வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 5

From மரபு விக்கி

Jump to: navigation, search

எட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்கவேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் தெரியும்படியாக அலங்கரித்துக் கையில் ஏடு மட்டுமே கொடுத்து ஞான முத்திரை காட்டிய வண்ணம் அலங்கரிக்கலாம். இன்று புளியோதரை நிவேதனம் செய்து மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

Saraswathi.jpeg

பெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் சிலர்  கேட்கலாம்  அல்லவா?? தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம்.


இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் ‘ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ,


பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே!


என்கிறார். இனி ஸ்ரீலலிதையின் மஹத்துவம்.


“வானுலகத்துத் தேவாள் தாபத்தைத் தீர்த்திட
வந்து அலிதை அவதாரமாய்
பட்டுக்குடை கவியச் சித்திரப் பொன்ரதம்
பளிச் பளிச்சென்று ஒளி திகழ
ஸ்ரீசக்ரராஜ ரதத்தினில் தேவியும்
சிங்கார ரூபமாய்க்காந்தி மின்ன
ஆலவட்டம் வெண்சாமரம்போடச்சகிகளும்
அக்னிகுண்டத்தின் நடுவில் வந்தாள்.”சோபனம் சோபனம்


இதையே ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், “ சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவ கார்ய-ஸமுத்யதா!!” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம்?? சம்பக மொட்டுப் போன்ற மூக்கையும், பவளம் போன்ற சிவந்த உதடுகளும், குருக்கத்திப் போன்ற பற்களும் கருநீலம் போன்ற விழிகள், தாழம்பூவின் மடல் போன்ற காதுகள், வில்லைப் போன்ற புருவங்கள், கண்ணாடி போல் பளபளக்கும் கன்னங்கள் என அம்பிகையைப் பார்க்கும்போதே தெய்வீகமான அழகு புலப்பட்டு அனைவர் மனதிலும் சாந்தி ஏற்பட்டதாம்.


“அர்த்தசந்திராகார நெற்றியில் சிந்தூரம்
அதி சிவப்பாம் மூன்றாங்கண்ணதுபோல்
அர்த்தசந்திரக்கலையும் சுட்டி ராக்கோடியும்
அழகு நீளமான கேசத்தின் மேல்
சிந்தாமணி ரத்தினத்தாலே கிரீடம்
சிரஸிலே தரித்துக்கொண்டிருக்காளம்மன்
சந்தனம் கஸ்தூரி புனுகு பூமாலையும்
தரித்து மாதா வந்தாள் –சோபனம் சோபனம்


தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்துப் போற்றி வணங்க அவர்களின் அங்க ஹீனங்களைக் கண்டு வருந்திய அம்பிகை தன் கண்களின் பார்வையின் சக்தியினால் அவற்றைப் போக்குகிறாள்.


மண்டலபால அரக்கன்போலம்மன் வர்ணமும்
வளமுள்ள சந்திரகாந்தி சீதளமும்
கண்டவுடன் தேவியைக் கைகூப்பித் தேவர்கள்
கனகத்தடிபோல் விழுந்து பணிந்தார்கள்
தேவர்களுடைய தேஹரணத்தைக் கண்டு
ஸ்ரீலலிதை மெத்த இரக்கத்துடன்
அவ்வளவு பேரையும் அம்ருதக் கண்னால் பார்த்து
அங்கக்குறைகள் தீர்த்தாள்- சோபனம் சோபனம்

அம்பிகை தேவர்களின் குறையைக் கேட்டுவிட்டு அவர்களைத் தேற்றுகிறாள்.

“ஸ்துதியாலே மெத்தமனங்குளிர்ந்தீஸ்வரி
சொல்லுவாள் திரும்பவும் கீர்வாணர்க்கு
இன்றுமுதல் பயத்தைத் தூரவிட்டு விடுங்கள்
இந்தப் பண்டாஸுரன் நமக்குப் பஞ்சு
அரை நிமிஷத்தில் பண்டாஸுரப் புழுவை
அக்கினி எரித்தாற்போல் வதைத்திடுவோம்
ஒருவாக்கிற்கு மறுசொல்லில்லை நமக்கு
உங்கட்கே மங்களம்-சோபனம் சோபனம்


அடுத்து  ஸ்ரீலலிதைக்கும், ஸ்ரீகாமேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம்.

Rajeswari.jpeg

நவராத்திரி ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்களால் கோலம் போட்டு அலங்கரித்து, அம்பிகையை மஹாசரஸ்வதியாக, ஆதிகாரணியாக ஆவாஹனம் செய்யவேண்டும் . சிறு பெண் குழந்தையை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடவேண்டும். கடைசிநாளான விஜயதசமி அன்று அம்பிகையும், ஈசனும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியம். அன்றையதினத்து விஜயா முஹூர்த்தத்தில் தான் அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள்.


