சோழர் காலத்துச் சட்டம், ஒழுங்கு, தண்டனைகள் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு குற்றம் நிகழ்ந்தது. அமெரிக்க அரசாங்கத்து அதிகாரி ஒருவர் தம் பின்னால் தன்னைத் தொடர்ந்த இரண்டு பாகிஸ்தானியரை சந்தேகத்தின் பெயரில் சுட்டுக் கொன்றுவிட்டார். பாகிஸ்தானும் அவரைச் சிறையில் போட்டுவிட்டது. பிறகு நடந்த அரசியல் பேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்குப்  பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பேரம் என்பது அந்தக் கொலைக் குற்றம் செய்தவர், ’கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தக்க நிவாரணமும் உதவியும் செய்தால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவர்’ என்று ஒரு சின்ன சட்ட விலக்கு விதிப்படி அவர் அப்படி உதவி செய்ய ஒப்புக்கொண்டால் விடுவிக்கப்படுவதுதான். இதை அந்த அமெரிக்கரும் ‘மிகத் தாராள மனதோடு’ ஒப்புக்கொண்டு உதவிப்பணமும் கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு சுகமாகத்
திரும்பினார். இது சமீபத்தில் நடந்ததால் அந்த நினைவுக் குறிப்பிலிருந்து தருகிறேன்.


இது அரசியல் சௌகரியத்துக்காக ஏற்பட்ட ஒரு காரியம் என்பதாலும் அதுவும் அமெரிக்காவின் கோபத்திலிருந்து பாகிஸ்தான் மீள எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச்  சட்ட விலக்கு ஏளனத்துக்குரியதாகப் பத்திரிகைகளால் விமரிசிக்கப்பட்டது. ஆனால் சோழர் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சட்ட விலக்கு இருந்தது. சாதாரண மக்களில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் கொலையுண்டவர் குடும்பத்தைக் காப்பாற்றக்  கொலை செய்தவர் எல்லா வகைகளிலும் உதவ வேண்டும். (1970 களில் ‘நீதி’ என்று ஒரு திரைப்படம், சிவாஜி நடித்தது. அந்தப் படக் கதையும் இந்த வகைப் பட்ட சட்ட விலக்கினைக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டதே). சாதாரண மனிதர்கள் என்று வரும்போது இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை சட்டபூர்வமாக நோக்காமல் மனித நலனை மனதில் கொண்டும், பாதிக்கப்பட்டவருக்கு என்ன செய்தால், எப்படி அதை நிறைவேற்றினால், அவர்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்
என்றும் ஊரார், நாட்டார், தர்மாசனம் போன்ற சபைகள் நெறிமுறையில் செயல்பட்டன.


இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள். அதிலும் ஆட்சியாளர்கள் எப்போதெல்லாம் தங்கள் கட்சியாளர் குற்றம் செய்யும்போதெல்லாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுகிறதோ அப்போதெல்லாம் ஒரே வார்த்தையைக்  கிளிப்பிள்ளை போல அடிக்கடி சொல்வர். அந்த வார்த்தை ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்பது. ஆனால் சட்டம் அப்படி முன்வந்து தன்
கடமையைச் செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்கள் குறுக்கிட்டு அவர்கள் குற்றத்தை அப்படியே அமுக்கி விடுவர். இது ஆட்சியாளர் செய்யும் தவறு, இடையூறு, தர்மத்துக்கும் சட்டத்துக்கும் எதிரானது,


ஆனால் சோழர் கால விதிமுறைகள் அப்படி அல்ல. கிராமங்கள் அளவில் ஊர், தர்மாசனம், பெரிய ஊர்களில் நாட்டார் என தீர்ப்பாயங்களை அமைத்து அவர்களுக்குப் பரி பூரண அதிகாரமும் கொடுத்து இருந்ததால் அரசு இடையூறு இல்லாமல் செவ்வனே தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் தன் கடமையைச் செவ்வனே செய்தபோது அரசிடமிருந்து எந்தக் குறிக்கீடும் கிடையாது. மாறாக இன்னமும் சீராக நிறைவேற்றும்படிதான் ஆலோசனை கூறும்.


