வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் 8

From மரபு விக்கி

Jump to: navigation, search

இந்த இரட்டைத் திருப்பதியில் அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அதனால் இவை இரட்டைத் திருப்பதி என அழைக்கப் படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 மைல் தொலைவிலே தாமிரபரணியின் வடகரையிலே இவை உள்ளன. முதல் திருப்பதியிலே பெருமாள் திவ்ய நாமம் ஸ்ரீநிவாசன் என்ற தேவர்பிரான் ஆகும். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார். தாயார் ஸ்ரீதேவிதிருமார்பிலும் இருபக்கமும் உபய நாச்சியார்களும் உள்ளனர்.

Villimangalam.jpg

அடுத்த கோயிலில் செந்தாமரைக் கண்ணன், அரவிந்தலோசனன் என்ற திருநாமங்களால் அழைக்கப் படும் பெருமாள். குமுத விமானத்திலே தாயார் கருத்தடங்கண்ணியோடு எழுந்தருளி இருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்த ஊர். இந்தக் கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு சொல்லப் படுகிறது.


திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே நெல் வயல்களும், பூந்தோட்டங்களும் நிறைந்த கோதார நிலையம் என்னும் திருப்பதி ஒன்று இருந்தது. அதுவே தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் பட்டது. ஆத்ரேயகோத்திரத்தைச் சேர்ந்த சுப்ரபர் என்னும் முனிவர், இங்கே ஊரின் அழகையும், பொலிவையும் கண்டு யாகம் செய்யத் தகுந்த இடம் எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். யாகசாலை அமைக்கப் பூமியை உழுது சமன்படுத்தியபோது அங்கே ஒரு வில்லும், தராசும் கிடைக்கப் பெற்றார்.


இது யாருடையவை என எண்ணி எப்படி இங்கே வந்தது என்றும் யோசித்துக் கொண்டே அவற்றை எடுத்தார். தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஓர் ஆண்மகனாகவும் மாறிக் கணவன், மனைவியாகத் தோற்றம் தர, சுப்ரபரும் மற்றவரும் வியந்து, இது என்ன விந்தை என அந்தத் தம்பதிகளைக் கேட்டனர். தம்பதிகளில் கணவன் சொன்னான்:” முன்பிறவியில் வித்யாதரன் என்னும் தேவனாக இருந்த அவன் தன் மனைவியான இந்தப் பெண்ணுடன் மோகம் கொண்டு உடலில் ஆடையில்லாமல் இருந்த கோலத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்த குபேரன் கண்ணில் பட அவனும் இவ்விதம் பொதுஇடத்தில் அநாகரீகமாய் நடந்து கொண்டதற்கு அவர்களை வில்லாகவும், தராசாகவும் மாறும்படி சாபம் கொடுத்துவிட்டான். சாபவிமோசனம் கிடைக்காதா என எண்ணி ஏங்கிய அவர்களுக்கு, சுப்ரபாதர் என்னும் முனிவர் யாகசாலை அமைக்க நிலத்தை உழும்போது உங்களுக்குச் சுயவுருக் கிட்டும் என்று சொன்னதாகவும், இப்போது சுயவுருக்கிட்டியதால் அவரைப் பணிந்து ஏத்துவதாகவும் சொன்னார்கள். முனிவர்களும் அவர்களை அனுப்பிவிட்டு விஷ்ணுவை ஆராதித்துப் பணிந்து தேவர்பிரான் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளச் செய்தனர். வில்லுக்கும், தராசுக்கும் முக்தி கொடுத்த இடமாகையால் அந்தப் பெயரிலேயே இது தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் படவேண்டும் என்றும் பிரார்த்தித்தனர்.


