வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 4

From மரபு விக்கி

Jump to: navigation, search

நடராஜா, நடராஜா, நர்த்தன சுந்தர நடராஜா! 1

Shiva nataraja -2-2.jpg

இந்த உலகும் சரி, பஞ்ச பூதங்களும் சரி, சதா காலமும் ஆடிக் கொண்டே இருக்கிறது. பாடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண்ணில் இருந்தே அனைத்து வகைச் செடி, கொடிகள், மரங்கள், நதிகள் தோன்றி இருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அசைவுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் நவரத்தினங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன என்றால், மரங்கள் இலைகளை ஆட்டி அசைக்கின்றது, சர, சர வென்ற சப்தத்துடனேயே. செடி, கொடிகளும் அவ்வாறே தம் இலைகளை ஆட்டுகின்றன. அதே போல் நதிகளும் அலைகளுடனேயே ஓடுகின்றது. சுழித்துக் கொண்டு ஓடுகின்றது. பிரவாகம் எடுத்துப் பேரொலி கொடுத்துக் கொண்டு ஓடுகின்றது. அருவியாக ஓசையோடு கொட்டுகின்றது.


விண்ணிலோ என்றால் இடி, இடிக்கின்றது, மின்னல் மின்னுகின்றது. மழை கொட்டுகின்றது. இப்படி அனைத்திலும் ஓர் அசைவு ஏற்பட்டு அசைவுகளே இல்லாத உலகே இல்லை எனும்படி இருக்கின்றது. காற்று தென்றலாய் வருடுகின்றது, புயலாய் வீசுகின்றது. அக்னியோ ஊழித் தீ போல் எரிகின்றது, அல்லது சிறு நெருப்பாகக் கண கண வெனப் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதங்களும் நடனம் ஆடுகின்றன. அசைவின்றி எதுவும் இல்லை. அறிவியலில் அணு கூட அசைவதாகவே சொல்கின்றனர். இந்த மாபெரும் அறிவியல் தத்துவத்தின் வடிவமே நடராஜர் ஆவார்.


இந்த நடராஜர் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள் பற்றியும், அவற்றில் முதன்மையாக விளங்கும் நடராஜ அமைப்பைப் பற்றியும் இனி காண்போம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன?


எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.


பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :


1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.


ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?


அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.


பொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.


அந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான்? அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம்? ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு.


அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே


தில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது:


அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும்.


நடராஜர் தொடருவார்!


--Geetha Sambasivam 11:56, 7 பெப்ரவரி 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 7 February 2011, at 12:00. This page has been accessed 3,174 times.