இதைச் சென்ற வருடமே பார்த்தோம். தேவர்களின் அனைத்து சக்தியும் அம்பிகையிடம் சென்றதால் அவர்கள் சக்தியில்லாமல், இயக்கங்கள் இல்லாமல் பொம்மையைப் போல் இருந்ததாலேயே பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது என்பதும் ஆன்றோர் கருத்து. பொதுவாகப் பருப்புப் பாயசம், அதிரசம் அல்லது அப்பம், உளுந்து வடை, சிய்யம், கொண்டைக்கடலைச் சுண்டல் போன்றவையே நிவேதனமாய்ச் செய்யப் படும். என்றாலும் நவராத்திரி ஒன்பது நாளும் பெண்குழந்தையை வைத்து வழிபட்டவர்கள் வெண்பொங்கல் செய்து கறிவடாம் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைக்குப் பிடித்த ஆடைவகைகளையும் கொடுக்கலாம்.


பெரும்பாலான சிவன் கோயில்களில் மஹிஷாசுர வதமும், சில கோயில்களில் வதம் முடிந்து அம்பாள் சிவபூஜை செய்யும் கோலமும் அலங்கரிக்கப் படும். சிவனும், சக்தியும் ஸமமாகவே இருக்கின்றார்கள். அங்கே ஆணாதிக்கம் என்ற பேச்சோ, பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது. சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயர். அதே போல் சிவ-சிவா என்றாலும் ஈசனையும், சக்தியையும் குறிக்கும். பைரவர், பைரவி என்பதும் அவர்களின் சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படிப் பெயர்களின் மூலம் காட்டும் ஸமம் நாம ஸாம்யம் எனப்படுகிறது. அவர்களின் ரூபலாவண்யத்தால் சிவந்த நிறம், இருவருக்கும் மூன்று கண்கள், தலையில் பிறை அலங்கரிப்பது போன்றவை ரூப ஸாம்யம் எனப்படும். ஆதியும் அந்தமும் இல்லா இந்தத் தம்பதிகளை வழிபட்டு அம்பாளைச் சிறப்பாக ஸ்ரீவித்யா வழிபாட்டின் மூலம் வழிபடுகிறவர்களின் தாம்பத்தியத்தில் பரஸ்பரம் சிநேகபாவம் உண்டாகும். மேலும் ஆண்களுக்குக் கர்மாக்களைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல பெண்களுக்குக் குடும்ப விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை இரண்டும் சமமாக நடந்தாலே அந்தக் குடும்பம் “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்” என்னும்படிக்குச் சிறப்பாக இருக்கும். சிவ தத்துவம் சக்தியில் அடங்கியது. சக்தி சிவத்தோடு சேர்ந்தது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதையே அபிராமி பட்டர்,


“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளே இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!’


என்கிறார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுதலால் “அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்கின்றார் பட்டர். இதே கருத்தைத் திருவாசத்தில் மணி வாசகரின் பொற்சுண்ணம் இடித்தலிலும் சிதம்பரச் செய்யுட்கோவையிலும், மீனாக்ஷி அம்மன் அம்மானையும் காணக்கிடைக்கிறது என்பது ஆன்றோர் கூற்று. மனைவியைத் தாய் என்றும், சக்திதான் சிவத்தை யீன்றது என்றும் கூறுவார்கள். இதனுடைய உள்ளார்ந்த கருத்து நமக்கு இந்தக் குறிப்பிட்ட யோகப் பயிற்சியை குரு மூலம் தீக்ஷை பெற்று மேற்கொள்ளும்போதே புரியவரும்.


அம்பிகையானவள் நம்முடைய ஆக்ஞா சக்ரத்தில் மனமாகவும், விசுத்தி சக்கரத்தில் ஆகாயமாகவும், அநாஹத சக்ரத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும், மணி பூரகத்தில் ஜல தத்துவமாகவும், மூலாதாரத்தில் ப்ருத்வி என்னும் பூமி தத்துவமாகவும் விளங்குகிறாள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சமே அம்பிகையாகவே பரிணமிப்பதாய் சாக்தர்கள் சொல்வார்கள். என்றாலும் அவள் தன்னைப் பரமசிவனுடைய பத்னி என்னும் பாவனையால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு சிவசக்தி ஐக்கிய வடிவான சச்சிதானந்தத்தை நமக்கும் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.”


என்கின்றார். ஐந்து பூதங்களையும் அவற்றால் விளையும் ஐந்து தன்மாத்திரைகள் ஆன கந்தம், சுவை, ஒளி, பரிசம், சத்தம் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று இசைந்து செல்லும்படியாக அவற்றினிடையே வியாபித்து நிற்பவள் சிவகாம சுந்தரியான அந்த சாக்ஷாத் அம்பிகையே ஆவாள். அவள் திருவடியைத் தொழுவோர்க்குக் கிட்டாத செல்வம் ஏதும் இல்லை என்பதே இதன் பொருள்.

