வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பாசுரமடல் 017 : வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்.

From மரபு விக்கி

Jump to: navigation, search

வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்.




 வியாக்யானம்" என்ற சொல்லை ஆழ்ந்து படித்து, விரிவான விளக்கம் சொல்லுதல் என்று கொள்ளவேண்டும். பாசுரங்கள் மேலோட்டமாக வெறும் கவிதைகள் போல் தெரிந்தாலும் அவை ஆழமான பொருள் கொண்டவை. பல நூல் கற்ற அறிஞர்கள் இப்பாசுரங்களுக்கு கொடுக்கும் விளக்கம் கேட்க மிக அருமையாக இருக்கும். "சும்மா" என்ற சொல்லை வைத்து நண்பர் ஜெயபாரதி எவ்வளவு சொல்லுகிறார். இதுதான் வியாக்கியானம் என்பது. ஒரு சின்ன சொல்லுக்குள் உலகத்தைக் காட்டும் செப்பிடு வித்தை!வியாக்கியானம் வாழ்வுக்கு சுவை கூட்டுவது. ரசனைக்கு விருந்து அது. வைணவ இலக்கியமான பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஆச்சர்யகரமான விளக்கங்கள் தந்துள்ளார். இதில் சமிஸ்கிருத புலமை மேலும் மெருகு கொடுக்கிறது. பல சமயங்களில் ஆவல் மிகக்கொண்டு மணிப்பிரவாளமாக இவ்விளக்கங்கள் அமைந்துவிடும் போது நாம் தடுமாறுகிறோம். எனவே எளிதான விளக்கங்கள் தேவைப் படுகின்றன.


"ஆச்சார்யன்" என்பதை ஆழ்ந்த புலமையுள்ள, மனிதநேயம் மிகக் கொண்ட மனிதர் என்று கொள்ள வேண்டும்.இவர்களிடம் உட்கார்ந்து பாடம் கேட்டால் அவர்கள் நடத்தையின் மூலமும், அவர்கள் அன்பின் மூலமாகவும்,அவர்கள் கற்ற கல்வியின் மூலமாகவும் பாசுரங்களின் உட் பொருள் தெரிய வைப்பர். வைணவ பரம்பரையில் இராமானுச முனி என்பவர் ஆசார்யர்களில் மேரு மலையாக நிற்கிறார். இன்று நாமெல்லோரும் இப்பாசுரங்களை வாசித்து அனுபவிப்பதற்கு இரண்டு பேர் முக்கிய காரணம்.


1. காலத்தால் அழிந்து போன பாசுர நூல்களை நமக்கு கிடைக்கச் செய்த நாத முனி. இவர் உ.வே.சாமிநாதையர் மாதிரி (இவர் யார் என்று கேட்டு விடாதீர்கள்!)


2. தமிழ் வேதமென்ற பெரும் பொருளை நடைமுறைக்கு கொண்டு வந்து வைணவ சம்பிரதாயத்தை நிறுவி பாசுரங்களை திருமால் கோயில்களிலெல்லாம் முழங்க வைத்தவர் இராமானுசமுனி. இதை


செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணியும் பரன் தாள் அன்றி எதாரியா
மெய்யன் இராமானுசன் சரணேகதி வேறெனக்கே

(இராமானுச நூற்றந்தாதி 13)


                                                                              
Ramanujapage.jpg


பசுந்துளபம் -துளசி; மறைத்தமிழ் -பாசுரம்; சீரங்கத்தையன் - ஸ்ரீரங்கத்து ஐயன் ஸ்ரீராமானுஜன்


என்ற பாடல் மூலம் அறியலாம். இவரது அன்புள்ளம் சரித்திரம் அறிந்தது. அரிய சில இரகசிய கிரந்தங்களை கற்கிறார் இராமானுசர். இவர் ஆச்சார்யன் சொல்லுகிறார், இதை யாருக்கும் பறை சாற்றக்கூடாது. தனக்குள்ளே வைத்து அனுபவிக்க வேண்டுமென்று. அடுத்த நாளே நம்ம இராமானுசர் கோயில் கோபுரத்தில் ஏறி எல்லோருக்கும் சொல்லி விடுகிறார். ஆச்சார்யனுக்கு கோபம். குரு வார்த்தையை மீறினால் நரகம் என்கிறார். அதற்கு நம் இராமானுசர் - வரும் நரகம் எனக்கு இருக்கட்டும். கேட்ட எல்லோருக்கும் சொர்க்கம்தானே என்கிறார். இந்த இரகசிய மந்திரம் என்ன?:


குலந்தரும்; செல்வந் தந்திடும் அடியார்
படுதுயராவின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்

வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற
தாயினுமாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


(பெரிய திருமொழி 9 - திருமங்கை ஆழ்வார்)


இப்பாட்டை வரிக்கு, வரி உண்மையென ஆக்கிய பெருமான் இராமானுச முனி (அதை வேறொரு சமயம் பார்ப்போம்).


இம்மாமனிதனிடம் மயங்காத ஆட்களே இல்லை. நம்ம பாரதிதாசன் என்ன சொல்லுகிறார் பாருங்கள்:


முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?......"


வேல்ஸ் இளவரசரை வரவேற்று கவி செய்த பாரதி, மாமுனி புரட்சித் திலகம் இராமானுசனைப் பாடாதது பெரும் குறையாகப் படுகிறது


பேராசிரியர். சிற்பி பாலசுப்பிரமணியன் (இடதுசாரி?) வானம்பாடிக் கவி. அவர் இன்று இராமானுச காவியம் இயற்றிக் கொண்டு இருக்கிறார். முற்போக்காளர்கள் எல்லோரையும் - பெரியாரையும் சேர்த்து- கவர்ந்தவர் இராமானுச முனி

                                                                         
Ramanuja.jpg


இத்தகைய ஆச்சார்யர்கள் நல்ல தமிழ் போல் இப்போது அரிதாகிவிட்டனர் :-]


நா.கண்ணன்.

Date . Fri . 03 Oct , 1997 20.23.45 + 0100.


.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 16 November 2010, at 14:30. This page has been accessed 1,665 times.