வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 4

From மரபு விக்கி

Jump to: navigation, search

fromrajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் <mintamil@googlegroups.com>

dateSat, Dec 18, 2010 at 2:25 AM


இதற்கு முன் அமுதசுரபி எப்படி மணிமேகலை கைக்கு வந்தது என்று பார்த்தோம். அதைக் கொண்டு அவள் என்ன செய்தாள் என்பதை இனிப் பார்க்க வேண்டும்.
மணிமேகலைக் காப்பியம் பல கிளைக்கதைகளை உள்ளடக்கியது.


அடிப்படைக் கதை மேற்கொண்டு செல்ல இரண்டு பெண்களப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த இரண்டு பெண்கள் ஆதிரை என்பவளும் காயசண்டிகை என்பவளும்.
ஆதிரைதான் அமுதசுரபியில் முதலில் பிச்சை இடுகிறாள். அது பலரின் பசியைப் போக்குவதைப் பார்த்த காயசண்டிகை மணிமேகலை கையிலிருந்து பிச்சை பெறுகிறாள். இந்த இரண்டு பெண்களும் கதையோட்டத்துக்குத் தேவையானவர்கள்.
இந்தப் பகுதியில் ஆதிரை பற்றிப் பார்ப்போம்.
(குறிப்பு: இதற்கு முந்திய பகுதிகளில் எழுந்த கேள்விகளை நான் மறக்கவில்லை. கூடிய விரைவில் எனக்குத் தெரிந்த மறுமொழி தருகிறேன்.)

Contents



மணிமேகலை: ஆதிரையின் கதை

அமுதசுரபி மணிமேகலை கைக்கு வந்தது பற்றிப் பார்த்தோம்.


அமுத சுரபியின் சிறப்பு ... அதில் இடப்பட்ட பிச்சை எடுக்க எடுக்கக் குறையாதது. அதிலிருந்து வாங்குபவர்களின் கைதான் வாங்கி வாங்கி வருத்தம் அடையுமாம்!


ஆனால் ... அதில் யாராவது பிச்சை இடவேண்டுமே.


அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை. முதல் பிச்சை ஏற்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் பிச்சை ஏற்ற ஒருத்தியின் பெயர் தெளிவாகத் தெரிகிறது. இவள் பெயர் காயசண்டிகை. (பின்னால் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவனே மணிமேகலையை விரும்பும் உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான். அதைப் பிறகு பார்ப்போம்.)


இந்தப் பகுதியில் ஆதிரை பற்றிப் பார்ப்போம்.



ஆதிரையின் கதை

ஆதிரையின் கணவன் சாதுவன். சாதுவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையிடம் போய்ச் சேர்ந்து தன் உணவுக்கு அவள் கையை நம்பி வாழ்கிறான். அப்போதும் வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டிவிடுகிறாள்.


பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான். கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர்கள் கையில் அகப்படுகிறான்.


இங்கே ஊரில் ... கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகிறாள். கணவன் இறந்ததால் தீக் குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்துத் தீக்குளிக்க முயல்கிறாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்த கூறை எரியவில்லை; பூசிய சந்தனமும் சூடிய மாலையும் நிறம் வாடவில்லை. அவள் தாமரையின் நடுவே திகழும் திருவைப் போலப் பொலிகிறாள். "தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான். என்ன செய்வேன்!" என்று புலம்புகிறாள்.


அப்போது அசரீரி ஒன்று சொல்கிறது: "உன் கணவனைக் கடல் அலைகள் நக்க சாரணர் நாகர் வாழும் மலைப்பக்கம் சேர்த்திருக்கின்றன. பல ஆண்டுகள் அங்கே தங்கமாட்டான். சந்திர தத்தன் என்னும் வாணிகனின் கப்பல் வரும்போது அவனும் வருவான். துன்பப்படாதே!"


ஆதிரையின் அழுகை நிற்கிறது. பொய்கையில் குளித்து எழுந்தவளைப் போல எழுந்திருந்து தன் வீடு செல்கிறாள். அதுமுதல் பிற பத்தினிப் பெண்டிரும் அவளைத் தொழுகின்றனர்.


"புண்ணியம் முட்டாள்; பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்"


[சுருக்கமான பொருள்: புண்ணியத்துக்குக் குறைவு இல்லாதவள் ஆனாள். மழை பொழிவிக்கும் பெருமையை உடைய பத்தினிப் பெண்டிரும் விரும்பித் தொழுகின்ற பெருமையை அடைந்தாள்.]


நாகர் வாழும் மலையில் சாதுவன்

நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்துவிடுகிறான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள் அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து அவனை எழுப்புகிறார்கள்.


"ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்"


[சுருக்கமான பொருள்: ஊன் உடைய இந்த உடம்பு நமக்கு உணவு என்று சொல்லி அவனை எழுப்ப... .]


சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது.


"... அவர் பாடை மயக்கு அறு மரபின்
கற்றனன் ஆதலின்"


[சுருக்கமான பொருள்: அவர்களுடைய மொழியை நன்கு கற்று அறிந்தவன் ஆதலின்...]