கொலைக் குற்றங்களுக்குக் கூட மரணதண்டனை என்பது ஏன் தரப்படுவது இல்லை என்பது மிகுந்த ஆராய்ச்சிக்குரிய ஒன்று. எந்த குற்றத்துக்கும் மிகப் பெரிய தண்டனை என்பது குற்றம் செய்தவன் தான் செய்த குற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் வருந்தவேண்டும் என்ற ஒரு நீதியும், அத்துடன் இல்லாமல்
தான் செய்த குற்றத்தைக் கல்லில் எழுதி கோவில் சுவர்களிலோ அல்லது பொது இடங்களிலோ பொறிக்கப்படும்போது குற்றம் செய்தவன் எப்படியெல்லாம் அவமானப்பட்டு மனதுக்குள் புழுங்குவான் என்பது அனுபவிப்பனுக்குத்தான் புரியும். இப்படிக்  கல்லிலே பொறிக்கப்படும் எழுத்துகள் மற்றவர்கள்
பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கும் ஒரு பாடம் என்பதும் இப்படிப்பட்டவை பொது மக்கள் நலமுடன் வாழ உதவும் என்ற பொதுநல நோக்கையும் நாம் கவனிக்கவேண்டும். சமூகம் என்பதே மக்கள் எல்லோரும் கலந்து ஒற்றுமையாக கூடி குலவி இன்பமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட அமைப்புத்தான்.


பொது மக்கள் என்றில்லை. ஒரு சில சமயங்களில் ராஜ வம்சத்தினரோ, குடும்பத்தினரோ (யுத்தத்தினால் அல்ல) ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அங்கு ஒரு கொலை நிகழும்போது கூட இந்தச் சட்டவிதிகள் நியாயமாக  செயல்படுத்தப்படுகின்றன. அரசர்கள் அல்லது மிகப் பெரிய பதவியாள்ர்கள் என வரும்போது, பேரரசனே இப்படிப்பட்ட நீதியையும் தண்டனையும் வழங்குவது உண்டு. இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் சோழ விற்படைத் தலைவன் ஒருவனை நாடாள்வான் எனும் இன்னொரு தலைவன் கொன்று விடுகிறான். சம்பந்தப்பட்ட இருவருமே அரசாங்கத்தில் பெரிய பதவியில் உள்ளவர்கள் எனும்போது அரசனே ஒரு ஆணை பிறப்பிக்கிறான். நடந்ததை ஒரு கல்லிலே பொறித்து, நாடாள்வானுக்கு 96
வெள்ளாடுகள் கோயிலுக்கு நிவந்தம் விட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கிறான் (ARE 227/1904). சரி, 96 ஆடுகள் நிவந்தமென்பது பணக்காரனான அவனுக்கு ஒன்றும் பெரிது இல்லைதான். ஆனால் இங்கே மிகப் பெரிய இழுக்கு என்பது அவன் பெயர் கல்லில் பொறிக்கப்பட்டு ஊருக்கும் எதிர்காலத்துக்கும் இவன் ‘ஒரு
கொலையாளி’ என்று தெரிவிப்பதுதான். இந்த அவமானம் ஒன்றே பெரிய தண்டனையன்றோ!


இதைப்போல இன்னொரு கொலை, அதுவும் எதிரிலிச் சோழ சம்புவரையரின் மகனைக் கொன்ற கதை. எதிரிலிச் சோழ சம்புவரையர் சோழ நடு நாட்டின் தலைவர். ராஜாதிராஜ சோழனுக்கும் மூன்றாம் குலோத்துங்கனுக்கும் வலது கையாகத்  துணை நின்றவர். அவரது நாட்டில் ஏற்பட்ட ஒரு சண்டையில் அவரது மகன் கொல்லப்பட்டார். மருமகள் ‘சதி’ யில் ஏறி உயிர்த் தியாகம் செய்தார். மகனே கொல்லப்பட்டாலும், தந்தையும், நாட்டாரும் சேர்ந்து கொலைசெய்தவனுக்கு கொடுத்த தண்டனை அவன் ஆயுட்காலம் முழுவதும் அங்குள்ள கோயிலுக்குத்  தினமும் விளக்கு ஏற்றிக்கொண்டே இருக்கவேண்டும் (அவன் செலவில்) என்பதையும் கல்லில் பொறித்து விட்டனர் (ARE 162/1932).


சில சமயம் எதிர்பாராதவிதமாக கொலைகள் நடந்துவிட, அவைகளுக்கும் கல்வெட்டு வெட்டி கோயிலில் நிவந்தங்கள் விட ஆணை செய்வார்கள். ராஜேந்திரசோழ நிலகங்கராயன் எனும் தலைவன் கோபத்தால் ஒரு வீரனை வெட்டிச் சாய்த்துவிட்டான். அவனுக்கு அரசனிடமிருந்தே ஆணை வந்தது அவன் பாவத்தைக் கழுவ அங்குள்ள (தற்போதைய மரக்காணம்) பிரமீஸ்வரர் கோயிலுக்கு 128 பசு மாடுகள் நிவந்தமாக வழங்கவேண்டும் என்று (ARE 159/1918) அந்த ஆணையும் கல்லில் பொறிக்கப்பட்டுவிட்டது..


