நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 8மரபு விக்கி இருந்துஅடுத்து நாம் காணப் போவது இந்த உலகையே தன் ஆட்டத்தால் ஆட்டி வைக்கும் ஈசனின் பிச்சை எடுக்கும் கோலம். பரந்துல கேழும் படைத்த பிரானை `இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
என்று திருமூலர் தம் திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்தில் இறைவனின் பிட்சாடனத் திருக்கோலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.
தாருகாவனத்து முனிவர்கள் தத்தம் மனைவியரோடு கூடி கடுந்தவம் செய்து வந்தனர். தவங்களால் பல சித்திகளையும் பெற்றனர். அளப்பரிய ஆற்றலையும் பெற்றனர். தாம் தவங்கள் செய்து பெற்ற ஆற்றலால் ஆணவம் அதிகம் ஆகியது முனிவர்களுக்கு. ஈசன் அருளாலேயே இவை கிடைத்தன என்பதையும் மறந்து, ஈசனையும் மறந்து, தம் தவமே சிறந்தது, தம் ஆற்றலே சிறந்தது, தாமே அனைத்திலும் வல்லவர்கள் என்னும் எண்ணம் மேலோங்கியது. செருக்கு அடைந்த அவர்களுக்குப் புத்தி புகட்ட ஈசன் நினைத்தார். உடனே போடப் பட்டது ஒரு கலந்து உரையாடல் கைலையில். கலந்து உரையாடியது ஈசனும், சாட்சாத் மகாவிஷ்ணுவும்தான். என்ன உரையாடினார்கள்?? தாருகாவனத்து முனிவர்களின் கொட்டத்தை எப்படி அடக்கவேண்டும் என்பது பற்றியேக் கலந்து பேசிக் கொண்டனர். அந்தப் படிக்கு ஈசன் ஒரு அழகான இளம் வாலிபனாக மாறினார். அரையிலே பாவம், அந்தப் பித்தனான பிச்சைக்காரனுக்கு ஆடை இல்லை. நிர்வாணக் கோலம். பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் வந்த கபாலம் கையில் திருவோடாக மாறிக் காட்சி அளிக்கின்றது. பக்கத்தில்?? உமை அம்மை எங்கே?? இந்தப் பிச்சைக்காரக் கோலத்தைக் கண்டு பயந்து ஓடிவிட்டாளா என்ன?? இல்லை, இல்லை எங்கேயும் போகவில்லை, தன் பதியும், சோதரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றாள். தொப்புழ் வரையில் நீண்டிருந்த இடக்கையில் பிச்சைப் பாத்திரமாய்க் கபாலமும், வலக்கரத்தில் புல்லும் ஏந்திக் கொண்டு பிச்சை எடுக்கக் கிளம்புகின்றார், அனைவருக்கும் படியளக்கும் அண்ணல். இடக்காலை ஊன்றிக் கொண்டு, இது என்ன ஆச்சரியம்?? வலக்காலை வளைத்து, வளைத்து அசல் பிச்சைக்காரன் தோற்றான்! அப்படியே பிச்சைக் காரனைப் போல் நடந்து தாருகாவனத்தினுள் நுழைகின்றார் இந்தப் பிச்சைக்காரர். முனிவர்களின் பத்தினிகள் இருக்குமிடம் நோக்கிச் செல்லுகின்றார் பிச்சை எடுக்க.
