வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பினாங்கின் கதை 2

From மரபு விக்கி

Jump to: navigation, search

பழங்கலத்தில் பழங்கள்

(ரெ.கார்த்திகேசு)

பினாங்கு இந்தியர்களின் பழங்காலத்தைக் கடந்த வாரம் கொஞ்சம் கிண்டிப் பார்த்தோம் அல்லவா? இந்த வாரம் இன்னும் கொஞ்சம்.

மலேசிய இந்தியர்கள் தொழிற் சங்கங்களில் அதிக ஆதிக்கம் வகிப்பதன் வரலாறும் பினாங்கிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஜாலான் சியாமில் இன்று கட்டடத்தைக் கொண்டிருக்கும் நகராண்மைக் கழகத் தொழிலாளர் சங்கத்திற்கு வித்திட்டவர்களும் தலைமை வகித்தவர்களும் இந்தியர்களே. 1946இல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மலாயா வந்திருந்த பொழுது இந்த சங்கத்தைத் தோற்றுவித்தார். இந்த தொடக்க விழா கம்போங் ஜாவா பாரு திடலில் நடந்தது. இதன் முதல் தலைவர் திரு வீராண்டி. (இதற்கு அண்மைக் காலம் வரை நாடறிந்த தமிழ்க் கவிஞர் கரு.திருவரசும் தலைவராக இருந்தார்.) அதைப் போலவே துறைமுகக் கழகத் தொழிலாளர் சங்கத்திற்கு திரு அப்பாதுரை என்பவர் தலைவராக இருந்திருக்கிறார்.

இந்த "நாற்காலிக்காரர் கம்பம்" கதையைச் சொல்லுகிறேன் என்றேன் இல்லையா? இப்படிப் பெயர் கொண்ட ஒரு கம்பம் இப்போது மௌண்ட் எர்ஸ்கின் இருக்கும் இடத்தில் இருந்தது. இப்போது இல்லை. பழையவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது என்ன நாற்காலிக்காரர் கம்பம்?

இப்போதுள்ள கொடிமலைக்குச் செல்லும் மலை ரயில் பாதை 1920இல்தான் பூர்த்தி செய்யப்பட்டது. இதற்கு முன் நமது வெள்ளைக்கார துரைமார்கள் மலைக்குச் செல்வதற்கு ஆட்கள்தான் தூக்கிச் செல்ல வேண்டும். அதற்குப் பல்லக்குகள் போல் நாற்காலிகள் அடித்துக் கம்புகளில் பொருத்தி அவர்களை உட்கார வைத்துத் தூக்கிச் செல்வார்களாம். அப்படி அவர்களைத் தூக்கிச் செல்ல தமிழ்நாட்டிலிருந்துதான் தொழிலாளர்கள் கொண்டு வந்து அமர்த்தப் பட்டனர். தண்ணீர்மலையில் அடிவாரத்தில் உள்ள (இப்போதைய மூன் கேட்) பகுதியில் இருந்துதான் இந்த ஏற்றம் ஆரம்பம். ஆகவே இப்படித் தூக்கிச் செல்லும் ஆட்கள் அங்குதான் குடிவைக்கப் பட்டார்கள். இவர்கள் நாற்காலிக்காரர்கள். இவர்களுக்குத் தலைவர் நாற்காலித் தண்டல். இருப்பிடத்தின் பெயர் நாற்காலிக்காரர் கம்பம். இவர்களின் சந்ததிகள் இன்னமும் இந்தப் பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

1804 வாக்கில் பினாங்கில் தண்ணீர் அளிப்புக்கு மிகுந்த தேவை ஏற்பட்டதால் தண்ணீர்மலை அணையிலிருந்து தண்ணீர் இப்பொதைய லாருட் ரோட்-ஹட்டன் ரோட் சந்திப்பில் உள்ள தாங்கிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜோர்ஜ் டவுனின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப் பட்டது. இந்தப் பகுதிக்கு அப்போது இந்தியர்கள் வைத்த பெயர் "தண்ணிச் சாலை".

இந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்தான் இந்த தண்ணீர்மலை அணைக்கு மேலாக உயரமான இடத்தில் ஒரு வேல் ஒன்றை நட்டு முருகன் கோயிலை ஏற்படுத்தினார்கள். பின்னர் இந்த இடம் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டதால் அந்த வேல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது தண்ணீர்மலை மலைக் கோயில் அமைந்துள்ள இடத்தில் நிறுவப்பட்டு இப்போதைய கோயில் உருவானது.

இப்போது Youth Park உள்ள இடம் கல்லுடைக்கும் மலையாக இருந்தது. இந்தக் கல்லுமலைத் தொழிலாளர்களும் இந்தக் கோயிலை ஆதரிக்கத் தொடங்கினர். இவர்களுடைய ஆதரவில்தான் தைப்பூசம் கொண்டாடப்படத் தொடங்கி இன்று உலகம் எல்லாம் அறிந்த தலமாக விளங்குகிறது. 1871இல் பினாங்குக்கு வந்த அப்துல்லா முன்ஷி தைப்பூசத்தைத் தமிழர்கள் கொண்டாடுவதை வருணித்துள்ளார்.

1800களில் தமிழர்கள் ஆயர் ஈத்தாம் பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். செந்தோட்டம், வீரையன் தோட்டம், கருப்பன் தோட்டம், புதுக் கம்பம் ஆகிய பெயர்களில் அவர்கள் குடியிருப்புகள் விளங்கின. கம்போங் பாருவில் இன்றும் இருக்கும் "அம்பலக் காளியம்மன் கோயில்", தமிழ் நாட்டில் உள்ள அம்பலக்கரத்தூர் என்னும் ஊரிலிருந்து கொண்டுவந்த ஒருபிடி மண்ணை வைத்து எழுப்பப்பட்டது. ஆகவேதான் அந்தப் பெயர்.

இப்போது நான் வசிக்கும் குளுகோர், அடுத்துள்ள சுங்கை டுவா, சுங்கை நிபோங் ஆகிய பகுதிகள் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகள். அவை பெரிய தோட்டம் என்றும் சின்னத் தோட்டம் என்றும் வழங்கி வந்திருக்கின்றன. இந்த நிலம் பிரௌன் என்னும் வெள்ளைக்காரருக்குச் சொந்தமானது. அவர் இறுதியில் இந்த நிலத்தை விற்றபொழுது ஏற்கனவே அங்கு குடியிருந்த தமிழர்களுக்கு நிலத்தை ஒதுக்கித் தந்து வீடுகளும் கட்டிக் கொடுத்திருக்கிறார். (ம்... அது ஒரு காலம்!). இப்போதும் இந்த இடங்கள் பொதுவாக பிரௌன் கார்டன் என்றே குறிக்கப் படுகின்றன.

தஞ்சொங் தொக்கொங் மற்றும் தெலொக் பஹாங் பகுதியில் தமிழர்கள் மீனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டின் தொண்டி, நம்புதளை, வட்டணம், சுந்தரபாண்டியன் பட்டணம் ஆகியவற்றிலிருந்து குடியேறியவர்கள். இந்தச் சமூகம் அனேகமாக அழிந்து விட்டது.

பினாங்கின் கதை போதுமா, இன்னும் வேணுமா?

Contributors

Karthi மற்றும் Ksubashini

This page was last modified on 4 January 2010, at 20:23. This page has been accessed 2,086 times.