ராமாயணத்தில் தசரதன், விலங்கு என நினைத்து, கண்ணிழந்த தந்தைக்கு தண்ணீர் மொண்டு கொண்டிருந்த ஒரு ரிஷிகுமாரனைக் கொன்றதும் அதற்கு தசரதன் சாபம் பெற்றதும், அந்த சாபத்தால் ராமனைப் பிரிந்தவுடன் இவன் உயிர் போகும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதே மரக்காணத்தில் கிடைத்த கல்வெட்டு இதைப் போன்ற நிகழ்வினை சுட்டுகிறது. அரும்பொந்தர் எனும் ஊரினன் வேட்டையாடும்போது இதைப் போலவே விலங்கு என நினைத்து ஒரு மனிதனைக்
கொன்றுவிடுகிறான். ஊரார் இதைத்  தீர விசாரித்து நடந்தது ‘எதிர்பாராத ஒன்றுதான்’ இருந்தாலும் தவறு தவறுதான் என்று பிரமீஸ்வரர் கோயிலுக்கு 12 ஆடுகளை தண்டனை நிவந்தமாக விதிக்கின்றனர் (ARE 33/1918). கல்வெட்டிலும் அவன் செயல் ஏற்றப்படுகின்றது. திருவிளையாடல் புராணத்திலும் இது போன்ற
செயல், மரத்தின் கீழ் தங்கியிருந்த பிராம்மணன் மனைவி மீது, பறவை மீது ஏவப்பட்ட அம்பு தவறிப் போய், அவள் மீது பட, அவள் இறக்கிறாள், பிராம்மணன் வேடனைக் குற்றவாளியாக பாண்டிய அரசன் முன் நிற்க வைக்க, இறைவன் ஒரு திருவிளையாடல் மூலம், ’விதி’ யின் செயலால் அவன் மனைவி இறக்கிறாள், என்றும் வேடன் குற்றவாளி இல்லை என்பதைத் தெரிவிப்பதாகக்  கதை செல்கிறது.
ஆனால் இந்தக் கல்வெட்டு இந்த இறைவன் தீர்ப்பை மதிப்பது போல இருந்தாலும் (அதாவது எதிர்பாராத செயல் என ஏற்றுக் கொண்டாலும்) செய்து விட்ட தவறுக்கு தண்டனை உண்டு என தீர்ப்பு சொல்கிறது.


தற்கொலைகள் கூடக்  காரணம் கேட்கப்படுகின்றது. தவறுக்குக் காரணமானவர்களை விசாரித்து தண்டனை (கோயிலுக்கு விளக்கு அல்லது ஆடு மாடு நிவந்தம்தான்) அளிக்கப்படுகிறது. கல்வெட்டிலும் குற்றவாளி பெயர் உண்டு. ராஜராஜன் ஆட்சியில் முன்னூரில் நடந்த ஒரு கொலைக்கு, கொலையாளிக்குப் பதில் அவனது மாமா தண்டனையை ஏற்றுக் கொள்வதாக ஒரு கல்வெட்டு அவரால் கோயிலுக்கு
நிவந்தம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு கல்வெட்டு (67/1919). மருமகன் செய்த தவறுக்கு மாமன் தண்டனை அனுபவிப்பதாக இப்போது எந்த மாமனும் முன்வருவாரோ..கொலை நிகழ்வு நடந்தால் அனைத்து மக்கள் மத்தியிலே ஒரு குற்ற உணர்வை உருவாக்குவது மிக மிக அவசியம். ஏனெனில் மனிதரிடையே அடிக்கடி எழும் கோபதாபங்கள். விரோதங்கள், அதர்மச் செயல்கள் இவற்றை மக்கள் தங்கள் கட்டுக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்ற சமுதாய உணர்வின் அவசியத்துக்காக நியாய தர்மத்தை சீராகத்தான் செய்து வந்தது சோழ அரசாங்கத்துக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தர்மாசனங்கள்.


--Geetha Sambasivam 10:31, 12 ஆகஸ்ட் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 12 ஆகஸ்ட் 2011, 10:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,763 முறைகள் அணுகப்பட்டது.