பர்த்தாக்களுக்கு ஏற்ற பத்தினிமாராகச் செருக்குடன் தான் இருந்தனர் முனிவர்களின் பத்தினியரும். இந்த அழகர் அங்கே போய்ப் பிச்சைக்கு நின்றாரோ இல்லையோ, இவர் யார்? எங்கிருந்து வந்தார்?? பிச்சை ஏன் எடுக்கின்றார் என்பதெல்லாம் மறந்துவிட்டது ரிஷிபத்தினிகளுக்கு. வந்தவர் அழகில் அனைவரும் மயங்கினர். தங்கள் வீட்டு வேலைகளை மறந்தனர். தாம் யார் என்பதையும் மறந்தனர். அனைத்தும் மறந்து அந்தப் பிச்சைக்காரரைச் சென்று அருகில் பார்த்து மயங்கி நின்றனர். இது தான் சமயம் என வந்த பிச்சைக்காரன் அங்கிருந்து நகர முற்பட, ரிஷிபத்தினிகளும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு தம் ஆடைகள் குலைவதையும் நினையாமல் அவர் பின்னே செல்கின்றனர். அதே சமயம் முனிவர்கள் தவம் செய்யும் இடத்தில் அவர்கள் கண் முன்னே தோன்றினாள் அதிரூப சுந்தரியான பெண்ணொருத்தி. காண்போர் கவரும் வண்ணம் அழகுப் பெட்டகமாய் விளங்கிய அவள் தன் இனிமையான குரலினால் அந்த முனிவர்களைக் கவர்ந்திழுத்தாள். மேனியோ மென்மை, குரலோ இனிமை, அழகோ சொல்ல முடியவில்லை. யார் இந்தப் பெண்ணரசி?? எங்கே இருந்து வந்தாள்? ஒன்றும் புரியவில்லை ரிஷிகளுக்கு. தங்கள் தவத்தை மறந்தனர். தங்கள் நிலையை மறந்தனர். தங்கள் செருக்கையும் மறந்தனர். அந்தப் பெண்ணைக் கண்டு மயங்கி நின்றனர்.
திடீரென அந்தப் பெண் அங்கிருந்து செல்ல ஆரம்பிக்க ரிஷிகளும் பின் தொடர, அவர்களுக்கு முன்னால் ரிஷிபத்தினிகள் ஓடுவதையும், ரிஷி பத்தினிகளுக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரன் அதிரூப லாவண்யத்துடன் செல்லுவதையும் கண்டதுமே அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. உடனேயே தங்கள் தவற்றை உணர்ந்த அவர்கள் அந்தப் பிச்சைக்காரனை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆபிசார வேள்வி ஒன்றைத் துவங்குகின்றனர். அந்த வேள்வியில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என்னும் அசுரன் போன்றவர்கள் வர ஒவ்வொருவராய் பிட்சாடனர் மேல் ஏவினார்கள் தாருகாவனத்து ரிஷிகள். பாம்புகளை அணிகலனாய் அணிந்து கொண்டார் எம்பெருமான். விலங்குகளைக் கொன்று அவற்றின் தோலை ஆடையாக அணிந்து கொள்கின்றார். இனி மிச்சம் இருப்பது முயலகன் ஒருவனே. அவனையும் தம் திருவடியின் கீழ் போட்டு மிதிக்கின்றார். அவன் ஆணவம் அழிய, ரிஷிகளின் ஆணவமும் அழிந்து உண்மையை உணர்ந்து வந்தவர் சர்வேசன் என்பதை அறிந்து கொள்ளுகின்றனர்.
இந்தப் பிட்சாடனத் திருக்கோலம் காலம் செல்லச் செல்லக் கொஞ்சம், கொஞ்சம் மாறுபட்ட நிலைகளில் காண முடிகின்றது. வலக்காலை முன்னே எடுத்து வைத்து நடக்கும் கோலத்தில், இடக்கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்துடனும், காட்சி அளிக்கும் இவரின் வலக்கையில் உள்ள புல்லை ஒரு மான் தின்னும் கோலத்திலும் பார்க்கலாம். இடக்கரங்களில் திரிசூலம், உடுக்கை , பாம்பு ஏந்தியும் ஆடையாகப் பாம்பையே அரையில் அணிந்த வண்ணமும் தலையில் ஜடாமுடியுடனும், வலக்காலில் வீரக் கழல்களுடனும் காட்சி அளிக்கின்றார். வேதங்களைப் பாதுகையாக அணிந்த வண்ணமும், பாதச் சிலம்புகள் ஆகமங்களாகவும், பாம்புகள் யோகசாதனையின் குறியீடுகளாகவும் உள்ளன. இந்த பிட்சாடனரின் மற்றொரு கோலம் கஜசம்ஹார மூர்த்தியாகக் காண முடியும்.
