வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 11 முதல் தேர்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 முதல் தேர்


செலஸ்டின் கலியாவூர்


1582--ஆம் ஆண்டு இயேசு சபையினரின் காலேஜியம் இல்லத்திற்கருகே சிறிய ஆலயமொன்று எழுப்பப்பட்டு அது இரக்கத்தின் இராக்கினிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேவ அன்னைக்குத் தென் தமிழகத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட இடம் முதல் கத்தோலிக்க கிறிஸ்தவ இவ்வாலயம், அதேயாண்டும் ஆகஸ்ட் 5--ஆம் நாள் கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகை அவர்களால் அபிஷேஹம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.  இப்புதிய ஆலயம் ஆகஸ்ட் 5--ஆம் தேதி மரி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட
முதல் ஆலயமாகிய உரோமை மேரி மேஜரின் கொலு வீற்றிருக்கும் தஸ்நேவிஸ்  அன்னையின் விழாவன்று அபிஷேஹம் செய்யப்பட்டதால், இந்நாளில் இத்தேவாலயத்தை தரிசிக்கின்ற விசுவாசிகள் அனைவருக்கும் ஜூபிலி நாளின் ஞானப்பலன்களை ஆயர்
அறிவித்திருந்தார். எனவே இப்பேறு பலன்களை பக்தி சிரத்தையுடன் பெற்றுக்கொள்வதற்காக முத்துக்குளித்துறையெங்குமிருந்து மக்கள் அனைவரும் ஆலய அபிஷேஹ விழாவில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் ஞானப்பலன்கள் புதுப்பிக்கப்பட்டு ஆலய அபிஷேஹ ஆண்டுத் திருவிழா பக்தியுடன் கொண்டாடப்பட்டது.  இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5--ஆம் தேதி பரிசுத்தப் பனிமய அன்னையின் திருவிழாவன்று நடைபெற்றதால், காலப்போக்கில் இவ்வாலயம் பனிமய அன்னை ஆலயம்  என்றே வழங்கப்பட்டு இப்பெயரே நிலைத்துவிட்டது.  1600--ஆம் ஆண்டு கோவா இயேசு சபையின் வட்டாரத் தலைவர் அருட்தந்தை நிக்கோலஸ் பிமெந்தா பனிமய அன்னையின் விழாவினைச் சிறப்பித்தார்.  இவ்விழாவில் முத்துக்குளித்துறையெங்கும் பணியாற்றிய அனைத்து இயேசு சபைத் துறவிகளுக்குத் தங்களுடைய வார்த்தைப் பாட்டினைத் திருவிழாவன்று, தங்கள் வட்டாரத் தலைவர், இப்பனிமய அன்னை ஆலயத்தில் முன்னிலையில் புதுப்பித்துக் கொண்டனர். 


அன்றைய திருவிழாவில் நற்கருணை பவனியும் சப்பரப் பவனியும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. தேவமாதா, குழந்தை யேசு, சப்பரங்கள் முன் செல்ல புனிதர்களான பேதுரு, பவுலடியார், திருமுழுக்கு யோவான், செபஸ்தியார், எரோனிமுல் மிக்கேல் அதிதூதர், லவுரேஞ்சியார், முடியப்பர் ஆகியோரின் திருவுருவச் சப்பரப் பவனி நடைபெற்றது.  1658--ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆண்டு தோறும் நடைபெற்ற இத்திருவிழா  போர்த்துக்கீசியரின் வீழ்ச்சிக்குப் பின் தடைபட்டது. தூத்துக்குடியைக் கைப்பற்றிய டச்சுப்படைகள் கத்தோலிக்க விசுவாசத்தை நசுக்குவதிலும் தங்கள் பலத்தைப் பிரயோகப்படுத்தியதால், வழிபாடுகள் தடை செய்யப்பட்டன.  தேவாலயங்கள் கைப்பற்றப்பட்டன. ஆயுதம் மற்றும் வர்த்தகக் கிடங்குகளாக  மாற்றப்பட்டன. பனிமய அன்னையின் ஆலயமும் இவ்வடக்குமுறைக்குத் தப்பவில்லை.


ஐம்பது ஆண்டு கால இடைவெளியில் பனிமயத்தாயும் அவளுடைய புத்திரருமான பரவர்களும் அரசியல் அநாதைகளாகவும் நாடோடிகளாகவும் வாழ வேண்டிய நிர்ப்பந்த சூழல் தூத்துக்குடியில் நிலவியது. தங்கள் உயிரினும் மேலாக மகா பொக்கிஷமாக மக்கள் கருதிய அன்னையின் திருச்சுருபத்தை டச்சுப் படையினர் அழித்துவிட எண்ணியதால் அன்னையின் திருச்சுருபத்தை பரதர் சிற்றரசன் கைப்பற்றினான். பின் பரம்பரை பரம்பரையாக இரகசியமாக அன்னையின் திருச்சுருபத்தை அவர்கள் பாதுகாத்து வந்தனர். டச்சு அடக்குமுறையின் தீவிரம் தணிந்தபோது மீண்டும் பனிமய  அன்னையின் பக்தி இப்பகுதியில் துளிர்த்தது. 1709--ஆம் ஆண்டு பனிமய அன்னையின் திருக்கோவில் இயேசு சபை குருவானவர் சுவாமி விஜிலியுஸ் மான்சியின் பெரு முயற்சியால் பரவர் வசம் ஒப்படைக்கப்பட்டுப் புதிய கற்கோவில் எழுப்பப்பட்டது.


1712--இல் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு பனிமய அன்னையின் புதுமையான திருச்சுருபம் நடுப்பீடத்தில் வணக்கத்திற்காக நிறுவப்பட்டது. இப்புதிய ஆலயத்தின் அபிஷேஹ விழா மீண்டும் ஆகஸ்ட் 5--ஆம் நாளில் நடைபெற, பனிமய அன்னையின் திருவிழா ஞானப்பலன்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சப்பரங்களில் பல உபயோகமற்ற நிலையிலிருந்தன. மீதமுள்ள சப்பரங்கள் திருவிழா பவனியினை அலங்கரித்தன. இதில் மரியன்னையின் திருவுருவச் சப்பரம் முதன்மையிடம் பெற்றிருந்தது. கோவிலைச் சுற்றியுள்ள வெளியில் மட்டுமே இச்சப்பர உலாக்கள் நடைபெற்று வந்தன.  1720--ஆம் ஆண்டு பனிமயத் தாயை ஊரின் வீதிகளில் எழுந்தருளச் செய்யும் நோக்குடன் தேர் ஒன்று செய்யப்பட்டது. இத்தேரிலேறி பனிமயத் தாய் ஆகஸ்ட்
5--ஆம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடியின் குடியிருப்புப் பகுதிகளின் வீதிகளின் வழியாக வலம் வந்து, (தற்போது திருவிழா நடைபெற்று வரும் அதே பாதை) பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தாள்.  1806--ஆம் ஆண்டு பனிமய அன்னையின் மகிமைக்காக பிரம்மாண்டமாக உருவான  தங்கத்தேர் முதல் வீதியுலா நடைபெறும் வரை சித்திரத் தேர் பவனி  தொடர்ச்சியாக 88 ஆண்டுகள் பனிமய அன்னையைத் தாங்கி வீதியுலா வந்தது.



--Geetha Sambasivam 06:30, 11 செப்டெம்பர் 2012 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 11 September 2012, at 06:30. This page has been accessed 1,514 times.