சேப்பங்கிழங்கு சமையல்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சேப்பங்கிழங்கு இலைக் கறி:

நல்ல சுத்தமான சேம்புச் செடியின் இலைகளைப் பறித்துச் சுத்தம் செய்து கொள்ளவும். கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் தடவி வைக்கவும்.

துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம் கழுவி ஊற வைக்கவும்.
மிளகாய் வற்றல் ஆறு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் ஒரு துண்டு.

ஊறிய பருப்பை உப்பு, பெருங்காயம் சேர்த்து மிளகாய் வற்றலோடு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை சேம்பு இலையில் நல்ல கனமாக ஒரு இஞ்ச் இருக்கும்படி தடவவும். இலையை அப்படியே சுருட்டவும். இம்மாதிரி எல்லா இலைகளிலும் பருப்பு விழுதைத் தடவிச் சுருட்டி இட்லித்தட்டில் வேக வைக்கவும். நன்கு வெந்த இலைகளைத் துண்டமாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்து நறுக்கிய துண்டங்களைப் போட்டுப் பொரிக்கவும். அல்லது கடாயில் கொஞ்சமாக எண்ணெய் வைத்துக் கடுகு தாளித்துக்கொண்டு நறுக்கிய துண்டங்களைப் போட்டு மொறுமொறுவென வரும்வரை வதக்கவும்.


சேப்பங்கிழங்கு கூட்டு:  


சேப்பங்கிழங்கு அரைகிலோ, கெட்டியான புளித்த மோர் ஒரு கிண்ணம், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மி.வத்தல், கடலைப்பருப்பு, தனியா, பெருங்காயம், வெந்தயம், தேங்காய் துருவல். தாளிக்கத் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், கடுகு, கருகப்பிலை.

 

சேப்பங்கிழங்கை நன்கு வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுக்கப் பட்ட பொருட்களைக் கொஞ்ச நேரம் ஊறவைத்துவிட்டு நன்கு அரைத்துப் புளித்த மோரில் மஞ்சள் தூள், மோருக்கு மட்டும் தேவையான உப்பு, பெருங்காயத் தூளோடு சேர்க்கவும். வெந்த சேப்பங்கிழங்கைப் போட்டு கிழங்குக்குத் தேவையான உப்பைப் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துக் கொஞ்சம் கெட்டியானதும் நல்ல பச்சைத்தேங்காய்த் துருவலைத் தேங்காய் எண்ணெயில் கடுகோடு வறுத்துப் போடவும். கருகப்பிலை தூவவும்.

 

 சேப்பங்கிழங்கு பக்கோடா:


அரை கிலோ சேப்பங்கிழங்கு வேக வைத்துத் தோலுரிக்கவும்.


கடலைமாவு இரண்டு கிண்ணம்,

அரிசி மாவு ஒரு கிண்ணம்

மைதா அல்லது உளுத்தமாவு அரை கிண்ணம்,

மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு, கரைக்க நீர்.

பொரிக்க எண்ணெய்


எல்லா மாவையும் ஒன்றாய்க் கலந்து உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெயைச் சூடு செய்யவும். வெந்த சேப்பங்கிழங்குகளை ஒவ்வொன்றாகக் கலந்த மாவில் போட்டு முக்கி எண்ணெயில் போட்டுப்பொரிக்கவும். இதை அப்படியே மாலை நேர டிபனாகவும் சாப்பிடலாம். அல்லது சாம்பாரில் போட்டும் சாப்பிடலாம். சாம்பாரில் போடுவதென்றால் சாப்பிடுவதற்கு முன்னால் போடவேண்டும். இல்லை எனில் ஊறிக் கரைந்து விடும்.



--Geetha Sambasivam 20:17, 15 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2011, 20:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,155 முறைகள் அணுகப்பட்டது.