வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பாசுர மடல் 088 : ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம் !

From மரபு விக்கி

Jump to: navigation, search

ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம் !


 மாலையும் வந்தது; மாயன் வாரான்;
மாமணி புலம்பல் ஏறுஅ ணைந்த;
கோலம்நல் நாகுகள் உகளும் ஆலோ!
கொடியன குழல்களும் குழறும் ஆலோ!
வால்ஒளி வளர்முல்லைக் கருமு கைகள்
மல்லிகை அலம்பிவண்டு ஆலும் ஆலோ!
வேலையும் விசும்பில்விண்டு அலறும் ஆலோ!
என்சொல்லி உய்வன்இங்கு அவனை விட்டே?
(திருவாய்மொழி 9.9.10)

                                                                                                              
Rabindranath-tagore.jpg


நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாடல்.அவர் வீட்டு வாசல் கதவை "" வென்று திறந்து வைத்து விட்டுக்காத்திருக்கிறார். காத்து, காத்து கண்கள் பூத்ததுதான் மிச்சம். கண்கள் கொஞ்சம் அசந்த பொழுதில் கண்ணன் (இறைவன்) வந்து போகிறான். விழித்த போதுதான் தெரிந்தது அவன் வந்து போனது! இந்த ஆற்றாமையை கவிதையாக்குகிறார் தாகூர்.


தியாகராஜர் மெய் மறந்து நாத உபாசனையில் நிற்கிறார், சீதா தேவி சமேதராய் இராமன் வந்து போகிறார். மனைவி சொல்லித்தான் தெரிகிறது.அவரது மனது என்ன பாடு பட்டிருக்கும். கீர்த்தனைகளாய் பொழிகிறார்.

                                                                                                  
2003041800991002.jpg
  

இப்படி மாலையும் வந்தது. கண்ணன் வரக் காணோம்.


வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடீ! இனி உயிர் இருந்து என்ன, போய் என்ன? மாமணிகள் ஒலிக்க ஏறுகள் வீடு திரும்பிவிட்டன. எங்கு பார்த்தாலும் ஆக்களின், கன்றுகளின் ஓசை! ஆனால் கண்ணன் வரக் காணோம்!


குழல் ஓசை எங்கிருந்தோ கேட்கிறது. ஆனால் கண்ணன்வரக் காணோம்.


வெண்ணிலவைப் பழிக்கும் முல்லை, மல்லிகை, கருமுகை போன்றவை மலர்ந்து சிரித்து வண்டுகளுடன் சங்கமித்துகூடி நிற்கின்றன. ஆனால் கண்ணன் வரக் காணோம். இக்கொடுமைகண்டு பொறுக்காது, கடலும் விண்ணில் முட்டி ஆர்ப்பரித்துஅலறுகிறது. ஆயின் கண்ணன் வரக் காணோம்.


இப்படி அவனை விட்டுப் பிரிந்த நான் இனி எதைச் சொல்லிப் பிழைப்பேன் என்று முடிக்கிறார் நம்மாழ்வார். இனி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவரே சொல்லி விட்டார்! கன்றுகள் வந்து போகும் மாட்டுக் கொட்டில் உள்ள வீட்டில் வசித்தால் தெரியும், பிரிவும், சேருதலும் மனிதர்க்கு மட்டும் உரித்தான உணர்வு அல்ல அன்று. ஆவுடைப் பெரு வாழ்வு சங்கப் பாடல்களில் சிலாகித்துப் பேசப் படுகிறது.


தேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த
ஆபூண்தென்மணி இயம்பும்
உதுக்காண் தோன்றும்எம் சிறுநல் லூரே!

என்று நற்றிணை, நல்லூரின் சிறப்பை ஆ வளம் கொண்டு செப்புகிறது.


எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
பூல்லார் நல்லான் பூண்மணி

என்கிறது குறுந்தொகை.


கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை

என்கிறது மலைபடுகடாம்.

                                                                                    
Krishna-946833.jpeg


ஆக, கோக்களும், கோவலர்களும் தமிழ்நில அமைவின் நிரந்தரப் பங்காளர்களே. அப்படி இருக்கையில் கண்ணன் கதைகள் கோவலர் நிறைந்த முல்லைத் திணையில் இயல்பாய் தோன்றி வளர்ந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும்,"மாயோன் மேவ காடுறை உலகமும்" என்று செப்புவதால்முல்லைத் திணையின் ஆன்மீக வெளிப்பாடாக கண்ணன் வந்து நிற்கிறான். கண்ணன் என்னும் கருந்தெய்வம் தமிழ்த் தெய்வம். சூலுடை மேகங்களை நினைவுறுத்தும் அவன் மேனி தற்செயலாக வந்தது அன்று. அது அந்த நில அமைவின் சீரிய பண்பே!


மீரா பஜன் கேட்க:


கிருஷ்ணப்பிரேமாம்ருதம்




நா.கண்ணன்.

Date - Tue., 18, July, 2000  00.12.53  +0200

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 5 December 2010, at 12:39. This page has been accessed 1,658 times.