வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பயண அனுபவங்கள்: அந்நிய மண்ணில் - டாலரும் ரூபாயும்

From மரபு விக்கி

Jump to: navigation, search

ஆனால், பசியை அடக்கியாயிற்றே ஒரு வழியாக. அதற்கு 230 சொச்சம் ரூபாய் பெறுமான ஒரு சின்ன பீர் கேன் தேவைப்பட்டுள்ளது. ஆனால் 500 ரூபாய் நோட்டை மாற்றி இரண்டு கப் காஃபி சாப்பிட்ட அந்தத் தெலுங்கு தம்பதிகளை விட நான் புத்திசாலித்தனமாகப் பணத்தைச் செலவழித்ததாக நினைத்துக்கொண்டேன். இனி விமானம் வரும் வரை பொழுது போகிவிடும்.. அந்த இடத்தை விட்டு நகர்ந்து டோரண்டோ போகும் விமானம் வரும் கேட்டை நோக்கி நடந்தேன். அதிக தூரம் இல்லை ஆனாலும் தூரம் தான். நடந்து போகும் தூரம் தான். அந்த கேட்டின் முன் இருந்த தங்குமிடத்தில் முன்னர் விமானத்தில் வந்த பலரைப் பார்த்தேன். ஆனால் அவர்களில் விமானத்தில் பார்த்த காரைக்குடி மணியை அவர் சகாக்களோடு காணவில்லை. அவர் இங்கேயே ஃப்ராங்ஃபர்ட்டில் இறங்கி ஜெர்மனியில் வேறு இடத்திற்குப் போவாராக இருக்கும். தமிழ்க் குடும்பங்கள் பலரைக் காணமுடிந்தது. விமானத்தில் உட்கார்ந்ததும் கொஞ்ச நேரத்தில் நான் எதிர்பார்த்த படியே சாப்பாட்டுக்கான யத்தனங்கள் தொடங்கின. இப்போது வைன் சாப்பிடலாமா அல்லது வேறு ஸ்ட்ராங்கா ஏதாவது கேட்கலாமா என்று யோசனையில் ஆழ்ந்தேன். என்ன இருக்கோ? விஸ்கி சோடா என்று கொஞ்சம் வரிசைகள் முன்னால் யாரோ கேட்ட குரல் கேட்டது. அதுவும் இருக்கு போலிருக்கே என்று மனம் சமாதானம் அடைந்தது. எனக்கு எதையோ வெஜிடேரியன் என்று சொல்லி என் கதையை இவர்கள் முடித்து விடுகிறார்களாதலால் விஸ்கி சாப்பிட்டுக் கொஞ்சமாவது ஈடுகட்டலாமே என்று தோன்றிற்று. எனக்கு விஸ்கி சோடா என்று கேட்டுப் பெற்றுக்கொண்டேன். இனி அவர்கள் கொடுப்பதைச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். மாமிசம் சாப்பிடுபவர்களுக்குச் செலவழிப்பதில் பாதியாவது எனக்கு இவர்கள் செலவழிக்கக்கூடாதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. மறுபடியும் என்னவோ அமிதாப் பச்சன் படம் ஓடிக்கொண்டிருந்தது. விமானத்தில் இருக்கும் மற்றப் பிரயாணிகள், இந்தியரல்லாதவர்கள், இந்த அமிதாப் பச்சனின் ஆட்டத்தையும் பாட்டையும் நாடக மேடை நடிப்பு பாவனைகளையும் பார்த்து என்ன நினைப்பார்கள்? சிரிக்கமாட்டார்களா என்று தோன்றும். அவர்களில் யாரும் ஓடும் படத்தை அவ்வளவாக லட்சியம் செய்வதாகத் தோன்றவில்லை. இல்லை, ஒரு வேளை தங்களுக்குப் பிடித்த பாட்டு ஏதாவது கேட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ. நேரம் கடந்தது. இன்னும் ஒரு சுற்று வந்தபோது மறுபடியும் விஸ்கி சோடா தான் கேட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் டோரண்டோ விமான தளம் இறங்கும். ஏதோ immigration form ஒன்று கொடுத்தார்கள். என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கிறார்கள்? எங்கே போகிறாய், எத்தனை நாள் தங்கியிருப்பாய்? - என்னவோ எழுதி அதை நிரப்பினேன்.