Srikamesa.jpeg

இனி ஸ்ரீலலிதையின் திருக்கல்யாணம் காண்போம்.


அம்மன் கிருபையாலே விச்வகர்மாவும்
அழகான புரங்களும் சபைகளுடன்
சிந்தாமணி ரத்னம் பளபளவென்று மின்ன
சிம்ஹாஸனம் உண்டு பண்ணி வைத்தான்
பட்டண அமைப்பையும் அம்மன் தன் அழகையும்
பார்த்துப் பிரம்ம தேவர் யோசிக்கின்றார்
நாட்டுக்குப் பதியான அம்மனுக்கிப்போ
நாயகர் வேண்டுமே –சோபனம் சோபனம்.

இப்படிப் பிரம்ம மனதிலெண்ணியதை
ஈசர்அறிந்து நல்ல ஒளியுடனே
முப்பது கோடி மன்மதாகார ரூபமாய்
வேஷந்தரித்ததி ஸுந்தரமாய்
மகுட குண்டலத்துடன் அழகு பீதாம்பரமும்
மார்பில் சந்தனம் முத்துமாலையுடன்

மோஹன வேஷந் தரித்திருந்தபடி தேவி
முன்னே நின்றாரீசன் – சோபனம் சோபனம்

நின்ற நிலையில் அதிஸுந்தரமான
லலிதாதேவிக்கு இசைந்த அழகும்
என்றும் பதினாறு வயதுந் தரித்துக்கொண்டு
இருக்கின்ற ஈச்வரரைக் கண்டு பிரம்மா
காமேச்வரரென்று பேருமிட்டவருக்கும்
கண்ணாட்டி லலிதேச்வரி தேவிக்கும்
ஓமென்று இவர்கள் இரண்டு பேருக்கும் இப்போ
விவாஹஞ் செய்யலாமென்றார் – சோபனம் சோபனம்

சோடித்துக் கலியாணத்துக்கெல்லாம் பிரம்மாவும்
கோவிந்தருடைய சம்மதத்தாலே
ஒடுக்க வணக்கமாய் அம்மனைப் பார்த்து
உம்மைக் கணவருடன் பார்ப்போமென்றார்
மாதாவும் தன்னுடைய கழுத்திலிருந்ததொரு
மாலையைக் கழற்றி அம்பலத்தில் போட்டாள்
நாதர் காமேச்வரர் கழுத்திலந்த மாலை
ராஜியாய் சேர்ந்தது –சோபனம் சோபனம்


அம்பாளுக்குத் தக்க மணாளன் காமேஸ்வரரே என நிச்சயித்துக் கல்யாணம் நடக்கிறது. அம்பாளும் ஈசனும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். வாத்தியங்கள் முழங்குகின்றன. தேவலோக மாதர்கள் நர்த்தனம் செய்கின்றனர்.


ஈசருந் தேவியும் மாலையிட்டார்கள்
இருவரும் இருந்து கன்னூஞ்சல் ஆட
வாஸுதேவராலே உமையவளைத் தாரை
வார்க்கச் சொன்னார் பிரம்மா- சோபனம் சோபனம்

பத்மாஸனர் சொல்லால் நல்ல முஹூர்த்தத்தில்
பரிமளிக்கும் தேவஸபை நடுவே
பத்தினியுடன் கூட விஷ்ணு காமேசருக்குப்
பக்தியாய் மதுவர்க்கந்தான் கொடுத்தார்
காமேஸ்வரருக்கு லலிதேச்வரியைக்
கன்னிகாதானம் செய்தார் மஹாவிஷ்ணுவும்
காமேச்வரரும் திருமங்கல்ய தாரணம்
கட்டினார் லலிதைக்குச் –சோபனம் சோபனம்

நெய்யால் ஹோமஞ்செய்து பாணிக்கிரஹணஞ் செய்து
ஈசன் அம்மனை அம்மி ஏற்றினார்
மெய்யாக அக்னியை மூன்று தரஞ்சுற்றி
முக்கண்ணர் பொரியினால் ஹோமஞ்செய்தார்
காமேச்வரரும் லலிதேச்வரியைத் தான்
கலியாணஞ் செய்து கொண்டார் ஸுகமாய்
பூமிமுதல் மூன்று லோகத்தவர்களும்
புகழ்ந்தார்கள் அகஸ்தியரே-சோபனம் சோபனம்


நாளை பண்டாசுர வதம்.


--Geetha Sambasivam 10:47, 3 மார்ச் 2011 (UTC)

Contributors

Geetha Sambasivam

This page was last modified on 3 March 2011, at 10:51. This page has been accessed 2,034 times.