சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம், மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி குமாரனின் சக்தி. குமாரன் என்றால் சுப்ரமண்ய ஸ்வாமி ஒருவரே. ஷண்முகனின் சக்தியான இவளைக் “குமார கண நாதாம்பா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் வல்லமை படைத்தவள். “துள்ளி வருகுது வேல், பகையே சுற்றி நில்லாதே போ!” என்னும்படிக்குப் பகையை ஓட ஓட விரட்டி அடிப்பாள் இவள். ஆறுமுக சக்தியான இவள் ஷட்கோணத்தில் உள்ள ஆறு ஆதாரங்களின் மூலமும் சஹஸ்ராரத்தில் இருக்கும் சச்சிதானந்தத்தை அடைய உதவுவாள்.

Srilalitha.jpeg

நம் சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களையும் மணி பீடம் என்று சொல்வார்கள். இவற்றை மூன்றாய்ப் பிரித்து வயிறும், வயிற்றுக்குக் கீழே உள்ள பாகமும் அக்கினிக் கண்டமாகவும், வயிற்றுக்கு மேலே மார்பு வரை உள்ள பாகம் சூரிய கண்டமாகவும், அதற்கு மேலே உள்ள பாகம் ஸோம கண்டமாகவும் சொல்லப் படும். அக்னிக்கண்டத்தில் உள்ள பிரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடமாகவும், சூரிய கண்டத்தின் விஷ்ணுக்ரந்தி விஷ்ணுவின் இருப்பிடமாகவும், ஸோமகண்டத்தின் ருத்ரக்ரந்தி ருத்ரரின் இருப்பிடமாகவும் கூறப்படும். நம் உடலின் இயக்கங்களோடு சேர்ந்து கூர்ந்து கவனித்தால் இவற்றின் உள்ளார்ந்த தத்துவங்கள் நன்கு புரியவரும். இங்கே இதற்கு மேல் விளக்குவது சரியில்லை. அம்பிகையை உபாசிப்பவர்கள் இவற்றை ஒவ்வொன்றாய்க் கடப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் அந்த அந்த முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டு அம்பிகை தோன்றி மேலே மேலே அதி உந்நதத்திற்கு கூட்டிச் செல்வாள். அமிர்த தாரை வர்ஷிக்கும்.


இதையே லலிதா சஹஸ்ரநாமம்,

மூலாதாரைக –நிலயா-ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ


என்று கூறுகிறது. அபிராமி பட்டரோ,


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”


என்கின்றார்.


இதன் யோக தந்திர முறையிலான விளக்கம் என்னவெனில் திரிபுரை என்பதற்குப் பல பொருட்கள் சொல்லலாம். எனினும் இங்கே நம் உடலின் மூன்று நாடிகள், மனம், புத்தி, சித்தம் மூன்று இடங்களிலும் உறைபவள், முத்தேவர்களாலும் தன் தொழிலை நடத்துபவள், மும்மறைகளுக்கும் அதிபதியானவள், மூன்று வகை அக்னிக்களையும் ஒழுங்கு செய்பவள், மூன்று வகை சக்திகளைத் தன்னிடத்தே கொண்டவள், மூன்று ஸ்வரங்களைக் கொண்டவள், மூவுலகையும் தன்னகத்தே இருத்தியவள், என எல்லாவற்றுக்கும் அதிபதியானதோடு அல்லாமல் மூன்று பிரிவை உடைய ஆறு சக்கரங்களுக்கும் தலைவியாகவும் இருப்பவள். இவளின் அருளாலேயே நஞ்சை அமுதாக்கி நம்மை சாயுஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறாள். இனி சும்ப, நிசும்பர்களின் வதத்தைப் பார்ப்போமா?