சுப்ரபர் தினமும் அந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள பொய்கைக்குச் சென்று அங்கே தாமரைப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து பெருமானை அணியச் செய்து வந்தார். மாலையின் அழகைக் கண்டு உவந்த பெருமான் எங்கே இருந்து இத்தனை அழகான மலர்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய முனிவரோடு அங்கே வர, பொய்கையின் அழகையும், மலர்களின் வண்ணவிசித்திரங்களையும் கண்டு மனம் மகிழ்ந்து, தான் யாகசாலையில் தேவர்பிரானாகவும், இந்தப்பொய்கைக் கரையில் அரவிந்தலோசனனாகவும் இருக்கப் போவதாய்ச் சொல்கின்றார். தினந்தோறும் முதலில் தேவர்பிரானுக்கு இந்தத் தடாகக் கரையின் பூக்களால் வழிபாடுகள் நடத்திவிட்டு பின்னர் இந்த அரவிந்தலோசனனையும் தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும் என்றும் அருளிச் செய்தார்.


அச்வினி தேவர்கள் வைத்தியத்தில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தேவர்களுக்குக் கிடைப்பதுபோல் யாகங்களிலும் யக்ஞங்களிலும் அவிர்பாகம் கிடைக்கவில்லை. ஆகவே பிரம்மாவிடம் சென்று தங்களுக்கும் அவிர்பாகம் கொடுக்கவேண்டுகின்றனர். பிரமன் அவர்களை தேவர்பிரானையும், அரவிந்தலோசனனையும் வணங்கித் தவம் இயற்றி வரம் வாங்கி வருமாறு கூறுகின்றான். அச்வினி தேவர்கள் அவ்விதமே தொலைவில்லிமங்கலம் பொய்கையில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்த லோசனனையும் வழிபாடுகள் செய்து தவம் இயற்றினார்கள். இறைவனும் அவர்கள் தவத்தை மெச்சி அவர்களுக்கும் அவிர்பாகம் கிடைக்குமாறு தேவர்களுக்குச் சொல்லிவிட்டு இந்தத் தீர்த்தமும் உங்கள் பெயரால் அச்வினி தீர்த்தம் என வழங்கப் படும் என்றும் அருளிச் செய்தார். இந்த அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும் என்றும் சொல்லுகின்றனர். கங்கைக்கரையில் உள்ள ஓர் அந்தணரான சத்தியசீலரின் இரண்டாவது மகன் ஆன விபீதகன் குஷ்டத்தால் பீடிக்கப் பட்டிருக்க, நாரதமுனி அவன் முற்பிறவியில் தன் குருவின் பசுவைத் திருடியதால் குருவின் சாபத்தால் இந்நிலைமை அடைந்திருப்பதாயும் தென்னாட்டிற்கு வந்து அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் ரோகம் நீங்கும் என்று சொல்லுகின்றார். அது போல் விபீதகனும் தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலம் வந்து அச்வினி தீர்த்ததில் நீராடி ரோகம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லுவார்கள். அடுத்து நம்ம டோண்டு சாரின் இஷ்ட தெய்வமும், வலைஉலகப் பெருமக்களின் குலதெய்வமும் ஆன தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன். அப்பா, எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய குழை???


திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.


திரு டோண்டு சாரின் குலதெய்வமும், இஷ்டதெய்வமும், வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவரும் ஆன மகரநெடுங்குழைக்காதர் கோயில் தென் திருப்பேரையில் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. பெருமாள் நல்ல ஆஜாநுபாகுவாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். பெரிய காதுகள், அதற்கேற்ற மீன் வடிவம் கொண்ட மகர நெடுங்குழைகள். அதி அற்புதமாய் உள்ளது. கிழக்கே பார்த்துக்கொண்டு பூமாதேவி அளித்ததாய்ச் சொல்லப் படும் குழைகளை அணிந்து கொண்டு அதன் காரணமாய் ஸ்ரீ எனப் படும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளானதாய்ச் சொல்லுகின்றார்கள். தென் திருப்பேரையில் தான் பகவான் பூமாதேவியிடம் ஆசை கொண்டதாயும் சொல்லுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தின் தண்மையும், பசுமையும் ஆசை கொள்ள வைத்ததோ என்னமோ?? நாங்களும் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ பசுமை அப்படியே இருக்கா இல்லையா எப்படினு தெரியலை!  இங்கே மஹாலக்ஷ்மி பூமாதேவியின் பேரில் பெருமாளுக்குத் தனி ஆசை இருப்பதைக் கண்டு தனக்கு பூமாதேவியின் உருவும், நிறைவும் ஏற்படவேண்டும் என வேண்டினாளாம். அதுவும் துர்வாஸரிடம் கேட்டிருக்கிறாள். உடனே துர்வாஸர் பூமாதேவியைப் பார்க்க தென் திருப்பேரையை அடைந்தார்.