பிட்சாடனர் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையிலும், உத்தமர் கோயிலிலும் விசேஷமாகச் சிறப்பு தரிசனம் தருகிறார். திருப்பராய்த் துறையைத் தான் தாருகாவனமாக இருந்த்தாகச் சொல்கின்றனர். அங்கே பிட்சாடனரை உற்சவராக வழிபடுகின்றனர் என்று தெரிய வருகிறது. மேலும் கோயிலின் முன் மண்டபத்து மேல் விதானத்தில் உள்ள ராசிச் சக்கரத்தையும், பிட்சாடனரையும், மூலவர் பராய்த்துறை நாதரையும் ஒரே நேரத்தில் வழிபடுதல் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. கோயிலின் பெயரே தாருகவனேஸ்வர்ர் கோயில் என்றும் சொல்கின்றனர். சம்பந்தர் பதிகத்திலிருந்து இரு பாடல்கள்:
மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை அடுத்து உத்தமர் கோயிலையும் பிச்சாண்டார் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சொல்வது உண்டு.இதுவும் திருச்சிக்கு அருகே உள்ளது. ஆனால் இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளையும் அவரவர் பத்தினிமாரோடு தரிசனம் செய்யலாம் என்று சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட கோயில் என்றும், இங்கே உள்ள மஹாலக்ஷ்மியிடம் வாங்கிய பிட்சைக்குப் பின்னரே பிரம்மனின் கபாலம் ஈசன் கையிலிருந்து அகன்றது என்றும் சொல்கின்றனர். வடநாட்டில் வேறு விதமாய்ச் சொல்லுவார்கள். தாருகாவனத்து ரிஷிகள் வேதங்களையும், அது சம்பந்தமான சாஸ்திர, சம்பிரதாயங்களை மட்டுமே கடைப்பிடித்துக் கடவுளையும், அவர் இருப்பையும் அலட்சியம் செய்ததோடு, தங்கள் யாகங்களாலும், தவங்களாலும் செருக்குடனும் இருந்துவந்தனர். ஆகவே அவர்களுக்குப் புத்தி புகட்டவே ஈசன் பிக்ஷாடனர் கோலத்தில் வந்தார். இதுவே நாம் தெரிந்து கொண்டது. ஆனால் வடநாட்டில் சிலர் பிரம்மனின் தலையைக் கிள்ளியதும், அவர் கபாலமும், பிரம்மஹத்தி தோஷமும் ஈசனைப் பீடிக்கிறது. பிரம்மனும் ஈசன் என்று கூடப் பாராமல் நீ பிக்ஷை எடுத்து உண்டு வாழவேண்டும். எவ்வளவு போட்டாலும் இந்தக் கபாலம் அத்தனை பிக்ஷையையும் சாப்பிட்டு விடும். என்று இந்தக் கபாலம் நிறைகிறதோ அன்றே உங்கள் கையிலிருந்து இது அகன்று போகும்.” என்று சாபம் கொடுத்த்தாயும், அதிலிருந்து பிக்ஷாடனராக பிக்ஷை எடுத்து வந்த ஈசன், காசி மாநகருக்கு வந்து அங்கே அன்னபூரணியாக உணவு சமைத்து அனைவருக்கும் அளித்துத் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் பிக்ஷை வாங்கியதாகவும், அன்னை ஒரு கரண்டி அன்னம் இட்டதுமே கபாலம் நிறைந்ததாயும் கூறுகின்றனர். அதன் பின்னர் பிரம்ம கபாலம் ஈசன் கையை விட்டு நீங்கியதாயும் கூறுகின்றனர். அந்த பிரம்ம கபாலத்தை மஹாவிஷ்ணு பத்ரிநாத்தில் இட்ட்தாயும் கூறுகின்றனர். பத்ரிநாத் செல்லும் அன்பர்கள் தப்த குண்டத்தில் குளித்துவிட்டு பிரம்மகபாலத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
--Geetha Sambasivam 09:28, 23 மார்ச் 2011 (UTC)
|