விமானம் தரை இறங்கியதும் வெளி வந்தால் அங்கு ஒரு பஸ் வந்து நின்றது. அது எங்கேயோ இட்டுச் சென்றது ரொம்ப தூரம் கடந்து. எனக்குத் தெரிந்த அனுபவத்தில் அதிகம் போனால் மூன்று நான்கு நிமிடங்களுக்கு மேல் ஆகக்கூடாது. அப்படியிருக்க இவன் என்ன எங்கோ போய்க்கொண்டே இருக்கிறதே, தப்பாக இந்த வண்டியில் ஏறிவிட்டோமோ என்று கூட ஒரு பயம். ஆனால் நல்ல வேளையாக cargo வந்து சேருமிடத்திற்குக் கொண்டு சேர்த்தது. கன்வேயர் பெல்ட்-ஐச் சுற்றி எல்லோரும் நிற்கத்தொடங்கியிருந்தனர். நானும் ஒரு தள்ளுவண்டியை எடுத்துத் தள்ளிக் கொண்டு கன்வேயர் பெல்ட் சுழன்று வரும் இடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்த போது சீருடை அணிந்த ஒரு தாட்டியான மனிதன் என்னை நெருங்கி "நான் உங்களுக்கு உதவட்டுமா? 9 டாலர் கொடுங்கள் போதும்" என்றான். ஆக இது கனடா விமான தளத்தில் உள்ள போர்ட்டர். நம்முரில் ஒரு பெட்டிக்கு பத்து ரூபாய் கேட்பான் இரண்டு பெட்டிகளுக்கு இருபது ரூபாய் ஆகும். ஆனால் அவன் ரயில் பெட்டியிருந்து வெளியே ஆட்டோ நிற்குமிடம் வரை அல்லவா தூக்கி வருவான். இவன் கன்வேயர் பெல்டிலிருந்து எடுத்துப் பக்கத்திலேயே தள்ளுவண்டியில் வைப்பதற்கு $9 X 33.00= 297 ரூபாயல்லவா கேட்கிறான்? அது போக இவனுக்குக் கொடுக்கக் கனடியன் டாலருக்கு நான் எங்கே போவது? "நன்றியப்பா, நானே பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லி அவனிடமிருந்து தப்பித்தேனே ஒழிய, டோரண்டோ வந்து 10 நிமிடம் ஆகவில்லை. அதற்குள், இந்த ரேட்டில் போனால் இந்த டோரண்டோவில் எப்படி பாக்கி 15 நாட்களைக் கழிக்கப் போகிறோம் என்ற கவலை வந்து விட்டது. இந்தக்கூட்டத்தில் எப்படி நான் முண்டியடித்துக்கொண்டு முன் சென்று நின்றுகொண்டு கன்வேயர் பெல்டில் என் இரு கனமான பெட்டிகளையும் எடுக்கப் போகிறேனோ என்ற கவலை ஏற்பட்டது. என் பெட்டி வருவதை தூரத்தில் பார்த்ததும், பக்கத்தில் இருந்தவரிடம், "தயை செய்து அதை எடுத்துத் தரமுடியுமா?" என்று கேட்டேன். அவர் உடனே எந்தத் தயக்கமுமின்றி அதைத் தூக்கி என்னிடம் கொடுத்தார். அப்படியே அடுத்த பெட்டி வரும் போதும் அவர் உதவினார். நம்மூரில் பெட்டியை எடுத்துத் தர 297 ரூபாய் கூலி கேட்பவனையும் பார்க்கமுடியாது. தன் சாமான்கள் வரும் நேரத்தில் பக்கத்தில் இருப்பவனுக்கு உதவும் மனிதரையும் பார்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன்.


