வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 10

From மரபு விக்கி

Jump to: navigation, search
Makala2kaalakalar.jpg
அடுத்து வருபவர் நாம் அனைவரும் அறிந்த ஒருவரே. ம்ருத்யுஞ்சயர் என்றும் காலகண்டர், காலகாலர், காலாந்தகர் எனவும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படும் காலசம்ஹார மூர்த்தி. மாயவரத்துக்கு அருகே உள்ள திருக்கடையூரில் இந்த மூர்த்தத் திருமேனி, காலனை அழிக்கும் கோலத்தில் காண முடியும். ஒரு நிமிஷத்துக்கு மட்டுமே திரையைத் திறந்து தீப ஆராதனையைக் காட்டிவிட்டுப் பின்னர் மூடிவிடுவார்கள். மிக உக்கிரமாய்க் கோபத்துடன் இருப்பதால் இம்மாதிரிச் செய்கின்றனர். என்றாலும் இவர் ஒரு பக்தனுக்காக வேண்டியே இவ்விதம் கோபம் கொண்டு காலனைக் காலால் உதைத்தார். இந்தக் கதையும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. கெளசிகரின் புதல்வர் ஆன மிருகண்டு, தன் மனைவியான மருத்துவதியுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் புத்திரப்பேறு இல்லை. புத்திரப் பேறு வேண்டி தவம் இயற்றிய அவருக்கு பிரம்மாவின் அருளால் ஒரு புத்திரன் பிறந்தான். மிக மிக புத்திசாலியும், சிறந்த சிவ பக்தனும் ஆன அந்தப் பையனுக்கு ஆயுள் 16 மட்டுமே என்பது பிரம்மன் விதித்திருந்த ஓர் கணக்கு. இந்த விஷயம் தாய், தந்தையருக்கும் தெரிந்தே இருந்தது. செய்வதறியாமல் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர் தாய், தந்தையர். மார்க்கண்டேயனோ, நிஷ்கவலையாகத் தானுண்டு, தன் சிவ பூஜையுண்டு என்று இருந்து வந்தான். ஆயிற்று. பதினாறு வயதும் பூர்த்தி ஆகும் நாளும் வந்தது. என்றும் போல் அன்றும் மார்க்கண்டேயன் சிவ பூஜையில் வழக்கமான உற்சாகத்துடனேயே ஈடுபட, அவன் முன்னே தோன்றியவர்களோ யமதூதர்கள். மார்க்கண்டேயனை அழைத்துச் செல்லவே அங்கு வந்திருப்பதாய் அவர்கள் தெரிவிக்க, அந்த இளம்பிள்ளையோ, தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைத் தன்னிரு கைகளால் இறுகக் கட்டிக் கொண்டான். எமதூதர்கள் திகைக்க, எமனே நேரில் வந்தான். நிலைமையைப் பார்த்துவிட்டு, மார்க்கண்டேயன் கட்டிக் கொண்டிருக்கும் சிவலிங்கத்தோடு சேர்த்து பாசக்கயிற்றை வீசி அவனை இழுக்க, லிங்கம் அசைந்து கொடுத்தது. மார்க்கண்டேயன் வந்துவிடுவான் என நினைத்தக் காலதேவன் முன் தோன்றினார் காலாந்தகர். காலனைத் தம் காலால் உதைக்க, அவனும் கீழே வீழ்ந்தான். மார்க்கண்டேயனும் சிரஞ்சீவியாக என்றும் பதினாறு என்ற வரமும் பெற்றான். இறைவனும் அந்த லிங்கத்திலேயே மறைந்தார்.


விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே
.


திருக்கடவூர் வீரட்டம் தேவாரம்


சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே
.

திருக்கடவூர் மயானம் தேவாரம்


பின்னர் உலகில் எவரும் மரணம் அடையாமல் பூமி பாரம் தாங்காது பூமா தேவி வருந்த, திருமாலை வேண்டினாள் அவள். திருமாலும், பிரம்மாவும் ஈசனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்கள் வேண்டுகோளில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டு, எமனுக்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அருளினார். இந்த இடம் திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. காலகாலர் என்ற பெயர் ஏன் வந்தது என்றால் காற்றுக்குக் கால் என்ற ஒரு பொருள் வரும். காற்று ஓரிடத்தில் நில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை படைத்தது. காற்று இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரும் இல்லை. அந்தக் காற்றில் உள்ள பிராண சக்தியே ஈசன் ஆவார். அவர் அந்தக் காற்றுக்கே காற்றாகவும், கூற்றாகவும் விளங்குவதால் அவருக்குக் காலகாலன், காலாந்தகர் என்றெல்லாம் பெயர்கள் வந்தன. நம் உடலுக்குள் மூச்சுக் காற்றாக ஓடுவதும் அவனே. நொடிக்கு நொடி இறந்து கொண்டே இருக்கும் நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதும் அவனே. மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தைக் கணக்கிட்டு உயிர்களை மரணம் என்ற பிடிக்குள் அடங்கச் செய்ய ஈசனால் நியமிக்கப் பட்டவன் காலன் என்று நாம் அழைக்கும் யமன். அந்தக் காலனையே காலால் உதைத்தமையாலும் அவர் காலாந்தகர் எனப் பட்டார்.

Imagemarkandan.jpg

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே
.


திருப்பைஞ்ஞீலித் தேவாரம்.


மேற்கண்ட தேவாரப் பாடல்களை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசப் பெருமான்.

--Geetha Sambasivam 09:33, 23 மார்ச் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 19 April 2011, at 09:14. This page has been accessed 1,912 times.