Hindu-Goddess-Devi-Kali-Maa-Photo-0018.jpg

சண்ட,முண்டர்களின் வதத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட சும்பனும், நிசும்பனும் ரக்தபீஜனைப் பலவகைப் படைகளோடும் அம்பிகையோடு யுத்தம் செய்ய அனுப்பி வைத்தான். காளி மிக உக்கிரமாய்ப் போரிடுகிறாள். சிங்க நாதத்தையும் வில்லின் நாண் ஒலியையும் மீறிக்கேட்ட காளியின் குரலோசை கேட்டுக் கோபம் கொண்ட அசுரப் படைகள் சண்டிகையையும், காளியையும் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்ல முயன்றன. அப்போது தேவாதி தேவர்கள் அம்பிகையின் சேனைக்குத் தலைவர்கள் தேவை என எண்ணிக் கொண்டு, அம்பிகைக்கு ஏற்றாற்போல் பெண்களையே அவள் சேனைக்குப் படைத்தலைவர்களாய் அனுப்ப யோசித்தனர். அனைத்துத் தேவர்களும் தங்கள் வலிமையையும், சக்தியையும் ஒன்று கூட்டி தங்கள் வடிவங்களிலேயே ஒரு தேவியாக ஆக்கினார்கள். ஹம்ஸ வாகனத்தில் அக்ஷமாலையும் கமண்டுவும் ஏந்திக்கொண்டு ப்ரஹ்ம சக்தி ப்ராஹ்மணி என்ற பெயருடனும், ரிஷப வாகனத்தில் திரிசூலம் ஏந்திக்கொண்டு , நாகாபரணங்களைச் சூடிக்கொண்டு சந்திரகலையோடு மஹேஸ்வரரின் சக்தி மாஹேஸ்வரி என்ற பெயருடனும், அசுரனான சூரனைக் கொல்வதற்கென்றே பிறந்த குமாரனின் சக்தி கெளமாரி என்ற பெயருடன் மயில் வாகனத்தில் குகவடிவோடு, அம்பிகை குகனுக்கு அளித்த சக்தியாயுதத்தை ஏந்தியவண்ணமும், சங்கு, சக்ர, கதாதாரியாய், கதை, சார்ங்கம், வாள் ஆகிய ஆயுதங்களோடு கருட வாகனத்தில் வைஷ்ணவியும், ஸ்ரீஹரியின் யக்ஞ வராஹ வடிவத்தின் சக்தியான வாராஹியும், சங்கு, சக்ரங்களை ஏந்திக்கொண்டும், நரசிம்மத்தின் பெண் வடிவான நாரசிம்மி தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டும், கர்ஜனை செய்து கொண்டும் நாரசிம்மியாகவும், ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு தேவருலகை ஆளும் இந்திரனின் சக்தியான ஐந்த்ரீ இந்திரனைப் போன்றே வஜ்ராயுதம் ஏந்தி யானை வாகனத்திலும் தேவியின் படைத் தலைவர்களாக வந்து சேர்ந்து கொண்டனர். இவர்களே முறையே சப்த கன்னியர் என்றும், சப்த மாதாக்கள் எனவும் அழைக்கப் படுவார்கள். பின்னர் சண்டிகா தேவியானவள் சிவனை அசுரர்களிடம் தூது அனுப்பினாள். சிவனையே தூது செல்ல ஏவியதால் அவள் சிவதூதீ என்ற பெயராலும் அழைக்கப் பட்டாள். சிவனின் தூதுக்கும் அசையாத அசுரர்கள் கோபம் கொண்டு தேவியின் இருப்பிடத்தை நோக்கிக் கோபத்துடன் சென்றனர்.


தேவியானவள் அசுரர்கள் எய்த அம்புகளையும், சூலங்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் தன் வில்லினின்று எய்யப்பட்ட அம்புகளால் தடுத்து நிறுத்தக் காலியானவள் தன் கட்வாங்கம் என்னும் ஆயுதத்தால் அசுரக் கூட்டத்தை நசுக்கினாள். பிரம்மாணியோ தன் கமண்டலுவின் நீராலேயே சத்துருக்களை பலமற்றவர்களாக்கினாள். மாஹேஸ்வரி, திரிசூலத்தாலும், வைஷ்ணவி, தன் சக்கரத்தாலும், கெளமாரி ஈட்டியாலும், ஐந்திரி வஜ்ராயுதத்தாலும் அசுரர்படையைத் தாக்கினர். வாராஹி தன் கூரிய மூக்காலும், நாரசிம்ஹி தன் கூரிய நகங்களாலும் அசுரப் படைகளை ஒழித்தார்கள். அப்போது ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப்போல் ஓர் அசுரன் உதிக்க, சப்த மாதர்களும் சூழ்ந்து கொண்டு அவனைத் தங்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். சண்டிகையானவள் சாமுண்டியான காலியைப் பார்த்து ரக்தபீஜனின் ரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ளச் சொன்னாள். காலியும் அவ்வாறே அவனின் கடைசிச் சொட்டு ரத்தம் கீழே விழும்வரைக்கும் அவனைக் களைப்படையச் செய்து ரக்தபீஜனின் ரத்தத்தைத் தன் வாயில் ஏந்தினாள். ரக்தபீஜன் ரத்தம் இல்லாமல் கீழே விழ, சும்பனும், நிசும்பனும் கோபம் கொண்டு அம்பிகையைத் தாக்கினார்கள்.


நிசும்பன் தன் கூரிய வாளால் தேவியின் வாகனமான சிங்கத்தின் தலையில் அடிக்க அந்த வாள் தேவியின் கூரிய பாணத்தால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறே நிசும்பன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பயனற்றுப் போக நிசும்பன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான்.