அவர்களுடன் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் "குரு மகனிடம்" கூட்டிச் செல்லுகிறார்கள்.


அங்கே ... கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்துகொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் ... நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போலத் தோன்றுகிறது.


அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான்.


நாகர் தலைவனோ, "பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு" என்று கேட்கிறான்.


சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.


"மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனையாகு ..."


[சுருக்கமான பொருள்: மயக்கத்தை உண்டாக்கும் கள், உயிர்க்கொலை இந்த இரண்டையும் குற்றமற்ற மக்கள் தவிர்த்தார்கள். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதும் ... உறங்குவதும் உறக்கத்திற்குப் பின் விழிப்பதும் போலவே. இந்த உண்மையினால் ... நல்லறத்தைச் செய்பவர்கள் நல்லுலகை அடைவார்கள்; நல்லது அல்லாதவற்றைச் செய்பவர்கள் கொடிய நரகத்தை அடைவார்கள். அதனால் அறிவுடையோர் இவைகளைத் தவிர்த்தார்கள்.]


சாதுவனின் "நல்லறம்" பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்:


"உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு."


சாதுவன் மறுமொழியாகச் சொல்கிறான்:


"உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். போனவர்களுக்கு எங்கே புகலிடம் என்பதை நான் மட்டுமல்ல, எல்லோரும் அறிவார்கள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்."


இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் "நல்லது அறிந்த அந்தச் செட்டி"யின் கால்களில் விழுந்து கேட்கிறான்:


"கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்."


சாதுவன் அவர்களுக்கு நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.


"உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக"


[சுருக்கமான பொருள்: கலம் ("கப்பல்") உடைந்து உயிர் தப்பி இங்கே யாரும் வந்து சேர்ந்தால், அவர்களைக் கொல்லவேண்டாம். அவர்களுடைய அருமையான உயிரைக் காப்பாற்ற வேண்டும். முதுமை அடைந்து இறந்துபோகும் விலங்குகளைத் தவிர்த்து வேறு எந்த உயிர்களையும் (உண்ணுவதற்காகக்) கொல்ல வேண்டாம்.]


நாகர் தலவன் நன்றி காட்டுகிறான்:
"ஈங்கு எமக்கு ஆகும் இவ்-அறம் செய்கேம் ;
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க"
[சுருக்கமான பொருள்: இங்கே நாங்கள் எங்களுக்குத் தகுந்த அறத்தைச் செய்வோம். அங்கே உனக்கு உதவும் அருமையான பொருள் இதோ!]
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம்; அவர்தம் உறு பொருள் ஈங்கு இவை;
விரை மரம் மென் துகில் விழுநிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க"


[சுருக்கமான பொருள்: நெடுங்காலமாகக் கலம் கவிழ்ந்து வந்த மக்களை நாங்கள் உண்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்த பொருள்கள் இவை. மணம் நிறைந்த மரம், மெல்லிய துகில், நிறையப் பணம் (?) ... இவைகளை எடுத்துக்கொள்.]


அந்தப் பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான்.



சாதுவன் ஆதிரையுடன் சேர்தல்

உயிரோடும் பொருட்களோடும் ஊர் திரும்பிய சாதுவன் தன் மனைவி ஆதிரையுடன் சேர்ந்து வாழ்ந்து நல்ல பல தானங்களும் செய்கிறான்.


இப்படிப்பட்ட சிறப்புடையவளே ஆதிரை.


மணிமேகலைக்கு ஆதிரை பிச்சை இடுதல்



காயசண்டிகை மணிமேகலையிடம் ஆதிரை பற்றிச் சொல்லி, அந்தப் பத்தினியிடமிருந்து மணிமேகலை அமுதசுரபியில் பிச்சை வாங்கவேண்டும் என்று சொல்கிறாள்.


அதன் படியே ... மணிமேகலை தன் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி ஆதிரையின் வீட்டுல் வாயிலில் "புனையா ஓவியம்" போல நிற்கிறாள்.
ஆதிரை அவளைத் தொழுது வலம் வந்து, துன்பம் நீக்கும் வகையில், "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய பிச்சையை இட்டாள்!




மேலே உள்ள கடைசிப் பகுதியை எழுதியபோது ... கண்கள் கசிந்து நெடுநேரம் எழுத்தைத் தொடர முடியவில்லை...
இங்கே பல கேள்விகள் வரும்: காயசண்டிகை யார்? அவள் எங்கேயிருந்து வந்தாள்? எப்படி மணிமேகலையைப் பார்த்தாள்? அவளுக்கு எப்படி ஆதிரையைப் பற்றித் தெரியும்? ... இன்ன பல.
ஒவ்வொன்றாகப் பிறகு பார்ப்போம்.


அன்புடன்,
ராஜம்

--Ksubashini 08:00, 18 டிசம்பர் 2010 (UTC)

 

Contributors

Ksubashini

This page was last modified on 15 January 2011, at 07:29. This page has been accessed 21,576 times.