இரண்டு பெட்டிகள், ஒரு தோள்பை எல்லாவற்றையும் அடுக்கிய வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தால் அங்கு immigration checking எதிரே இருந்தது, இரண்டு மூன்று வரிசை மனிதர்களோடு. ஒவ்வொருவர் கையிலும் விமானத்தில் கொடுக்கப்பட்ட immigration form-ம் இருந்தது. அப்போது தான் நான் அந்த ஃபார்மை விமானத்திலேயே விட்டு வந்துவிட்டேன் என்பது தெரிந்தது. இப்போது என்ன செய்வது. சென்னையில் தான் கஸ்டம்ஸ் நடராஜன் உதவி செய்தார். ஒரு விக்கினமும் இல்லாமல் கஸ்டம்ஸ் தடைகளைக் கடந்து வந்தேன். இங்கு எந்த நடராஜன் கிடைப்பார்? ஏதோ சீருடை அணிந்திருந்த ஒரு விமானதளப் பெண் ஒருத்தியின் அருகில் சென்று "என்னிடம் இந்த ஃபார்ம் இல்லையே, தெரியாது விமானத்திலேயே விட்டு வந்துவிட்டேனே என்ன செய்வது?" என்று கேட்டேன். அவள் சிரித்துக் கொண்டே,"No problem," என்று சொல்லி, எங்கிருந்தோ ஒரு ஃபார்ம் கொண்டு வந்து தந்தாள். இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்கள், இந்த மாதிரி சமயங்களில் இது தான் சந்தர்ப்பம் என்று சத்தம் போட்டு தன் அதிகாரத்தைக் காண்பிக்கவேண்டாமா? இதிலேயே கொஞ்சம் பணம் பார்க்கலாமே என்று தோன்றிற்று. நம்மூர் அனுபவங்கள் எனக்கு அவ்வளவு சுலபமாக மறந்து விடுமா என்ன? அந்த ஃபார்மை பூர்த்தி செய்து நானும் வரிசையில் நின்று கொண்டேன். அதிக நேரம் ஆகவில்லை. பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் என் முறை வந்ததும், பூர்த்தி செய்த ஃபார்மைக் கொடுத்தேன். immigration அதிகாரி அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னை நோக்கி, "ஓ நீங்கள் தமிழரா, அப்போ இலங்கைக்காரரா?" என்றார். "இல்லை. தமிழன் தான். ஆனால் இந்தியாவிலிருந்து வருகிறேன். இங்கு கனடாவில் க்விபெக்கில் ஃப்ரெஞ்சு பேசுகிறார்களே அவர்கள் எல்லாம் ஃப்ரெஞ்சுக் காரர் இல்லையல்லவா, அது போல்தான்" என்றேன். அவரது முகத்தில் ஒரு சின்னப் புன்னகை. "ஆமாம் என் உறவுக்காரர் கூட ஒருவர் தமிழ் பேசுகிறவர், இலங்கைக்காரர் இருக்கிறார்" என்றார். இவர்கள் என்ன இவ்வளவு பேசுகிறார்கள், அதுவும் சுமுகமாக, சகஜமாக. கொஞ்சம் கெத்தோடு இருக்கவேண்டாமா? என்று நினைத்துக்கொண்டேன். "எதற்காகக் கனடா வந்திருக்கிறீர்கள்?" என்று அவர் கேட்க, "ஒரு இலக்கிய விருது பெறுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். டோரண்டோ யுனிவர்சிடியும் இங்குள்ள ஒரு தமிழர் இலக்கிய ஸ்தாபனமும் சேர்ந்து வழங்குகின்றன. வேண்டுமானால் டோரண்டோ யுனிவர்சிடியிலிருந்து வந்துள்ள கடிதத்தைப் பார்க்கிறீர்களா?" என்று கேட்டேன். "No, NO Your word is good enough. thank you. நீங்கள் போகலாம் . என் வாழ்த்துக்கள்" என்று சொல்லி அவர் தரப்புக் கேள்விகளை முடித்தார். இந்தச் சோதனை சுமார் மூன்று நிமிடங்களுக்குள் முடிந்து போனது.