சங்கநாதமும், மணியை ஒலித்தும் ஓசை எழுப்பிய தேவி, நிசும்பனை மூர்ச்சை அடைய வைத்ததைக் கண்டு . கோபம் கொண்ட சும்பன் தேவியோடு போரிட, விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு எட்டுக் கைகளோடு பாய்ந்தான். சும்பனின் ஆயுதங்களும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பலனற்றுப் போக சும்பனையும் தன் சூலத்தால் அடித்து மூர்ச்சை அடைய வைத்தாள் தேவி. இதற்குள் எழுந்த நிசும்பன் மீண்டும் போருக்கு வர தன் சூலத்தால் நிசும்பனின் இதயத்தைப் பிளந்து அவனைக் கொன்றாள் தேவி. சகோதரன் கொல்லப்பட்டது கண்ட சும்பன் தேவியைப் பார்த்துக் கேலியாக மற்றவர்கள் பலத்தினால் ஜெயித்துவிட்டுக் கர்வம் கொள்ளாதே என்றான். அப்போது தேவி அவனைப் பார்த்து, “மூடா, இங்கு இருப்பவள் நான் ஒருத்தியே. இரண்டாவதாக எவரும் இல்லையடா! இவர்களெல்லாம் என்னிலிருந்து தோன்றிய என் அம்சங்களே அன்றி என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல! இதோ பார்!” என்றாள். சப்த கன்னியரும், காளியும் மறைந்து சும்பன் கண்ணெதிரே தேவி ஒருத்தியின் உடலில் புகுவதைக் கண்டான். “என்னால் அளிக்கப்பட்ட என் பல்வேறு சக்திகளும் இப்போது என்னிலேயே கலந்துவிட்டன. இப்போது போரில் உறுதியாக இருந்து போர் செய்வாய்!” என்றாள் தேவி.


அசுர ராஜன் சும்பன் பல ஆயுதங்களால் தேவியைத் தாக்கினான். மிக உக்கிரமான அஸ்திரங்களை எய்தான். அனைத்தும் தேவி தன் ஹூங்காரம், உச்சாரணம் போன்றவற்றாலேயே அழித்தாள். அவனுடைய குதிரையையும் கொன்று ரத சாரதியுமின்றி வில்லையும் ஒடித்தாள் தேவி. சும்பன் முத்கர ஆயுதம் என்னும் ஆயுதத்தால் தேவியைத் தாக்கப் போக, தேவி அதைப் பிளந்தாள், அசுரனின் இருதயத்தின் தன் முஷ்டியால் குத்தினாள். அவன் அப்படியே தேவியைத் தூக்கிக்கொண்டு ஆகாய மார்க்கமாய்ச் செல்ல, தேவியும் அங்கே இருந்த வண்ணமே அவனோடு போர் புரிந்தாள். அவனுடைய அட்டஹாசம் அதிகமாகக் கண்ட தேவி இனி தாங்காது எனக் கருதித் தன் சூலத்தால் சும்பன் மார்பையும் பிளந்து குத்தி அவனைப் பூமியில் வீழ்த்தினாள்.


காளிதேவியும் ரக்தபீஜர்களை
வாரி வாரி விழுங்கிவிட்டாள்
ரக்தபீஜனும் பட்டவுடன் பொல்லா
நிசும்பனும் பார்த்துக் கோபத்துடன்
ஸம்ஹரிப்பேன் இவளையென்று சொல்லி
சபதம் செய்து தமையன் முன்னே
தேவியுடன் எதிர்த்து நிசும்பனும்
தோற்காமலே யுத்தம் செய்து நின்றான்
ஆயிரமாயிரம் அம்பு தொடுத்தவன்
அஞ்சாமலே யுத்தம் பண்ணலுற்றான்
நேரே யுத்தம் பண்ணி லீலாவிநோதமாய்
நிசும்பனக் கொன்றாள் ஸ்ரீதேவியும்
தம்பியும் பட்டதைக் கேட்டுச் சும்பாஸுரன்
சங்கையில்லாத கோபத்துடன்

அம்பிகையெதிரில் வந்து சும்பாஸுரன்
ஆங்காரத்துடன் ஏது சொல்வான்

யுத்தம் பண்ணத் தெரிந்தவளே எங்கள்
இத்தனை பேரையும் ஏய்த்தாயேடி நீயும்
யாருமில்லாதே யிருந்தாயேடி நீயும்
ஏழுபேருனிப்போ நின்றாயடி.
சதிகாரியடி நீயுமிப்போ என்னை
சற்பனை செய்யவே வந்தாயடி
வஞ்சித்தாயடி நீயுமென்னை யிப்போ
வாரத்தைகள் இரண்டு சொன்னாயடி.
ஒருத்தியாக இருந்து கொண்டன்றோ நீ
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாய்
அத்தனைபேர்களைச் சேர்த்துக்கொண்டு இப்போ
அதட்டுகிறாயடி நீயுமென்னை

