன் வருத்தத்தைச் சொல்கிறான்:
"மாதவியின் மகள் மணிமேகலை மலர்வனத்துக்குப் போயிருக்கிறாள். அவளைப் பார்த்ததும் கோவலன் பட்ட துயரம் நினைவுக்கு வந்தது. அதனால் என் யாழ் இசைப்பில் பிழை வந்தது. அதுவே என் வருத்தம்."
உதயகுமரனும் மணிமேகலைமேல் மனம்வைத்தவன். அதனால் மணிமேகலையைக் கண்டு தன்னோடு கொண்டுவர விரும்பி மலர்வனத்துக்குச் செல்கிறான்.
உதயகுமரன் மணிமேகலை மேல் விருப்பம் கொண்டவன் என்று வயந்தமாலை மாதவியிடம் முன்பு ஒருநாள் சொன்னது மணிமேகலைக்குத் தெரியும். அதனால் இப்போது மலர்வனம் பக்கத்தில் உதயகுமரன் தேர் வருவது தெரிந்ததும் மணிமேகலை நடுங்குகிறாள். மணிமேகலையைப் பாதுகாக்க விரும்பிய சுதமதி அவளை அங்கே இருந்த பளிங்கு மண்டபத்தில் மறைந்து இருக்கவைக்கிறாள்.
உதயகுமரன் மணிமேகலையைப் பற்றிச் சுதமதியிடம் கேட்கிறான். மணிமேகலை மாதவர் உறைவிடத்தை நீங்கித் தனியே மலர்வனத்துக்கு வந்த காரணம் என்ன என்றும் தக்க பருவம் அடைந்தாளோ என்றும் கேட்கிறான்.
மணிமேகலையின் உடலழகை நுகர்வது இவன் கருத்து என்று சுதமதிக்குத் தெரிந்துவிடுகிறது. அதனால் அவனுக்கு மனித உடம்பின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொல்லி அறிவுரை புகட்டப் பார்க்கிறாள்.
"வினையின் வந்தது, வினைக்கு விளைவாயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது, தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்
புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்கோய், இதனைப் புறம் மறிப் பாராய்"
[சுருக்கமான பொருள்: மக்கள் உடம்பு என்பது வினையினால் உருவாகிறது; வினைக்கு இருப்பிடமாகிறது; இதை மூடிய பகுதியை அகற்றினால் வெளிப்படுவது புலால்; இது மூப்பும் சாவும் உடையது; தீய பிணிகளுக்கு இருப்பிடம்; பற்றுக்குப் பற்றிடம்; குற்றங்களை உள்ளடக்கியது; புற்றுக்குள் அடங்கிய பாம்பைப் போலப் பகைமை சேர்ந்தது; அவலம் கொண்டு கவலைப்பட்டும் தனியே தவிப்பதும் இதன் இயல்பு; இதுவே மக்கள் உடம்பின் இயல்பு. இதன் வெளிப்புறத்தை உட்புறமாக மாற்றிப் பார்.]
உதயகுமரனோ ... பளிங்குமண்டபத்தின் உள்ளேயிருந்து தெரியும் மணிமேகலையின் உருவத்தைப் பார்த்து அவளை அடைய முயல்கிறான்; முடியவில்லை. சுதமதியிடம் மணிமேகலையை அடைய முடியவில்லையே என வருந்திக் கூறுகிறான்.
சுதமதியோ அவனிடம், மணிமேகலை
"ஊழ் தரு தவத்தள், சாப சரத்தி
காமன் கடந்த வாய்மையள்"
என்று விளக்குகிறாள்.
[சுருக்கமான பொருள்: மணிமேகலை ஊழின்படித் தவவழிப்பட்டவள். சாபக் கணைகள் கொண்டவள். காமனின் செயல்களைக் கடந்தவள்.]
சுதமதி எப்படி அங்கே வந்தாள் என்று உதயகுமரன் கேட்கிறான். அவள் அவனுக்குத் தன் கதையைச் சொல்கிறாள். தான் எப்படிக் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள பௌத்த பள்ளிக்கு வந்தாள் என்பதைச் சொல்லுகிறாள். [சுதமதி கதை தனியாகச் சொல்லப்படவேண்டியது!]
இப்படியே ... சுதமதி உதயகுமரனுடன் வாதாடி அவனைத் திரும்பிப் போக வைக்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைக் கைகூடப் பெறாமல் மனம் வருந்தித் திரும்புகிறான். மாலை நேரம்; இருட்டத்தொடங்குகிறது.
அப்போதுதான் ... காவிரிப்பூம்பட்டினத்தில் நடக்கிற இந்திரவிழாவப் பார்க்க வந்திருக்கிறாள் [கோவலன் முன்னோர்க்குக் குலதெய்வமான] மணிமேகலா தெய்வம்.
இந்திரவிழாக் காண வந்த மணிமேகலாதெய்வம் மலர்வனத்தில் இருந்த புத்த பீடிகையை வலம் வந்து போற்றுகிறாள்:
"புலவன், தீர்த்தன், புண்ணியன், புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய், செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற்கடந்த ஏமம் ஆயோய்!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆயிரத்து ஆழியந்திருந்தடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?"
அப்படி ...
"ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
பாத பீடிகை" பணிந்து ஏத்தி, அந்த ஊரிலேயே வாழும் ஒரு பெண் போல வடிவு எடுக்கிறாள் மணிமேகலா தெய்வம். சுதமதியும் மணிமேகலையும் இருக்கும் இடத்துக்கு வருகிறாள்.
சுதமதியிடம் "ஏன் இங்கே இப்படித் தனியாக நிற்கிறீர்கள்?" என்று கேட்கிறாள். சுதமதியிடம் நடந்தது கேட்கிறாள். பிறகு ... அவர்கள் திரும்பவும் இடையூறு ஒன்றும் இல்லாமல் மாதவி இருக்கும் மாதவர் பள்ளிக்குப் போக வேண்டுமானால் ... "இங்கே இப்படி இந்த வழியாகப் போனால் நல்லது" என்று அங்கே இருக்கும் இடங்கள் பற்றியெல்லாம் விவரிக்கிறாள்.
[இந்த இடங்கள் பற்றிய விளக்கம் தனியாகப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியது!]
அப்படி மணிமேகலாதெய்வம் விவரித்துச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுதமதி தூங்கிவிடுகிறாள்.
மணிமேகலாதெய்வம் மணிமேகலையைத் தழுவி எடுத்து வான்வழியே 30 யோசனைத் தொலவு தென் திசையில் போய் மணிபல்லவத்தீவில் வைத்துவிட்டுத் தானும் மறைந்துவிடுகிறாள்.
அப்படித்தான் மணிமேகலை மணிபல்லவத்தீவுக்கு வந்துசேர்கிறாள்!
அன்புடன்,
ராஜம்
--Ksubashini 20:32, 6 டிசம்பர் 2010 (UTC)