வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

திருப்பள்ளி எழுச்சி அறிமுகம் 3

From மரபு விக்கி

Jump to: navigation, search

திருப்பள்ளி எழுச்சி ஐந்தாம் பாடல்


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்
சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர்= ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை. இந்த மண், விண், நீர், காற்று, நெருப்பு என அனைத்திலும், பஞ்சபூதங்களிலும் அவன் நிறைந்துள்ளான். அதே போல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்திலும் ஆண்டவனே உறைந்துள்ளான். அவனுக்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்பது போல் போவதும் இல்லை வருவதும் இல்லை. அவன் நிரந்தரமானவன். குறைவற்றவன், பரிபூரணமானவன்.


கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்= எப்போதோ யாரோ ஒருவர் உம்மைக் கண்டிருக்கிறார். கண்டு மெய்ஞானத்தை உணர்ந்து அதைப் பாடலில் வடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உம் அடியார்கள் அனைவரும் உன் மேல் கீதங்களைப் பாடியும் ஆடியும் வருகின்றனர். எங்கும் நிறைந்துள்ள உன்னை வெளியில் மட்டும் காணமுடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர உன்னைக் கண்டு அநுபவித்தவர்களின் உணர்வைக் கேட்டு அறியோம். உள்ளும் புறமும் ஒன்றாக ஒரே நினைப்பாக உன்னைத் தியானித்தால் அன்றோ நாங்கள் உன்னை உள்ளே கண்டு உணர முடியும்??


சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து= குளிர்ந்த செழிப்பான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறைக்கே நீ மன்னன் அல்லவோ, எம் தலைவா நீ எங்களால் சிந்தித்து உணர்தலுக்கும் அரியவன் அன்றோ? உம்மைச் சிந்தித்து உணர்வது அன்றோ எம் தொழில்! எங்கள் முன்னே நீ வந்து


ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. = எங்கள் அளப்பரிய துன்பங்களை எல்லாம் அகற்றி எம்மை ஆட்கொண்டு அருள் பாலிப்பாய் எம்பெருமானே. எங்கள் உள்ளமாகிய பள்ளி அறையில் நாங்கள் காணும் வகையில் பள்ளி கொண்டு அருள்வாய்!


திருப்பள்ளி எழுச்சி ஆறாம் பாடல்


பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!


பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்= இங்கே பப்பற வீட்டிருந்து என்பதற்குப் பொருள் பலவிதமாய்க் கொள்ளப் படுகிறது. பரபரப்பும், அவசரமும் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னும் சிலர் குறிப்பிட்ட பரப்பளவைக்குறிக்கும் இடத்தில் இருந்து எல்லையற்ற பெருவெளிக்கு வந்து இறைத்தத்துவத்தை உணர்ந்ததைக் குறிக்கும் என்பர் சிலர். மேலும் சிலர் பல்வேறு பிறவிகள் எடுத்துப் பல்வேறு விதமான இன்பங்களையும், துன்பங்களையும் அநுபவித்து மனம் நொந்து அலுத்துப் போய் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும் என்பார். இப்படியானதொரு துன்ப வாழ்க்கையிலிருந்து மீட்டு எம்மை உம்முடைய எல்லை இல்லாப் பெருங்கருணையால் ஆட்கொள்ளவேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறியதாய்க் கொள்ளலாம். இறைத் தத்துவத்தை அறிந்த உம் அடியார்கள் பந்த, பாசங்களையும் அறுத்தவர்கள் என இங்கே குறிப்பிடுகிறார்.


மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா= எமை ஆட்கொண்ட உமையின் மணவாளனாகிய ஈசனே, அத்தகைய அடியார்கள் மானுடத்து மனிதர்களின் இயல்பை ஒட்டி உம்மைக் காதலனைப் பிரிந்த காதலி போல் நினைந்து நினைந்து உருகிக் கனிந்து கசிந்து வணங்குகின்றனர்.


செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!= அழகிய சிறந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள குளங்கள் நிரம்பிய குளிர்ச்சி பொருந்திய வயல்கள் உடைய திருப்பெருந்துறை உறையும் ஈசனே, சிவகாமி நேசனே, மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு என்று ஏற்பட்டு தொல்லைப்படாமல் எம்மைத் தடுத்து ஆட்கொண்டு இந்தப் பிறவியிலேயே இறவாமை பெற்று எம்மைச் சுத்தமான அருள் ஒளி பெற்று நிலைத்து இருக்க ஆட்கொண்டு அருள்வாய். எம்பெருமானே , என்னுள்ளே குடிகொண்டிருக்கும் உள்ளக் கோயிலில் பள்ளி எழுந்தருள்வாயாக.

ஈஸ்வரன்.jpg

--Geetha Sambasivam 11:33, 5 ஏப்ரல் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 5 April 2011, at 11:33. This page has been accessed 2,245 times.