வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நவராத்திரி நாயகியர்

From மரபு விக்கி

Jump to: navigation, search


அழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1


நவராத்திரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெண்களுக்கு மட்டுமான பண்டிகை என்றும் சொல்லலாம் என்றாலும், ஆண்களின் பங்கில்லாமல் இது நிறைவேறாது. பெண் தெய்வம் ஆகிய சக்திக்காகவும், அவள் தன் சக்தியால் அசுரத் தனங்களை ஒழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்ட பண்டிகை இது. தேவியரின் சக்தியை மூன்று வகையாய்ப்பிரிக்கின்றோம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூவகைப்படும் சக்திகளின் ஆதிசக்தி ஸ்ரீலலிதை ஆவாள். சக்தி உபாசகர்களால் பெரிதும் கொண்டாடப் படும் இந்த நவராத்திரி , அவரவர் வீட்டு வழக்கங்களின்படியே கொண்டாடப் படுகின்றது. என்றாலும் அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாய் நினைத்துச் சிறப்பித்து, அந்த, அந்தப் பருவத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக வழிபட்டு அதற்கு உகந்த நைவேத்தியங்கள் செய்து, அலங்காரங்கள் செய்து வழிபடுவது பலராலும் பின்பற்றப் படுகின்றது.



அசுர சக்தி மேலோங்க, மேலோங்க மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. ஆகவே பயம் போக்கும் துர்கைக்காக முதல் மூன்று நாட்களும், பயம் நீங்கி செல்வம் அடைய லக்ஷ்மியை நினைந்து அடுத்த மூன்று நாட்களும், அறிவையும், ஞானத்தையும் பெறக் கடைசி மூன்று நாட்களையும், முறையே துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவில் வைத்துப் பூஜிக்கின்றோம். இந்த நவராத்திரி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த முறைப்படி ஒவ்வொரு வகையாய்க் கொண்டாடப் படுகின்றது. அண்டை மாநிலம் ஆன கேரளாவில் கடைசி 2 நாட்கள் சரஸ்வதி பூஜையும், அதை அடுத்த விஜயதசமியும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விமரிசையாகக் கொலு வைத்து, பிறரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பரிசுப் பொருட்கள், சுண்டல் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு நாளுக்கும் உகந்த நைவேத்தியமும் பண்ணுவதுண்டு.


ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது. சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும், ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும், தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது. சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் இவளே, அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும் சரஸ்வதி என்பவளும் இவளே! அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச் சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே. அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.
ஸ்ரீவித்யா வழிபாடு என்னும் சாக்த வழிபாட்டு முறையில் அம்பிகையை வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி கொண்டாடுவதன் மூலம் வழிபடுகிறார்கள்.


அவை யாவன:-

சாரதா நவராத்திரி- தமிழ் புரட்டாசி மாதம்,

வசந்த நவராத்திரி-தமிழ் பங்குனி மாதம்

ஆஷாட நவராத்திரி ஆனி மாதம்

சியாமளா நவராத்திரி தை மாதம்


இவற்றில் சாரதா நவராத்திரி ஸ்ரீ சரஸ்வதிக்கும், வசந்த நவராத்திரி ஸ்ரீராஜ மாதங்கி க்கும், ஆஷாட நவராத்திரி ஸ்ரீ வாராஹிக்கும்., சியாமளா நவராத்திரி ஸ்ரீ ராஜச்யாமளைக்கும் கொண்டாடப் படுகிறது.


--Geetha Sambasivam 10:12, 20 நவம்பர் 2010 (UTC)



Images kolu.jpg

Contributors

Geetha Sambasivam மற்றும் Vinodh

This page was last modified on 25 November 2010, at 09:17. This page has been accessed 3,939 times.