தில்லியில் கனடா ஹை கமிஷனுக்கு விஸா வாங்கப் போன போது, அதற்கு ஒரு நாள் முன்னதாக தேசீய நாடகப் பள்ளியின் ராஜேந்திரன், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வரும் அனுபவம் மிக்க ஒருவரைத் தன் அறைக்கு அழைத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அனுபவம் மிக்கவர் என்னை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தார். "உங்களுக்கு விருது கொடுக்கும் நாளுக்கு முன்னும் பின்னும ஒரு நாள் என்று மூன்று நாட்களுக்குத் தான் விஸா கிடைக்கும். பதினைந்து நாட்கள் தங்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, அவ்வளவு நாள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைச் சொல்லவேண்டியிருக்கும். அதற்கு ஆதாரம் காட்ட வேண்டியிருக்கும். அங்கு தமிழர் ஸ்தாபனங்களில், பல்கலைக் கழகத்தில் பேசச் சொல்வார்கள் என்றால், அங்கு நீங்கள் ஏதோ வேலை மேற்கொள்கிறீர்கள், சம்பாதிக்கச் செல்கிறீர்கள் என்று ஆகிறது. அப்படியானால், Labour Commissioner-டம் அதற்கான பிரத்யேக அனுமதி வாங்க வேண்டியிருக்கும்" என்று சொன்னார். அனுபவம் மிக்கவர். அடிக்கடி வெளிநாடு செல்பவர். அவர் சொல்வதை நம்பத்தானே வேண்டும்? பயமுறுத்தித் தான் இருந்தார். அதற்கு நேர் மாறாக, வெகு சுலபமாக வெகு சினேக பாவத்தோடு கனடாவின் immigration அதிகாரியுடன் ஒரு சந்திப்பும் சோதனையும் நடந்து முடிந்திருந்தது. ஆச்சரியமாகவும் மிகுந்த சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே இந்தியாவாகத் தமிழ் நாடாக இருந்திருந்தால், 'வந்தாரை வாழ்விக்கும் பண்பு மிக்க தமிழ் நாட்டு அதிகாரிகள் என்ன பாடு படுத்தியிருப்பார்கள்! என்று நினைத்துக்கொண்டே. தன் எதிரே வரிசையில் நின்று இப்போது தன் முன் நின்று தன் கேள்விகளுக்கெல்லாம் பயந்து பயந்து பதிலளிக்கும் நிலையில் உள்ள மனிதரிடம் தன் அதிகாரத்தைக் காட்டாது விடும் தமிழ் அதிகாரியை எங்காவது நாம் கண்டதுண்டா, ஒரு சாதாரணக் காவல் நிலையமாகட்டும், அல்லது ஒரு கிராமத்துப் பஞ்சாயத்து அலுவலகமே ஆகட்டும், "உங்கள் வார்த்தைகளே போதும், நான் நம்புகிறேன் என்றா புன்னகையுடன் பேசுவான் அந்த மனிதன்? "ஏன்யா நாங்க என்ன வேலை கெட்டு வெட்டியாவாய்யா உட்காந்திருக்கோம். என்ன நெனச்சிக்கினே நீ? பெட்டியைத் தொறய்யா முதல்லே, நீ என்னத்தை மறச்சு வச்சுக்கினேன்னு பாப்பம்" என்ற டயலாகோடு தான் அந்தச் சந்திப்பு தொடங்கியிருக்கும்.


(தொடரும்)

வெங்கட் சாமிநாதன்/8.5.08


--Ksubashini 21:30, 1 டிசம்பர் 2010 (UTC)

Contributors

Ksubashini மற்றும் Geetha Sambasivam

This page was last modified on 10 February 2012, at 23:26. This page has been accessed 2,848 times.