Thirupperai.jpg

பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3
3049


சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4


நம்மாழ்வார் பாசுரம். ஆனால் இந்தக் கோயில் பற்றி ஒரு பாசுரம் தான் எழுதி இருக்கார். கண்டுபிடிக்கணும். :))))))


ஆனால் பகவானின் மடியில் செளக்கியமாய் அமர்ந்திருந்த பூமாதேவி துர்வாஸரைக் கண்டு வணங்கவில்லை. மடியை விட்டு எழுந்து உபசரிக்கவில்லை. அதனால் ஸ்ரீயின் உடலை நீ பெறவேண்டும் என துர்வாசர் சபித்ததாகவும், ஸ்ரீயின் உடல் தனக்கு வேண்டாம் என பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில் அவளை பொருநை நதிக்கரையின் தென்கரையில் பங்குனி மாதப் பெளர்ணமியில் நதியில் நீராடித் தவம் புரியச் சொன்னார். அஷ்டாக்ஷரத்தில் தவம் இருந்ததாயும் சொல்கின்றனர். பூமாதேவி அவ்வாறு தவம் புரியும் வேளையில் மீன்போன்ற வடிவுடைய இரு குண்டலங்கள் அவள் கைகளுக்குக் கிடைத்தன. அவற்றைக் கண்டதும் மீண்டும் பெருமாள் நினைவே அவளுக்கு வர, அவற்றைப் பெருமாளிடம் கொடுக்க, அவரும் அதை ஆசையுடன் வாங்கித் தம் காதுகளில் அணிந்து கொண்டார். அது முதல் பெருமாள் மகரநெடுங்குழைக்காதர் ஆனார். தாயார் பெயர் குழைக்காதவல்லி,/ ஊர் பெயர் ஸ்ரீபேரை என்றும், தென் திருப்பேரை என்றும் வழங்குகிறது. மற்றொரு தாயாரை தென் திருப்பேரை நாச்சியார் என்றும் சொல்லுவார்கள்.


அசுரர்களால் தோற்கடிக்கப் பட்ட வருணன் தனது நாகத்தையும், பாசத்தையும் இழந்து தவிக்க, அவன் மனைவி தேவகுருவிடம் வேண்ட தேவகுரு அவனை தென் திருப்பேரை மகர தீர்த்தத்தில் நீராடி “திருவைந்தெழுத்தால்” பகவானை வழிபட வேண்டியது பெறுவாய் என்று சொல்ல அவ்வண்ணமே வருணன் பங்குனி பூர்ணிமையிலேயே வழிபட்டதாகவும், அப்போது மகிழ்ந்த பெருமான் கொடுத்த நீரானது பாசமாக மாறி அதைப் பெற்று வருணன் மனமகிழ்வோடு அசுரர்களைத் தோற்கடிக்கப் புது வலிமை பெற்றதாகவும் தலபுராணம் சொல்லுகின்றது. மேலும் விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது தாமிரபரணிக் கரைக்கு தென் திருப்பேரைக்கு வந்து மகரநெடுங்குழைக்காதரை வேண்ட பஞ்சம் நீங்கி, மழை பொழிந்ததாகவும் சொல்கின்றனர்.


அடுத்தது திருக்கோளூர் என்னும் ஸ்தலம். நம்மாழ்வாரைக் கண்டெடுத்த மதுரகவியாழ்வார் அவதாரம் பண்ணிய இடம் இது.


--Geetha Sambasivam 09:55, 2 ஏப்ரல் 2011 (UTC)


 

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 14 April 2011, at 08:16. This page has been accessed 1,647 times.