வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

போளி

From மரபு விக்கி

Jump to: navigation, search

போளி - 1

நாசரு (நண்பன்)



தேவையானப்பொருட்கள்:

மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
நல்லெண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:

கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.


வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.


அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.


வாழை இலைத்துண்டு அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் ஆரஞ்சு பழ அளவு மாவை வைத்து தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, அதை திருப்பி வைத்து, விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.


இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.


போளி - 2

திருமதி.கீதா சாம்பசிவம்
DSC006233bolis.JPG


கடலைப்பருப்பு ஒரு கிண்ணம் சூடு வர வறுத்துக் களைந்து ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு கிண்ணம் அல்லது அரை மூடி தேங்காய், ஏலக்காய் ஐந்து, ஆறு. பொடி செய்து கொள்ளவும். வெல்லம் 250 கிராம் தூள் செய்து கொள்ளவும்.


மேல் மாவுக்கு. அரை கிலோ மைதா, உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய், கலக்க நீர்.


மைதாவைச் சலித்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும், பிசையும்போதே கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்கவும். மாவு உருட்டும் பதத்தில் பிசைந்ததும், இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதற்குள்ளாகப் பூரணம் தயாரிக்கலாம்.


ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். பின்னர் மிக்சியில் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஏலக்காய் சேர்க்கவும், அரைக்கும்போதே கெட்டியாக வந்துவிடும். அப்படி வரலை என்றாலும் கவலை வேண்டாம். கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த விழுதைப் போட்டு சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். இறக்கி ஆற வைத்து ஏலக்காய் சேர்த்துச் சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

DSC006222boli.JPG

மைதா மாவு ஒரு உருண்டை எடுத்துக் கையாலோ, குழவியாலோ சப்பாத்தி மாதிரி இட்டு அதற்குள் கடலைப்பருப்புப் பூரணத்தை வைத்து மூடிப் பின்னர் மீண்டும் சமமாகத் தட்டவும். தோசைக்கல்லில் எண்ணெயும், நெய்யும் கலந்து தடவி விட்டு இட்ட போளியைப் போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கும்போது ஒரு முட்டை நல்ல நெய் விட்டு எடுத்து சூடு ஆறியது மூடி வைக்கவும். சூடாகவும் சாப்பிடலாம். இரண்டு நாள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.

DSC00621boli1.JPG

--Ksubashini 17:06, 18 மே 2010 (UTC)

Contributors

Ksubashini மற்றும் Geetha Sambasivam

This page was last modified on 15 April 2011, at 04:47. This page has been accessed 4,118 times.