சும்பன் வார்த்தையைக் கேட்டு ஸகிகளே
இங்கே வாருங்கள் என்றழைத்து
வாரியணைத்தாள் ஸகிகள் எல்லோரையும்
மாரோடு மறைத்து ஐக்கியமானாள்
இரண்டாம்பேரிங்கில்லை காளியுடன் நீ
எதிர்த்து யுத்தமும் பண்ணுயென்ரால்
அம்மன் செயலையும் வார்த்தையையும் கேட்டு
அ ம்புபட்டாப்போலுந்தானுருகி,
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தோற்காமலே யுத்தம் பண்ணலுற்றார்

அடித்த பந்து கிளம்பினாற்போலவன்
ஆகாயத்தினிலே கிளம்பி,

ஒருவருக்கொருவர் சளையாமல் அங்கு
ஓடோடி யுத்தமும் பண்ணினார்கள்
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தொந்தயுத்தமும் பண்ணினார்கள்
தேவர்களெல்லாம் பயத்துடனே மஹா

தேவியை ஸ்துதித்துக்கொண்டிருந்தார்கள்
எத்தனை பொழுதாக யுத்தம் பண்ணுவோம்
என்று காளியும் கோபத்துடன்
சும்பாஸுரனை வதைத்தாள் காளியும்
துர்க்காதேவி என்றவம்மனை அழைத்தாள்
துர்க்காதேவியம்மன் அஸுரனை வதைக்கத்
தேவர்கள் புஷ்பமழை சொரிந்தார்.


அடுத்து ஸ்ரீலலிதையின் உதயம்.


Durga.jpeg

நவராத்திரியின் ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். இன்றைய நிவேதனம் பால் சாதமும், கடலைச்சுண்டலும் செய்யலாம்.


நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”


என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம்.


மோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது.


முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே
முதலாவது அந்த அவதாரம்
பின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம்
பின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம்
.

என்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை.


“லலிதாதேவியுடைய மஹிமை தன்னிலே
லக்ஷங்கோடியுள்ளதில் லேசஞ் சொல்வோம்,
கேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம்
கிட்டும் நிச்சயம் ஸந்தேஹமில்லை
பூர்வத்தில் தக்ஷனுடைய கன்னிகையாக்கும்
பூர்வாவதாரம் பரமேச்வரிக்கு
சாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத்
தாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம்


இதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம். எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான்.


மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா
மனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம்
சாம்பமூர்த்தியப்போ அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன்
சாம்பசிவனுடைய அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் புருஷன் ஜீவனோடெழுந்தான்
விச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்
விருப்பத்துடனே வளர்த்த பின்பு
வேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன்
ஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம்


தவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை.


“பண்டாஸுரனுக்குப் பலநாளைக்குப் பின்பு
கெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப்
பிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப்
பிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில்
காவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே
கட்டளையிட்டான் தேவர்களை;
துஷ்டன் கையிலகப்பட்டு விழிக்கிறார்கள்
வில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம்


தங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார்
தாருகாஸுரனை வதைக்கவென்றே
சங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த்
தானே வலையில் விழும்புலியைப் போல
ஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால்
சத்துருவாகினான் பண்டாஸுரன்
வம்பன் பண்டாஸுரனை வதைப்பதற்கு
மனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம்


மஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர்.


தேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்
செய்கிறார் தேவர்கள் உக்கிரதபஸை
ஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம்
இப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள்
ஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும்
அதிகடினமான தபஸிருந்தார்
பகவதி ஈச்வரியாள் இதுவரைக்கும்
பிரத்யக்ஷமாகவில்லை –சோபனம் சோபனம்


தங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம்.


கால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள்
கழுத்துடன் குதிக்க நிச்சயித்தார்கள்
மின்னல்மலை போல அக்னி குண்டத்தில்
மின்னிக்கொண்டொரு காந்தியுண்டாயிற்று
ஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார்
அதற்குள்ளே ஸ்ரீசக்ரரதத்தைக் கண்டார்.
அழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா
அம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம்


--Geetha Sambasivam 09:06, 3 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2011, 09:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,819 முறைகள் அணுகப்பட்டது.